|
|
|
|
|
 |
|
இதயவீணையின்
இன்றைய முக்கிய செய்திகள்!! |
|
|
வணக்கம்!
இதயவீணையின் செய்திகள்!! 08.02.2010
செய்தியாசிரியர்: ஷோபா
வாசித்தளிப்பவர்: கௌரி
முதலில் தலைப்புச் செய்திகள்!!!
.ரஷ்யாவின் நட்புறவு பல்கலைக்கழகம்
தமக்கு வழங்கிய டொக்டர் பட்டம் இலங்கை
மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி
என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தெரிவித்துள்ளார்.
.வடக்கில் மீள்குடியேற்றப்படும்
மக்களுக்காக மேலும் உதவிகளை
வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது.
.நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு
தீர்வு காண்பதற்காக அரசியலமைப்பில்
திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென
அரசியலமைப்பு விவகார அமைச்சர்
டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.
.வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்களின்
மீள்குடியேற்றப் பணிகள் இன்னும் சில
தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்
தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் நட்புறவு பல்கலைக்கழகம்
வழங்கிய டொக்டர் பட்டம் தமக்கு
கிடைத்த தனிப்பட்ட வெற்றி அல்ல என்றும்
அது இலங்கை மக்கள் அனைவருக்கும்
கிடைத்த பொதுவான வெற்றி என ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் நட்புறவு பல்கலைக்கழகம்
ஜனாதிபதிக்கு கௌரவ டொக்டர் பட்டம்
வழங்கி கௌரவித்தமையைத் தொடர்ந்து
உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
இந்தப் பட்டம் வழங்கப்படுவதற்கு உலக
சமாதானத்திற்குத் தாம் ஆற்றிய
பங்களிப்பே காரணம் என பட்டம் வழங்கல்
தொடர்பான குறிப்பில்
கூறப்பட்டுள்ளதாகவும் முழு உலகிலும்
கொடூரமான புலிகள் பயங்கரவாத சவால்
மக்களின் அமைதி சௌபாக்கியம் மட்டுமன்றி
உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக
இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை
தீர்ப்பதற்குத் தாம் மேற்கொண்ட
முயற்சிகள் பயங்கரவாதிகளால்
நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து யுத்த
நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலை
ஏற்பட்டதாகவும் அப்போது பணயக்
கைதிகளாகப் பயங்கரவாதிகளின்
பிடியிலிருந்த பொதுமக்களைப்
பாதுகாக்கும் பொருட்டு மனிதாபிமான
நடவடிக்கையில் ஈடுபட்டதாகத்
தெரிவித்துள்ள ஜனாதிபதி இதனையடுத்து
தாம் மக்கள் ஆணையை மீண்டும் கேட்டு
நியாயமான அமைதியான தேர்தல் மூலம் சில
தினங்களுக்கு முன் தெரிவாகிய தாம்
இன்று இலங்கையின் 6வது ஜனாதிபதியாக
இங்கு வருகை தந்துள்ளதாகத்
தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில்
எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட
வன்முறைகளுக்கு மத்தியில் சமாதானம்
ஜனநாயகம் மற்றும் முன்னேற்றம் கருதி
மக்கள் 58சதவீத அதிக வாக்குகளால் தம்மை
மீண்டும் தெரிவு செய்துள்ளதாகவும்
கடந்த நான்கு வருடங்களில் அபிவிருத்தி
என்னும் ரீதியில் இதுவரை இருந்ததற்கு
மேலான இடத்திற்கு எமது நாட்டைக் கொண்டு
வருவதற்கு முடிந்துள்ளதாகத் தெரிவித்த
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உலகளாவிய
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும்
எமது பொருளாதார நிலை கடந்த நான்கு
வருடங்களில் மேலும்
வலுவடைந்துள்ளதாகவும் வியாபார உலகில்
இப்போது கட்டியெழுப்பியுள்ள தமது
நம்பிக்கையானது உயர்ந்த மட்டத்தில்
உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.சக்தி
மனித வளம் வங்கி நடவடிக்கைகள் ஆகியவை
தொடர்பான எதிர்காலத் திட்டங்கள்
ஏற்கனவே
பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த
நிலையில் வறுமை பிரச்சினையும் குறைந்து
வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சர்வதேச ரீதியில் இலங்கை
வளர்ந்து வரும் நடுத்தர வருமானத்தை
பெறும் சந்தையை கொண்டுள்ளதாக
கணிக்கப்படுவதாகவும் இந்த காரணங்களால்
உலக நாடுகளின் பல்வேறு முதலீடுகளில்
இலங்கை பிரபல சந்தை கேந்திரமாக மாறி
வருவதுடன் மக்களின் சமூக கலாசாரம்
மற்றும் அனைத்து துறைகளிலும் எமது
நிலையில் முன்னேற்றத்தை காண முடிவதாக
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும்
தெரிவித்துள்ளார்.
-------------
வடக்கில் மீள்குடியேற்றப்படும்
மக்களுக்காக மேலும் உதவிகளை
வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது.
இதற்கிணங்க மீள்குடியேற்றப்படும்
மக்களின் வீடுகளை அமைப்பதற்கு உதவும்
வகையில் 8லட்சம் சீமெந்து மூடைகளை
வழங்குவதற்கு இந்தியா இணக்கம்
தெரிவித்துள்ளதுடன் இதற்கென
300மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கான
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
தெரிவித்துள்ளது.
வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின்
கீழ் இன்னும் சில தினங்களில் இந்த
சீமெந்துத் தொகை
வழங்கப்படவுள்ளதாகவும்
வவுனியா,கிளிநொச்சி,மன்னார்,முல்லைத்தீவுப்
பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும்
புனரமைப்புத் திட்டங்களுக்கு இவை
பயன்படுத்தப்படவுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-------------
கண்டி மாவட்டத்தில் தற்காலிகமாக
மூடப்பட்டிருந்த 53பாடசாலைகளில்
14பாடசாலைகள் இன்று முதல் மீண்டும்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
62வது சுதந்திர தின பிரதான வைபவம்
மற்றும் பல்லேகல தேசத்திற்கு மகுடம்
கண்காட்சி என்பவற்றிற்குப் பாதுகாப்பு
வழங்கிய பாதுகாப்புப் படையினர் தங்கும்
பொருட்டு இந்தப் பாடசாலைகள்
மூடப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்பு
பிரிவினர் பாடசாலைகள் சிலவற்றில்
இருந்து வெளியேறியதினைத் தொடர்ர்ந்து
இன்று முதல் 14பாடசாலைகள் மீண்டும்
திறக்கப்பட்டுள்ளதுடன் தற்போது
மூடப்பட்டிருக்கும் ஏனைய பாடசாலைகள்
எதிர்வரும் 15ம் திகதி முதல் மீண்டும்
ஆரம்பிக்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-----------
கண்டி பல்லேகலயில் தற்போது நடைபெற்று
வரும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி
எதிர்வரும் 12ம் திகதி வரை
நடைபெறவுள்ளதாக மத்திய மாகாண
முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க
அறிவித்துள்ளார்.
இந்தக் கண்காட்சியை எதிர்வரும் 10ம்
திகதி வரை மட்டும் நடாத்துவதற்கு
முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த
போதிலும் அந்தக் கால எல்லை
நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண
முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க
அறிவித்துள்ளமைக்கு இணங்க இக்கண்காட்சி
எதிர்வரும் 12ம் திகதி வரை
இடம்பெறவுள்ளது.
----------
நாடு எதிர்நோக்கும் அநேகமான
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக
அரசியலமைப்பில் திருத்தம்
மேற்கொள்ளப்பட வேண்டுமென அரசியலமைப்பு
அலுவல்கள் அமைச்சர் டியூ.குணசேகர
தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பில் திருத்தம்
மேற்கொள்ளப்படும் வரை தேர்தல்
வன்முறைகளை நிறுத்த முடியாது எனவும்
நாடு எதிர்கொள்ளும் அநேகமான
பிரச்சினைகள் அரசியலமைப்பு காரணமாகவே
ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது
நடைமுறையிலுள்ள விருப்புவாக்கு தேர்தல்
முறைமையில் மாற்றம் ஏற்படுத்தும் வரை
தேர்தல் வன்முறைகள் கட்சி தாவுதல்
போன்றவற்றைத் தவிர்க்க முடியாது எனத்
தெரிவித்துள்ள அரசியலமைப்பு அலுவல்கள்
அமைச்சர் டியூ.குணசேகர பல்வேறு அரசியல்
கட்சிகளின் கீழ் செயற்பட்டதால்
கிடைத்துள்ள அனுபவத்திற்கமைய புதிய
அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டு
வருவதற்காக உரிய காலம்
வந்துள்ளதாகவும் அடுத்த
பாராளுமன்றத்தில் இது தொடர்பாக
முக்கிய கவனம் செலுத்த வேண்டுமெனக்
கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய பாராளுமன்றம் தெரிவு
செய்யப்பட்ட பின்னர் அரசியலமைப்புத்
திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்
எனவும்لل காலம் காலம் தாமதிக்கும்
பட்சத்தில் இந்தத் தேவையினை
நிறைவேற்றிக் கொள்வதில் மீண்டும்
தாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்
அதிகமுள்ளதாகவும் அமைச்சர்
டியூ.குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
------------------
வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்களின்
மீள்குடியேற்றப் பணிகள் இன்னும் சில
தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி
பி.எம்.எஸ்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 15ம் திகதி
ஆரம்பிக்கப்படவுள்ள இந்த
மீள்குடியேற்றத்தின் போது வவுனியா
வடக்கில் மீள்குடியேற்றம்
செய்யப்படுபவர்களுக்கு 8ஆயிரத்து
900வீடுகள் அமைத்துக்
கொடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ள
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்
மீள்குடியேற்றப் பணிகள்
துரிதப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை
எதிர்வரும் 15ம் திகதி முதல் வவுனியா
வடக்கில் மீள்குடியேற்றப் பணிகள்
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத்
தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட
யோசனைகளுக்கு அமைவாக ஐரோப்பிய
ஆணைக்குழு 3.900 வீடுகளையும் உலக வங்கி
5.000 வீடுகளையும்
அமைத்துக்;கொடுப்பதற்கு
முன்வந்துள்ளதாகவும் வவுனியா நிவாரணக்
கிராமங்களில் உள்ள சுமார் 75ஆயிரம்
பேரும்لل நண்பர்கள் மற்றும்
உறவினர்களின் வீடுகளில் உள்ள சுமார்
20ஆயிரம் பேருமே மீள்குடியேற்றம்
செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ள
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்
நிலக்கண்ணிவெடி அகற்றலில் ஏற்பட்ட
தாமதத்தினால் சிறிய இடைவெளிக்குப்
பின்னர் மீள்குடியேற்றப் பணிகள் கடந்த
2ம் திகதி முதல் மீளவும்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி
முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில்
கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில்
கட்டம் கட்டமாக மீள்குடியேற்றங்கள்
மேற்கொள்ளப்பட்டு வருவதாகத்
தெரிவித்துள்ளார்.
கடந்த 2ம் திகதி பூநகரியில்
மீள்குடியேற்றம் செய்யும் பொருட்டு
1.000பேர் அனுப்பி வைக்கப்பட்ட
அதேவேளை கிளிநொச்சி மாவட்டம் கரச்சி
பிரதேசத்தில் உறவினர்கள் மற்றும்
நண்பர்கள் வீட்டில் தங்கியிருக்கும்
300குடும்பங்கள்
மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாகவும்
வவுனியா அரசாங்க அதிபர் மேலும்
தெரிவித்துள்ளார்.
------------
ஆய்வுகூட வசதி இல்லாத அரசாங்க
வைத்தியசாலைகளுக்குச் சிகிச்சை
பெற்றுக் கொள்ளும் பொருட்டு வருகை
தரும் நோயாளர்களின் சிறுநீர் மற்றும்
இரத்த மாதிரிகளை உடனுக்குடன் தனியார்
ஆய்வு கூடங்கள் ஊடாக பரிசோதனை
செய்வதற்குச் சுகாதாரப் பராமரிப்பு
போஷாக்குத்துறை அமைச்சு அனுமதி
வழங்கியுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பொருட்டு ஆய்வுகூட வசதியைக்
கொண்டிராத வைத்தியசாலைகளுக்கு
நிதியொதுக்கீடுகளை வழங்புவதற்குச்
சுகாதார அமைச்சுத்
தீர்மானித்துள்ளதாகவும் சுகாதாரப்
பராமரிப்பு போஷாக்குத்துறை அமைச்சர்
நிமல் சிறிபால டி சில்வாவின்
ஆலோசனைக்கு அமைய இத்திட்டம்
நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும்
தற்போது ஆய்வுகூட வசதி இல்லாத
வைத்தியசாலைகளுக்குச் சிகிச்சை
பெற்றுக் கொள்ளும் பொருட்டு வருகை
தரும் நோயாளர்கள் ஆய்வுகூட வசதியைக்
கொண்டுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி
வைக்கப்படுவதுடன் நோயாளரிடம் இருந்து
பெறப்படும் இரத்தம் மற்றும் சிறுநீர்
மாதிரிகள் ஆய்வுகூட வசதியைக்
கொண்டிருக்கும் வைத்தியசாலைக்கு
அனுப்பப்பட்டு அறிக்கைகள்
பெறப்படுவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் மூலம்
நோயாளர்களுக்குச் சிறந்த சுகாதார சேவை
கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படுவதாகவும்
இந்தத் தாமதங்களை இல்லாமல் செய்யும்
பொருட்டே அரசாங்க வைத்தியசாலைகளில்
நோயாளர்களின் சிறுநீர் மற்றும் இரத்த
மாதிரிகளைத் தனியார் ஆய்வுகூடங்களின்
ஊடாக உடனுக்குடன் பரிசோதனைகளை
மேற்கொள்வதற்குச் சுகாதார அமைச்சு
அனுமதி வழங்கியுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
---------------
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளிற்காக
சென்று நாடு திரும்பியவர்கள் தொடர்பான
ஆய்வு ஒன்றினை இலங்கை வெளிநாட்டு வேலை
வாய்ப்பு பணியகம் ஆரம்பித்துள்ளதாக
அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவல்கள் விமான
நிலையத்தின் ஊடாகப் பெற்றுக்
கொள்ளப்படுவதுடன் தகவல்களைப்
பெறுவதற்காகப் பரவலான விளம்பரங்கள்
மேற்கொள்ளப்படவுள்ளதாகவும்
வெளிநாடுகளுக்குச் சென்று உழைப்பவர்கள்
பலர் சொந்த நாட்டுக்கு திரும்பியதும்
குறித்த இலக்கின்றி தமது பணத்தை
வீண்விரயம் செய்வதினால் அவர்கள்
உழைக்கும் பணத்தைச் சிறப்பான முறையில்
எவ்வாறு முகாமைத்துவம் செய்யலாம்
எந்தத் துறைகளில் அதனை முதலீடு
செய்வதின் மூலம் அதனை பல மடங்குகளாகப்
பெருக்க முடியும் என்பன போன்ற
ஆலோசனைகள் பெற்றுக்
கொடுக்கப்படவுள்ளதாகத்
தெரிவித்துள்ளார்.
நாடு திரும்பியவர்கள் மீண்டும்
வெளிநாட்டிற்குச் செல்வதற்கு
விரும்பினால் அவர்கள் எவ்வாறான
வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது
குறித்த அறிவுரைகளும் இதன் மூலம்
வழங்கப்படவுள்ளதினால் வெளிநாடு சென்று
திரும்பியவர்களுக்கு இந்த ஆய்வு
பேருதவியாக இருக்குமென
எதிர்பார்க்கப்படுவதாகவும் வெளிநாட்டு
வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர்
கிங்ஸ்லி ரணவக்க மேலும்
தெரிவித்துள்ளார்.
----------
பங்களாதேஷில் நடைபெற்று வரும் 11வது
தெற்காசிய விளையாட்டு விழாவில் 10வது
நாளான நேற்றைய தினம் இலங்கை 4 தங்கப்
பதக்கங்களை வென்றுள்ளது.
இதன்மூலம் இலங்கை இந்த விளையாட்டு
விழாவில் இதுவரை 13 தங்கப் பதக்கங்களை
வென்றுள்ளதுடன் 26 வெள்ளிப்
பதக்கங்களையும் 36 வெண்கலப்
பதக்கங்களையும் வென்று தெற்காசிய
விளையாட்டு விழாவில் பங்கு பெறும்
நாடுகளில் நான்காவது இடத்திற்கு
முன்னேறியுள்ளதும்
குறிப்பிடத்தக்கதாகும். |
|
|
|
|
|