|
வடபகுதியிலிருந்து வெளியேறி மேல்மாகாணத்தில் வதியும் மக்களை மதிப்பிடும் நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் திணைக்களம் இன்றையதினம் மேற்கொண்டுள்ள நிலையில் அந்நடவடிக்கைகளில் ஏற்படும் சிரமங்களை தவிர்த்து துரிதமாகவும் இலகுவாகவும் பணிகளை மேற்கொள்வதை உறுதிசெய்ய வடமாகாண விஷேட செயலணித் தலைவரும் ஈபிடிபி செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரடி விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
இன்று முற்பகல் பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில் வெள்ளவத்தை சென் கிளையர்ஸ் மகளிர் பாடசாலை ஆகிய இடங்களில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வடபகுதி மக்களை மதிப்பிடும் நடவடிக்கைகளை நேரடியாகப்பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பதிவு நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டதுடன் வடபகுதி பொதுமக்களுடனும் பொலிஸ் அதிகாரிகளுடனும் நேரடியாகவே உரையாடினார்.

அங்கு திரண்டிருந்த பொதுமக்களுடன் உரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நீண்டகால பாதுகாப்பினை கருத்திற்கொண்டு சில சிரமங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பதுடன் தற்போது மேல் மாகாணத்தில் பொலிஸ் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் வடபகுதி மக்கள் மீதான மதிப்பீட்டு நடவடிக்கையானது தவிர்க்கமுடியாத ஓர் அவசியமான நடவடிக்கை. இந்நடவடிக்கைகளில் அசௌகரியம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆயினும் நீண்டகால பாதுகாப்பு நடவடிக்கைகளின் நிமித்தம் தற்காலிகமான அசௌகரிய செயற்பாடுகள் பொறுத்துக்கொள்ளப்பட வேண்டியவை என்பதையும் வலிறுத்தினார்.
ஏற்கனவே இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொலிஸ் மா அதிபருடனும் பொலிஸ் திணைக்களத்தின் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதுடன் பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு மேற்கொள்ளப்படவேண்டிய தேவையான நடவடிக்கைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொடபாக அனைத்து பொது மக்களும் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பது நெரிசலை ஏற்படுத்தும் சிரமமான விடயம் என்பதுடன் வழமையான பொலிஸ் நிலைய நடவடிக்கைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் பொதுவான இடங்களை தெரிவு செய்து அங்கு வைத்து மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ளவேண்டுமென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட பொலிஸ் மா அதிபர் அதற்குரிய ஏற்பாடுகளை இன்றையதினம் மேற்கொண்டுள்ளமை விஷேட அம்மாகும்.
மேலும் இன்றைய தினம் காலை 8 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிரை மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் பொலிஸ் மதிப்பீட்டுப் பணிகளில் நோயாளர்கள் வயோதிபர்கள் மற்றும் விஷேட தேவையுடையோர் தொடர்பில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம் நோயாளர்கள் வயோதிபர்கள் மற்றும் விஷேட தேவையுடையோர் தொடர்பில் விஷேட கவனமெடுத்து மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்துடன் இம்மதிப்பீட்டுப்பணிகளில் மக்களின் நண்பர்களாகவே பொலிஸார் செயற்படுவார்கள் என பொலிஸ் மா அதிபர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு உறுதியளித்ததன் பிரகாரம் தாம் சிரமங்களை எதிநோக்காமலும் நேரகால தாமதமின்றியும் உடனுக்குடன் பதிவுகளை மேற்கொண்டு வீடு திரும்பக்கூடியதாக இருந்தாக பொதுமக்கள் பலரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் நேரடியாகவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது |