தமக்குத் தீமையைச்
செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை
செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள்
எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.
அம்பாறையில்
மூன்று சமூகங்களும் ஒற்றுமையுடன்
வாழ்வதன் மூலமே கிழக்கு மாகாணத்தில்
சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும்
முதலமைச்சர் சிவநேசதுரை
சந்திரகாந்தன் தெரிவித்தார்.
பேனாபிடித்து எழுதுவதைத் தவிர்த்து
அதற்குப் பதிலாக ஆயுதங்களைக் கையில்
வைத்துக் கொண்டு பிழையான வழியை நமது
இளைஞர்களுக்கு காட்டிய தலைமைகளினால்
நமது சமூகம் சொல்லொணா துயரங்களை
சந்தித்துவிட்டதாக கிழக்கு மாகாண
முதலமைச்சர் சிவநேசத்துரை
சந்திரகாந்தன் தெரிவித்தார் கடந்த
திங்கட்கிழமை அம்பாறை
டீ.எஸ்.சேனநாயக்க மகாவித்தியாலயத்தில்
மாவட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான
நியமனங்கள் வழங்கும் வைபவத்தில் கலந்து
கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்:
இந்நியமனம் வழங்கும் நடைமுறையின் மூலம்
மூன்று சமூகங்களுக்கும் சம உரிமை
வழங்கப்பட்டுள்ளது. மூன்று சமூகங்களும்
ஒன்றாக வாழ்ந்தால் தான் நாம்
இந்நாட்டில் சமாதானத்தைக்
கட்டியெழுப்ப முடியும்.
கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டு
அதன்பிறகு இம்மாகாணத்தில் தேர்தல்
ஒன்று நடத்தப்படுவது சாத்தியமா? என்று
ஒரு சிலர் கேள்வியெழுப்பியது
மட்டுமன்றி இது ஒரு பகல்கனவு எனவும்
கூறினார். ஆனால், நாங்கள் மிகத்
தெளிவாக இருந்து இதனைச் செய்து காட்டி
இன்று மாகாண சபையை உயிரோட்டமுள்ளதாக
செயற்படுத்திக் கொண்டு வருகின்றோம்.
கிழக்கு மாகாண சபையின் கீழ் வாழும்
எந்த சமூகத்திற்கும் அநீதி
இழைக்கப்படமாட்டாது. எல்லோரும் சமமாக
மதிக்கப்படுவர். கமநெகும
வேலைத்திட்டத்தின் கீழ் பலகோடி ரூபா
செலவில் கிழக்கை அபிவிருத்தி செய்ய
நாம் திட்டமிட்டுள்ளோம்.
இங்கு நியமனங்களைப் பெற்றவர்கள் எவரும்
குறித்த காலங்களுக்கு முன்னர்
இடமாற்றம் கோருவதை தவிர்த்துக் கொள்ள
வேண்டும். தூர இடங்களுக்கு நியமனங்கள்
கிடைத்திருப்பவர்களுக்கான போக்குவரத்து
சேவையை இலகுபடுத்த மாகாண போக்குவரத்து
அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது
எனவும் அவர் கூறினார்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில்
பிரேமஜயந்த, கிழக்கு மாகாண ஆளுநர்
ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்ரம
மாகாண அமைச்சர்களான ஏ.உதுமாலெப்பை,
விமலவீர திசாநாயக்கா எஸ்.நவரத்னராஜா
உட்பட கிழக்கு மாகாண அமைச்சின்
செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள் பலரும்
கலந்து கொண்டனர்.
சட்டவிரோத குடியிருப்புகளை எந்த
நேரத்திலும் அகற்றும் அதிகாரம்
அரசுக்கு இருக்கிறது
உயர்நீதிமன்றம்
அறிவிப்பு.
கொழும்பு கொம்பனிவீதி கிளனி
ஒழுங்கையில் ரயில் பாதையின் இரு
மருங்கிலுமுள்ள சட்டவிரோத
குடியிருப்புகளை எந்நேரத்திலும்
அங்கிருந்து அகற்றுவதற்கான அதிகாரம்
அரசுக்குள்ளதாக உயர்நீதிமன்றம்
தெரிவித்துள்ளது சார்க் மாநாட்டு
பாதுகாப்பை முன்னிட்டு கிளனி
ஒழுங்கையிலுள்ள மக்கள் குடியிருப்புகளை
அப்புறப்படுத்துவதற்கு கடந்த வார
முற்பகுதியில் உயர்நீதிமன்றம்
இடைக்கால தடை உத்தரவை
விதித்திருந்தபோதும் பொலிஸாரின்
உதவியுடன் நகர அபிவிருத்தி அதிகார சபை
தகர்த்தழித்தது.
