|
|
|
|
|
தமக்குத் தீமையைச்
செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை
செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள்
எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.
|
|
இன்று காலை 6.35 மணியளவில் இலங்கை
விமானப்படையினரின் ஜெட் ரக விமானங்கள்
இரணைமடுவில் உள்ள புலிகளின் தற்கொலை
படை பிரிவினரின் முகாம் தாக்கியழிப்பு.
இன்று காலை 6.35 மணியளவில் இலங்கை
விமானப் படையினரின் ஜெட் ரக விமானங்கள்
இரணைமடுவில் அமைந்துள்ள புலிகளின்
தற்கொலை படையினரின் பயிற்சி முகாம்
ஒன்றை தாக்கியளித்துள்ளதாக பாதுகாப்பு
தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன.
இத்தாக்குதல் வெற்றிகரமாக
நடத்தப்பட்டுள்ளதாக விமானப்படையின்
பேச்சாளர் விங் கெமாண்டர் ஜனக்க
நாணயக்கார தெரிவித்துள்ளார். |
|
|
விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய
கிளிநொச்சி, முல்லைத்தீவு
மாவட்டங்களில் தொலைபேசிகள் செயலிழந்தன.
விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய
கிளிநொச்சி, முல்லைத்தீவு
மாவட்டங்களில் செயற்பட்டு வந்த
முக்கிய தொலைபேசிகள் யாவும்
செயலிழந்துள்ளதாக வன்னித் தகவல்கள்
தெரிவித்துள்ளன இப்பிரதேசத்தில் உள்ள
விடுதலைப் புலிகளின் முக்கிய
அலுவலகங்களுக்கும் அரச
செயலகங்களுக்கும் முக்கிய
வைத்தியசாலைகளுக்கும் மற்றும் முக்கிய
அரச திணைக்களங்களுக்கும் தொலைபேசி
இணைப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்தத் தொலைபேசி இணைப்புக்கள் கடந்த
ஒரு வார காலத்திற்கும் மேலாக சீராக
செயற்படாமல் இருந்து வந்ததாகவும்
பின்னர் நேற்று முதல் இவைகள் முற்றாக
செயலிழந்துள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது சார்க் மாநாடு
கொழும்பில் நடைபெறுகின்ற இந்த வேளையில்
உச்ச பாதுகாப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தச்
சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு காரணங்களை
முன்னிட்டே இந்தத் தொலைபேசிகள்
துண்டிக்கப்பட்டிருக்கின்றனவா என்ற
சந்தேகமும் எழுந்துள்ளது.
வன்னிப்பிரதேசத்தில் முழுமையான போர்ச்
சூழல் நிலவுகின்ற ஒரு நெருக்கடியான
வேளையில் இந்தத் தொலைபேசிகள்
துண்டிக்கப்பட்டு, வன்னிப் பிரதேசம்
நாட்டின ஏனைய பிரதேசங்களில் இருந்து
முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், பாதிக்கப்பட்டு
இடம்பெயர்ந்துள்ள ஒரு லட்சத்திற்கும்
மேற்பட்ட பொதுமக்களுக்கான அவசர நிவாரண
நடவடிக்கைகளை மேற்கொள்வது அங்கு
அவசரமாகத் தேவைப்படுகின்ற அத்தியாவசிய
தேவைகள் குறித்து, அங்குள்ள முக்கிய
அரச அதிகாரிகள் அரசாங்கத்தின் மேல்
மட்டத்தினருடனும்,
பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளுடனும்
அவசரமானதும் முக்கியமானதுமான
தொடர்புகளை மேற்கொள்ளும் செயற்பாடுகளை
மேற்கொள்வது மற்றும் நோயாளர்களை மேல்
சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பி
வைப்பது தொடர்பில் வைத்திய அதிகாரிகள்
வவுனியா மற்றும் பிரதேசங்களுடன்
தொடர்புகளை மேற்கொள்வது உட்பட பல
நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை
ஏற்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது,
|
|
|
15 மாதங்களின் பின்
இந்திய, பாகிஸ்தான் தலைவர்கள்
சந்திப்புக்கு வழிசமைத்து கொடுத்துள்ள
சார்க் மாநாடு.
தெற்காசியப்பிராந்தியத்தில் பரம
வைரிகளாக இருந்து வரும் இந்திய,
பாகிஸ்தான் தலைவர்கள் கொழும்பில் இந்த
வாரம் சந்திக்கவுள்ளனர். 15
மாதங்களுக்குப் பின்னர் இரு நாடுகளின்
தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு
ஸ்தம்பிதமடைந்துள்ள சமாதான
நடவடிக்கைகளுக்கு உயிரோட்ட மளிக்க
முடியுமா என்பது குறித்து ஆராய்வதாகவே
அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும்
பாகிஸ்தான் பிரதமர்
கிலானிக்குமிடையிலான சந்திப்புக்கு
ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக
சார்க் மாநாட்டு ