வரலாற்றுச்
சிறப்பு மிக்கதுமான நல்லூர்
கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
இரதோற்க்ஷவம் இன்று.
வரலாற்றுச் சிறப்பு
மிக்கதுமான நல்லூர் கந்தசுவாமி
ஆலயத்தின் வருடாந்த
இரதோற்க்ஷவம் இன்று
வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு
நடைபெறவுள்ளது. 24 ஆம் திருவிழாவான
இன்று அதிகாலை 5.30 மணிக்கு
ஆரம்பமாகும் வசந்த மண்டபப்
பூஜைகளையடுத்து, காலை 6.15 மணிக்கு ஆறு
முருகப் பெருமான் வள்ளி தெய்வானை
சமேதராய் நேரில் எழுந்தருளி, காலை 7
மணிக்கு இரதத்தில் வீதியுலா வருவார்.
25 ஆம் திருவிழாவான நாளை சனிக்கிழமை
அதிகாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும்.
விசேட பூஜைகள், ஆராதனைகளையடுத்து
ஆறுமுகப் பெருமான், ஆலய உள்
வீதியிலிருக்கும் தீர்த்தக்கேணியில்
தீர்த்தமாடுவார். அதைத் தொடர்ந்து
கொடியிறக்கம் நடைபெறும்.
26 ஆம் திருவிழாவான நாளை மறுதினம்
ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்குப்
பூங்காவனத் திருவிழாவும், செப்டெம்பர்
1 ஆம் திகதி வைரவர் சாந்தியும்
இடம்பெறவுள்ளன.
இன்றைய இரதோற்சவத்தை முன்னிட்டு விசேட
போக்குவரத்துச் சேவைகள், குடிநீர்
மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைத்
தேவைகள் அனைத்தும் பூர்த்தி
செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபை
வட்டாரம் தெரிவித்தது.
வன்னியிலிருந்து
அகதிகள் பாதுகாப்பாக வவுனியா வருவதற்கு
விமான மூலம் துண்டுப்பிரசுரங்கள்
அரசாங்கம் அறிவிப்பு.
வன்னியில் இடம்பெயர்ந்திருப்போர்
வவுனியாவுக்கு வருவதற்கான பாதுகாப்பு
ஏற்பாடுகள் வழங்கப்படுமென அரசாங்கம்
நேற்று வியாழக்கிழமை உறுதியளித்துள்ளது.
புலிகளின் கட்டுப்பாட்டுப்
பகுதியிலுள்ள அகதிகள் அரசின்
கட்டுப்பாட்டிலுள்ள வவுனியாப்
பகுதிக்கு வருவதற்கான மார்க்கம்
தொடர்பான அறிவுறுத்தல் அடங்கிய
துண்டுப் பிரசுரங்கள் அகதிகள்
இருக்கும் இடங்களில் விமானங்கள் மூலம்
போடப்படுமென பாதுகாப்பமைச்சின்
செயலாளர் கோதாபய ராஜபக்ஷ நேற்று
வியாழக்கிழமை தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சின் மாநாட்டு
மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற
செய்தியாளர் மாநாட்டில் இதனைத்
தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின்
செயலாளர், இராணுவ ரீதியான தீர்வு
அரசாங்கத்தின் நோக்கமல்லவெனவும்
அரசியல் தீர்வே அரசின் இறுதி இலக்கு
என்றும் குறிப்பிட்டார்.
அதேசமயம், யுத்தத்தை முடிவுக்குக்
கொண்டு வருவது தொடர்பான கால வரையறையை
குறிப்பிடுவது மடமைத்தனம் என்றும் அவர்
தெரிவித்தார்.
தற்போது இடம்பெறும் மோதல்களினால்
இடம்பெயரும் மக்களுக்கு உரிய வசதிகளை
அளிக்க அரசு தயாராக இருப்பதாகவும்
வவுனியாவுக்கு வரவிரும்பும்
இடம்பெயர்ந்த மக்களுக்கு உரிய வசதிகள்
செய்துகொடுப்பதற்குரிய ஏற்பாடுகள்
முழுமையாக
மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர்
தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
எஸ்.பி.திவாரட்ணவின் தகவல்களின்
பிரகாரம் கிளிநொச்சி மாவட்டத்தில்
31,713 குடும்பங்களைச் சேர்ந்த சுமார்
1 இலட்சத்து 10 ஆயிரம் பேரும்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 15 ஆயிரம்
குடும்பங்களைச் சேர்ந்த 52,029 பேரும்
இடம்பெயர்ந்துள்ளனர்.
இதேவேளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு
மாவட்டங்களில் உணவு, மருந்து
தட்டுப்பாடு இல்லையென அத்தியாவசிய
சேவைகள் ஆணையாளர் நாயகம் திவாரட்ண
தெரிவித்துள்ளார். அத்துடன், மரங்களின்
கீழ் அகதிகள் இருப்பதையும் அவர்
நிராகரித்ததுடன், 90 சதவீதமான அகதிகள்
உறவினர்கள், நண்பர்களுடன்
இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யுத்தத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும்
இழப்புகள் அதிகரித்துவருவதையிட்டு
சர்வதேச சமூகத்தின் விசனம் அதிகரித்து
வருகின்றது. தினமும் விமானக் குண்டு
வீச்சுகள், ஷெல் வீச்சுகள்
இடம்பெற்றுவருவதால் பொதுமக்களின்
இழப்புகள் குறித்து சர்வதேச சமூகத்தின்
கவலை அதிகரித்து வருகிறது. ஆனால்,
பொதுமக்களின் இழப்புகளை தவிர்க்குமாறு
ஆயுதப் படைகளுக்கு கூறப்பட்டுள்ளதாக
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய
கூறினார். கிழக்கில் இந்த
அறிவுறுத்தலுக்கமைய
மேற்கொண்டதைப்போன்றே வன்னியிலும்
படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருவதாகவும் அதனாலேயே பொதுமக்கள்
இழப்புகள் தொடர்பான புகைப்படங்களை
புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்கள் கூட
பெற்றுக்கொள்வதற்கு கஷ்டமாக
இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் இந்திய
பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்
தண்டனை பெற்ற நளினி விடுதலை
செய்யக்கூடாது என்று மாநில அரசு
முடிவெடுத்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை
வழக்கில் தண்டனை பெற்ற நளினி மற்றும்
ஜெயகுமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரை
சிறையிலிருந்து விடுதலை செய்யக் கூடாது
என்று தமிழக அரசு சார்பில் இன்று
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்
தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக
மாநில அரசு கொள்கை அளவில் முடிவெடுத்
திருப்பதாக நீதிமன்றத்தில்
தெரிவிக்கப்பட்டது.
.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்
தண்டனை பெற்ற நளினி, தன்னை
முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக
அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை
உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
செய்திருந்தார்.
இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற
ஜெயகுமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரும்
தங்களை விடுதலை செய்ய அரசுக்கு
உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல்
செய்திருந்தார்கள்.உயர்நீதிமன்ற
நீதிபதி எஸ்.நாகமுத்து இந்த மனுக்களை
விசாரித்து வந்தார். இந்த வழக்கில்
தமிழக அரசின் சார்பில் இன்று பதில்
மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மாநில உள்துறை செயலாளர், சிறைத்துறை
கூடுதல் டிஜிபி ஆகியோர் சார்பில்
தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில்
கூறப்பட்டிருப்பதாவது:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை
பெற்றவர்களை விடுதலை செய்யக்கூடாது
என்று மாநில அரசு கொள்கை அளவில்
முடிவெடுத்துள்ளது.
ஏனெனில், குற்றவியல் நடைமுறை சட்டம்
435ன் படி சிபிஐ புலன் விசாரணை செய்த
வழக்கில் மாநில அரசு தலையிட முடியாது.
மேலும் நளினி உள்ளிட்ட 3 பேரும் தங்களை
விடுதலை செய்யக்கோரி ஆலோசனை குழு
முன்பு மனுத் தாக்கல்
செய்திருந்தார்கள்.
இந்த விண்ணப்பங்களை ஆலோசனை குழு
நிராகரித்து முடிவெடுத்துள்ளது. அந்த
குழுவில் 7 பேர் உறுப்பினர்களாக
இருக்க வேண்டும் என்ற மனுதாரரின்
கூற்று தேவையற்ற ஒன்று. மூன்று பேர்
இருந்தாலே போதுமானது.
மேலும், அவர்கள் 3 பேரையும் மனுக்களை
நிராகரித்த ஆலோசனை வாரியம், இதற்கு 3
காரணங்களை குறிப்பிட்டுள்ளது. முன்னாள்
பிரதமரை கொலை செய்தது, திட்டமிட்டு
கொடூரச் சம்பவத்தை நிகழ்த்தியது,
விடுதலைப்புலிகள் மீதான உணர்வு இன்னும்
குறையாமல் உள்ளது என்று ஆலோசனை வாரியம்
கூறியுள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று
நளினியை விடுதலை செய்ய முடியாது என்று
தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
நளினியின் நன்னடத்தைக்காக அவருடைய சிறை
தண்டனை காலத்தில் 545 நாட்களை
சிறைத்துறை குறைத்துள்ளது. சிறையில்
பட்டப்படிப்பை முடிக்கும் கைதிகளுக்கு
தண்டனையை குறைக்கலாம். ஆனால் நளினி
ஏற்கனவே பட்டப்படிப்பை
முடித்திருப்பதால் தண்டனையை குறைக்க
முடியாது.
20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில்
இருப்பவர்கள் தண்டனையை குறைக்கலாம்
என்பது நிர்வாக காரணமாக எடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் அது பொருந்தாது.
மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட
வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோட்ஸே
உச்சநீதிமன்றத்தில் தன்னை விடுதலை
செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்தார்.
அவர் ஆயுட்காலம் முடியும் வரை சிறையில்
இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம்
உத்தரவிட்டது.
ஆகவே, நளினி உட்பட 3 பேர் தாக்கல்
செய்த மனுக்களை தள்ளுபடி செய்ய
வேண்டும்.
இவ்வாறு அரசு தாக்கல் செய்த பதில்
மனுவில் கூறப்பட்டுள்ளது. மத்திய
அரசின் சார்பில் மனுத் தாக்கல் செய்ய
காலஅவகாசம் வேண்டும் என்று கூடுதல்
சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன்
கேட்டுக் கொண்டார். அதனை ஏற்று வழக்கு
விசாரணையை செப்டம்பர் 17ந் தேதிக்கு
தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
பாலமோடாய் கிராமத்தை
ராணுவம் தன் வசமாக்கியது இந்த மோதலின்
விடுதலைப்புலிகள் 34 பேர்
கொல்லப்பட்டனர்.
இலங்கையின்
வடக்குபகுதியில் ராணுவத்தினருடன்
ஏற்பட்ட மோதலில் விடுதலைப்புலிகள் 34
பேர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம்
இன்று கூறியுள்ளது.
.
இந்த மோதலின் போது ராணுவ வீரர் ஒருவர்
பலியானதாகவும் அது தெரிவித்துள்ளது.
வவுனியா மாவட்டத்தின் விடுதலைப்
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த
பாலமோடாய் கிராமத்தை ராணுவம் தன்
வசமாக்கிக் கொண்டதாகவும் இங்கு நேற்று
நடைபெற்ற மோதலில் மட்டும் 14
விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும்
இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய
நாணயக்காரா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பகுதியில் நடந்த மோதலில்
12 விடுதலைப்புலிகளும் வெளியோயாவில் 7
பேரும் யாழ்ப்பணத்தில் ஒருவரும்
கொல்லப் பட்டதாக அவர் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நடந்த மோதலின் போது
ராணுவ வீரர் ஒருவர் பலியானதாகவும் உதய
நாணயக்காரா கூறினார். இந்த மோதல்
சம்பவங்களில் 10 விடுதலைப்புலிகளும் 5
வீரர்களும் காயமடைந்தனர்.