இந்த நிலையில் கிளனி ஒழுங்கையைச்
சேர்ந்த சிலர் தாக்கல் செய்த அடிப்படை
உரிமை மீறல் மனு தொடர்பாக நேற்று
உயர்நீதிமன்றில் பரிசீலனை
செய்யப்பட்டது.
இதன்போதே, இங்குள்ள சட்டவிரோத
குடியிருப்புகளை அரசு எந்நேரத்திலும்
அங்கிருந்து அகற்றுவதற்கான அதிகாரம்
அரசுக்கு உள்ளதாக உயர்நீதிமன்ற
நீதியரசர்களான அசோக டி சில்வா, சலீம்
மர்சூக், பி.ஏ.ஏக்கநாயக்க ஆகியோர்
தெரிவித்துள்ளனர்.
இதனால் அடுத்த மாதம் 19 ஆம் திகதிக்கு
முன் இந்தப் பகுதி மக்கள் நகர
அபிவிருத்தி அதிகார சபையுடன்
கலந்துரையாடி பிரச்சினைக்குத் தீர்வு
காண வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம்
தெரிவித்துள்ளது.
இதேநேரம், இப்பகுதி மக்களை
அப்புறப்படுத்துவதற்கான சட்டத்தை
பயன்படுத்தாது, குண்டர்களின் உதவிகளைப்
பெற இடமளிக்கக்கூடாதென மனுதாரர்களின்
சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி
உப்புல் ஜெயசூரிய தெரிவித்தார்.
இதேநேரம், இவர்களுக்கு மாற்று
இருப்பிடம் வழங்க அரசு
தீர்மானித்துள்ளதாகவும் அதற்குரிய
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும்
அரசு தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி பாலித
ரணசிங்க தெரிவித்தார்.
குடியிருப்பாளர்களுக்கு தெமட்டகொட
பகுதியில் குடியிருப்புப் பகுதிகளை
வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள
தீர்மானத்தை உறுதிசெய்து அவர்களுக்கான
குடியிருப்புகளை பெற்றுக்கொடுக்க
நடவடிக்கை எடுக்குமாறு அரசு தரப்பு
சட்டத்தரணிக்கு உயர்நீதிமன்றம் ஆலோசனை
வழங்கியது.
மடு மாதா
தேவாலயப்பகுதிக்கு
அமைச்சர்கள் குழு
விஜயம் ஆயர் இல்லத்தில்
திருச்சொரூபத்தை வழிபட்டனர்.
மடு மாதா தேவாலயப்பகுதிக்கு நேற்று
புதன்கிழமை அமைச்சர்கள் குழுவொன்று
விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை
ஆராய்ந்துள்ளது அத்துடன் மன்னாரில்
ஆயர் இல்லத்திற்கும் சென்று அங்கு
வைக்கப்பட்டுள்ள மடுமாதா
திருச்சொரூபத்தையும் அவர்கள்
வழிபட்டனர். அமைச்சர்களான பண்டு
பண்டாரநாயக்க மில்றோய் பெர்னாண்டோ
திஸ்ஸ கரலியத்தை பீலிக்ஸ் பெரேரா
ஜயந்த திசேரா மற்றும் சரத் ரணவக்க
ஆகிய அமைச்சர்கள் குழுவினரே அங்கு
விஜயம் செய்திருந்தனர்.
மடுமாதா தேவாலயத்தில் எதிர்வரும்
ஆவணித்திருவிழாவை கொண்டாடுவது
தொடர்பாக இவர்கள் ஆயருடன்
கலந்துரையாடியதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கம்பஹா மாவட்ட ஐக்கிய
தேசியக்கட்சியின் பாராளுமன்ற
உறுப்பினர் டாக்டர் ஜெயலத்
ஜெயவர்த்தனவும் மடுவுக்கு
சென்றிருந்தார்.
ஆயர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள
மடுமாதாவின் திரூச்சொருபத்தையும் அவர்
வழிபட்டதுடன் மன்னார் ஆயர் மற்றும்
குருக்களையும் சந்தித்து உரையாடினார்.
மடு மாதா தேவாலய ஆவணித்திருவிழா 6 ஆம்
திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15
ஆம் திகதி முடிவடைவது வழக்கமாகும்.
