|
மீட்கப்படுகின்ற பகுதிகளில் மக்களின்
மனநிலையை மேம்படுத்துவதற்கான உளவள ஆலோசனை
சேவைகள் செயற்படுத்தப்படும்! அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா.
தற்போதைய
யுத்த சூழ்நிலையில் மீட்கப்படுகின்ற
பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களின்
மனநிலையை மேம்படுத்துவது தொடர்பில் ஆலோசனை
சேவை பாரிய சவாலுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும்
இம்மக்களது மனநிலையை மேம்படுத்துவது
தொடர்பில் ஒழுங்கு ரீதியிலான உளவள ஆலோசனை
வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு
தனது அமைச்சு அடுத்த வருடம் முதல்
நடவடிக்கை எடுக்கவுள்ளது என்றும் சமூக
சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
தெரிவித்துள்ளார்.
தேசிய உளவள ஆலோசனை தினத்தை அனுஷ்டிக்கும்
வகையில் சமூக சேவைகள் மற்றும் சமூக
நலத்துறை அமைச்சு ஏற்பாடு செய்திருந்த
வைபவத்தையொட்டி வழங்கியுள்ள விஷேட
செய்தியிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அவர்கள் மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார். மேற்படி வைபவம் இன்று
(15.10.2008) கொழும்பு விஜேராம மாவத்தையில்
உள்ள சுவசிறிபாயவில் காலை 9.00 மணிக்கு
நடைபெற்றது.
இயற்கை அனர்த்தங்களைப் போன்றே மனித செயற்பாடுகள்
காரணமாகவும் பாதிக்கப்பட்ட நிலையை அடைந்துள்ள
அம்மக்கள் பல்வேறு உள ரீதியிலான பிரச்சினைகளுக்கு
உட்பட்டு வருவதாகவும் இவர்களுக்கான
உளவள ஆலோசனை சேவைகளை முன்னெடுக்கும்
போது அரச மற்றும் அரச சார்பற்ற உளவள
ஆலோசனை நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களையும்
தான் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர்
மேலும் தெரிவித்துள்ளார்.
உலகின் வளர்ச்சியடைந்துள்ள நாடுகளின்
உளவள ஆலோசனை சேவையானது ஏனைய சுகாதார
சேவைகளுக்கு சமாந்தரமான வகையில்
முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் எனினும்
இலங்கையின் நிலை அந்தளவிற்கு வளர்ச்சி
பெற்றில்லாத நிலையில் தமது அமைச்சு
தேசிய உளவள ஆலோசனை சேவையை பிரதேச செயலகங்கள்
மட்டத்தில் செயற்படுத்தி வருவதாகவும்
தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அவர்கள், அரச நிறுவனங்களிலும் சேவைகளின்
தேவை நிமித்தம் உளவள ஆலோசனை அதிகாரிகள்
இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் இதன் பிரகாரம்
சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், புனர்வாழ்வு
நிலையங்கள், சிறுவர் மற்றும் வயோதிபர்
இல்லங்கள் போன்றவற்றிலும் உளவள ஆலோசனை
சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்
சேவையை மேற்கொள்ளுகின்ற அதிகாரிகளின்
தற்போதைய அறிக்கைகளின்படி உளவள ஆலோசனை
சேவைகள் வழங்கப்படுகின்ற பகுதிகளில்
ஒருசில சமூகப் பிரச்சினைகள் குறைந்து
வருவதாகத் தெரிய வந்துள்ளது எனவும்
தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வருடம் முதல் தமது அமைச்சு
24 மணி நேர தொலைப்பேசி ஊடான உளவள ஆலோசனைகளை
வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து
அதன் மூலம் பாரிய பணிகளை மேற்கொண்டு
வருவதாகவும், அரச மற்றும் அரச சார்பற்ற
துறைகள் ஒருங்கிணைந்து உளவள ஆலோசனை
சேவையை நாடளாவிய ரீதியில் பரவலாக்குவதற்கும்
அதற்கென தேசிய கொள்கை ஒன்றை வகுப்பதற்குமான
தருணம் வந்துவிட்டது என்றும் இதற்கான
அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்குத்
தான் எதிர்பார்ப்பு கொண்டிருப்பதாகவும்
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி வைபவத்தில் சமூக சேவைகள் மற்றும்
சமூக நலத்துறை பிரதி அமைச்சர் லயனல்
பிரேமசிறி, அமைச்சின் செயலாளர் திருமதி
வி. ஜெகராசசிங்கம், மருத்துவ நிபுணர்
திருமதி பத்மினி குணரத்ன, அமைச்சின்
உளவள ஆலோசனைப் பணிப்பாளர் திரு. எல்.எச்.
திலகரட்ன, மேலதிகச் செயலாளர் செல்வி
யமுனா சித்ராங்கனி உட்பட பலர் கலந்து
கொண்டனர்.


 |
|
|
|