|
தேசிய மட்ட உடற்பயிற்சி
போட்டியில் முதலாமிடம் பெற்ற யாழ்
பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா அவர்கள் பாராட்டி பரிசில்கள்
வழங்கி கௌரவிப்பு.
வெற்றி பெற்றவர்களை நாம்
உற்சாகப்படுத்துகின்ற அதேவேளை வெற்றி
பெறாதவர்களை வெற்றியின் பால் இட்டுச்
செல்வதற்கான வசதி வாய்ப்புக்களை
ஏற்படுத்தி ஊக்கப்படுத்தி வருகின்றோம்
என சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை
அமைச்சரும் வட மாகாணத்திற்கான விஷேட
செயற்பாட்டுக் குழுவின் தலைவருமான
டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
தெரிவித்துள்ளார்.
தேசிய மட்டத்திலான பாடசாலைக்கிடையிலான
விளையாட்டுப் போட்டிகளில் கலந்து
கொண்டு, 17 வயதிற்குட்பட்ட
ஆண்களுக்கான உடற்பயிற்சி போட்டியில்
முதலாமிடம் பெற்றுக் கொண்ட யாழ்,
ஊர்காவற்துறை சென்ட் அன்டனிஸ்
கல்லூரியின் மாணவர்களை இன்றைய தினம்
(8.09.2008) கொழும்பிலுள்ள அமைச்சு
அலுவலகத்தில் வைத்துச் சந்தித்து தனது
பாராட்டுதல்களைத் தெரிவித்த போதே அவர்
மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,
தான் பள்ளி மாணவனாக வளர்ந்த சூழ்நிலை
வேறு என்றும் தற்போது தான்
சந்திக்கின்ற இந்த மாணவர்கள் யுத்த
சூழ்நிலைக்குள் வாழ்ந்து வந்துள்ளதை
தான் உணர்ந்து கொள்வதாகக்
குறிப்பிட்டதுடன், இவை எல்லாம்
சமுதாயத்தின் மீது அக்கறையில்லாத
சுயலாபம் கருதிய ஒரு சிலரால்
தோற்றுவிக்கப்பட்ட சூழ்நிலை என்று
விளக்கியதுடன் மனிதர்களால்
தோற்றுவிக்கப்பட்டுள்ள இவ்வாறான
சூழ்நிலையை மனிதர்களால் மாற்ற முடியும்
என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
எமது சமுதாயத்தின் சிறந்த
பிரதிநிதிகளாக வளர வேண்டிய மாணவர்கள்
சமுதாயத்திற்கும், சூழலுக்கும் ஆபத்து
விளைவிப்பதைத் தவிர்த்து நல்ல முறையில்
வளர்ந்து எமது சமுதாயத்தை விடிவை
நோக்கி முன்னகர்த்த முன்வர வேண்டும்
என்று கேட்டுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா அவர்கள் ''துஷ்டனைக் கண்டால்
தூர விலகு'' என்பதற்கு ஒப்ப வாழ்ந்தால்
பெரும்பாலான துன்பங்களை நாம் இயல்பாகவே
தவிர்த்துக் கொள்ள இயலும் என்றும்
தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சுமார் 25 வருடங்களுக்குப் பின்
தேசிய மட்டத்திலான பாடசாலைகளுக்கு
இடையிலான 17 வயதிற்குட்பட்ட
ஆண்களுக்கான உடற்பயிற்சி போட்டியில்
முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்ட
ஊர்காவற்துறை சென்ட் அன்ரனிஸ் கல்லூரி
மாணவர்களைப் பாராட்டிய அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா அவர்கள் அம் மாணவர்களுக்கும்
பயிற்றுவிப்பாளருக்கும் தனிப்பட்ட
ரீதியில் பரிசில்களை வழங்கியதுடன்
அக்கல்லூரியின் வசதிகருதி மல்டி மீடியா
ப்ரொஜக்டர் ஒன்றை வழங்குவதற்கும்
ஏற்பாடு செய்துள்ளமை
குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி வைபவத்தில் கல்லூரி அதிபர்,
ஆசிரியர்கள், அமைச்சு அதிகாரிகள்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
|
|
|
யாழ் பாடசாலை மாணவர்களது புதிய
கண்டுபிடிப்புக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
பார்வையிட்டார்.
புதிய
கண்டுபிடிப்புக்கள் நாட்டினதும் சமூகத்தினதும்
அபிவிருத்திக்கு மட்டுமே வழி திறக்க வேண்டுமே
அன்றி அவை எமது சமூகத்தினதோ, நாட்டினதோ
அழிவுக்கு வழிவகுக்கக் கூடாதென சமூக சேவைகள்
மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (8.09.2008) யாழ் மாவட்ட பாடசாலை
மாணவ, மாணவியர்களது புதிய கண்டுபிடிப்புக்கள்
சிலவற்றை சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை
அமைச்சில் வைத்து பார்வையிட்ட போதே அமைச்சர்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது சமூகத்தை அழிவு
நிலை நோக்கி நகர்த்திச் செல்பவர்கள் யாழ்
மாவட்டத்தை விட்டு இன்று
அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அந்த தீய
சக்திகள் தொடர்ந்து யாழ் மாவட்டத்தில்
இருந்திருந்தால் இந்த மாணவர்களது பல்வேறு
வகையிலான திறமைகள் அனைத்தும் மனித அழிவுக்கு
மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கும் என்றும்
தெரிவித்ததுடன் அவ்வாறான தீய சக்திகள்
இல்லாததொரு சூழ்நிலையில் இன்று இம்மாணவர்களது
பல்வேறு திறமைகள் ஆக்கத்தை நோக்கியதாக
வெளிப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டினார்.
இம்மாணவர்களது திறமைகள் அனைத்தும் புதிய
கண்டுபிடிப்புக்களாக செயலுருவம்
பெற்றிருப்பதைக் கண்டு தான் பெரும் மகிழ்ச்சி
அடைவதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அவர்கள், இவர்களது திறமைகளை ஊக்குவிப்பதற்கு
தான் பல்வேறு வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்த
நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தமை
குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி நிகழ்வில், யாழ் சுண்டுக்குளி மகளிர்
கல்லூரி மாணவிகளான சோபிதா கமலராஜாவின்,
கடல்நீரை எளிய முறையில் நன்னீராக்கல், ரேணுகா
அமிர்தலிங்கத்தின் வேப்பிலை, துளசி இலை மூலமான
உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காத
நுளம்புத்திரி, மற்றும் யாழ் மத்திய கல்லூரி
மாணவர்களான கடோற்கசனின், இலகு முறையில் நீர்
இறைக்கும் பம்பி, உதயகுமார் டயந்தனின் தேங்காய்
துருவும் கருவி மூலம் இலகுவாக மரக்கறி
நறுக்குதல், ராசேந்திரம் ருபேந்திரனின் இருட்டு
வேளைகளில் வாசிக்க உதவும் மூக்குக் கண்ணாடி,
அம்புஜனின், பிற்பொக்கட் அடித்தால் அபாய ஒலி
எழுப்பும் பேர்ஸ், ராஜரட்ணம் விதூஷனின் இலகு
வழியில் மரக்கறி நறுக்கும் கருவி, நல்லநாதன்
பிரசாந்தனின் இருளில் நடக்க உதவும் சப்பாத்து,
இருளில் சுத்தப்படுத்த உதவும் தும்புத்தடி
மற்றும் இருளில் நடக்க உதவும் கைதடி,
சுரேஸ்குமார் தர்ஷனின் பாதுகாப்பான எளிய
முறையிலான எலிப்பொறி, எஸ். பிரதாபனின் பெருமளவு
மரக்கறிகளை மின்சாரத்திலும் கையினாலும்
நறுக்கும் இலகுமுறை உபகரணம் போன்ற புதிய
கண்டுபிடிப்புக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அவர்கள் பார்வையிட்டார்.
இதன் போது மேற்படி பாடசாலை மாணவர்களது
பெற்றோர்கள் பயிற்சியாளர்கள் மற்றும்
ஆசிரியர்களும் கலந்து கொண்டமை
குறிப்பிடத்தக்கதாகும்.
|