இம்முறை இத்திருவிழாவை கொண்டாட
வேண்டும் என அரச தரப்பினர் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
ஆனால் அங்கு அமைதியான சூழல் ஏற்பட்டு
இப்பிரதேசத்தை யுத்த சூனியப்பிரதேசமாக
இரு தரப்பினரும் அறிவித்தால் மட்டுமே
திருவிழாவை கொண்டாட முடியும் எனவும்
மன்னார் ஆயர் தெரிவித்து வருவதும்
குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுச் சிறப்புமிக்க
மாவிட்டபுரம் தேர்
உற்சவத்தை முன்னிட்டு தெல்லிப்பழை
சோதனைச் சாவடியில் கருமபீடம்.
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம்
கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர் உற்சவம்
இன்று வியாழக்கிழமை காலை
நடைபெறவுள்ளது தேர் உற்சவத்துக்குச்
செல்லும் அடியார்களின் நலன்களைப்
பேணுவதற்காக தெல்லிப்பழை சோதனைச்
சாவடியில் விசேட கருமபீடமொன்று
அமைக்கப்பட்டிருப்பதால் அடியார்கள்
சிரமமின்றி ஆலயத்துக்கு செல்ல வசதி
செய்யப்பட்டிருப்பதாக
இப்பிரதேசத்துக்கான இராணுவ கட்டளை
அதிகாரி தெரிவித்துள்ளார்.
அடியார்கள், ஆலயத்துக்கு செல்வதற்கு,
தமது தேசிய அடையாள அட்டையை தெல்லிப்பழை
சோதனைச் சாவடி பாதுகாப்பு அதிகாரியிடம்
ஒப்படைத்துவிட்டு, விசேட
அனுமதியட்டையைப் பெற்று ஆலயம் செல்ல
முடியும். கமரா, வீடியோ, மின்னியல்
உபகரணங்களையோ, கையடக்க தொலைபேசிகளையோ
ஆலயவளாகப் பிரதேசத்துக்குள் எடுத்துச்
செல்ல அனுமதிவழங்கப்பட மாட்டாது.
எனினும் ஊடகவியலாளர்கள் தமது தொழில்
உபகரணங்களை எடுத்துச் செல்ல
அனுமதிக்கப்படுவர்.
வசந்த மண்டப பூஜை காலை 9 மணிக்கு
இடம்பெற்று 10 மணிக்கு சுவாமி தேரில்
ஆரோகணம் செய்வார் என ஆலய தர்மகர்த்தா
சபையினர் தெரிவித்தனர். அடியார்களுக்கு
இலங்கை சீமெந்து கூட்டுத்தாபன
யாழ்ப்பாண பணியாளர்கள் அன்னதானம்
வழங்க ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
வன்னியில் தொடரும்
இராணுவ நடவடிக்கையால் விவசாயிகள்,
மாணவர்கள் பெரிதும் பாதிப்பு.
வன்னியில் பல பகுதிகளிலும் தொடரும்
இராணுவ நடவடிக்கைகள் காரணமாக
விவசாயிகளும் மாணவர்களும் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளனர் படையினரின்
தாக்குதல்கள் காரணமாக முல்லைத்தீவு
மாந்தை கிழக்கு துணுக்காய் போன்ற
பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பயிர்ச்
செய்கைகள் யாவும் கைவிடப்பட்டுள்ளன.
வவுனிக்குளத்தின் கீழ் இவ்வாண்டு 3500
ஏக்கர் சிறுபோக நெற்செய்கை
மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதி மீது
படையினர் மேற்கொண்ட தொடர்
தாக்குதல்களால், இப்பகுதிகளில்
மேற்கொள்ளப்பட்ட 3500 ஏக்கர் சிறுபோக
நெற்செய்கை விவசாயிகளால் கைவிடப்பட்டு
அழிவடைந்துள்ளது.
இதனைவிட, துணுக்காய், உயிலங்குளம்,
ஆலங்குளம், ஐயங்கன்குளம் போன்ற
பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட
நெற்செய்கைகளும் சிறு தானிய
செய்கைகளும் தோட்டப் பயிர்ச்
செய்கைகளும் விவசாயிகளால் கைவிடப்பட்டு
அழிவடைந்துள்ளன. இதனால், விவசாயிகள்
பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க, படையினரின்
தாக்குதல்களால் இடம்பெயர்ந்த
பாடசாலைகள் முல்லைத்தீவு,
திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில்
இணைப்புப் பாடசாலைகளாக பெரும்
இடர்களின் மத்தியில் இயங்கி வருகின்றன.
படையினரின் தாக்குதல் காரணமாக
இடம்பெயர்ந்த பாலிநகர் மகா
வித்தியாலயம், பாண்டியன்குளம் மகா
வித்தியாலயம் யோகபுரம் மகா
வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும்
அனிஞ்சியன்குளம் அரசினர் தமிழ்க் கலவன்
பாடசாலை, கல்விளான் அரசினர் தமிழ்க்
கலவன் பாடசாலை வவுனிக்குளம் அரசினர்
தமிழ்க் கலவன் பாடசாலை, பனங்காமம்
அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, மூன்று
முறிப்பு அரசினர் தமிழ்க் கலவன்
பாடசாலை, கூத்திமூலை அரசினர் தமிழ்க்
கலவன் பாடசாலை போன்ற பாடசாலைகளும் இடம்
பெயர்ந்து திருமுறிகண்டி இந்து
வித்தியாலயத்தில் இணைப்புப்
பாடசாலைகளாக இயங்கி வருகின்றன.
திரு முறிகண்டி இந்து வித்தியாலயத்தில்
ஏற்கனவே 429 மாணவர்கள் கல்வி கற்று
வந்தனர். தற்போது இடப்பெயர்வுகள்
காரணமாக இடம்பெயர்ந்த 620 மாணவர்களும்
இங்கு இணைந்து கல்வி கற்று வருகின்றனர்.
இந்நிலையில், குடிதண்ணீர், கழிப்பறை
வசதிகளின்மை வகுப்பறைகள் பற்றாக்குறை
எனும் பல்வேறு நெருக்கடிகளின்
மத்தியில் இப்பாடசாலையில் மாணவர்கள்
தமது கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டு
வருகின்றனர்.
இராணுவ நடவடிக்கை காரணமாக வன்னியில்
55 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதும்
தெரிந்ததே.
மாவறல்ல சீனிப்பல்ல பகுதியில்
திங்கட்கிழமை இரவு
ஆட்டோவில் பயணித்த
இருவர் சுட்டுக் கொலை.
மாவறல்ல சீனிப்பல்ல பகுதியில்
திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இரட்டைக்
கொலைச் சம்பவம் தொடர்பாக எவரும் கைது
செய்யப்படவில்லை என மாவறல்ல பொலிஸார்
தெரிவித்தனர்.
சம்பவ தினம்
இரவு ஆட்டோவில் இருவர் பயணம் செய்து
கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில்
வந்த இருவர் அவர்களின் மீது
துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு
தப்பிச் சென்றுவிட்டனர்.
இருவரில் ஒருவர் அந்த இடத்திலேயே
உயிரிழந்தார் மற்றவர் ஆஸ்பத்திரியில்
படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்ட பின்னர்
மரணமானார்.
இருவரும் ஒன்று விட்ட சகோதரர்கள் எனத்
தெரிவித்த பொலிஸார் இது பழைய தகராறு
காரணமாக ஏற்பட்ட சம்பவம் எனவும்
குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர்களை பொலிஸார் தேடி
வருகின்றனர் வீ.குமர (வயது 20),
சமன்புஸ்ப குமார (20 வயது) ஆகிய
இருவருமே இச் சம்பவத்தில்
கொல்லப்பட்டவர்களாவர்.
உரியவரின் பெயர், முகவரியில்லாத சிம்
அட்டைகள் கல்முனை பிரதேசத்தில்
பொலிஸாரால் பறிமுதல்.
கல்முனை பிரதேசத்தில் கடந்த சில
தினங்களாக பொலிஸாரினால் கையடக்கத்
தொலைபேசிகளின் சிம் அட்டைகள்
பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
உரியவரின் பெயர் முகவரி இல்லாத சகல
சிம் அட்டைகளும் பொலிஸாரினால் பறிமுதல்
செய்யப்பட்டு வருகின்றன.
தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்
ஆணைக்குழுவின் புதிய
சட்டதிட்டங்களுக்கு அமைய உரியவர்களின்
முகவரியிலும் பெயரிலும் பதிவு
செய்யப்படாத சிம் அட்டைகளை ஏனையயோர்
பாவிப்பது முற்றாகத் தடை
செய்யப்பட்டுள்ளது.
கல்முனையிலிருந்து அம்பாறை நோக்கி
செல்கின்ற பயணிகளில் பலர் மல்வத்தை
மற்றும் உதயபுர போன்ற
சோதனைச்சாவடிகளில்
சோதனைக்குட்படுத்தப்பட்டு உரியவர்களின்
பெயரில் பதிவுசெய்யப்படாத
பெரும்பாலானவர்களின் சிம் அட்டைகள்
கடந்த சில தினங்களாக பறிமுதல்
செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம், கையடக்கத் தொலைபேசிகளை தமது
சொந்த பெயரில் பதிவுசெய்யாமல்
பாவிக்கின்ற பாவனையாளர்களின் நன்மை
கருதி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்
கல்முனையில் பதிவு செயவதற்குரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
பாவனையாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.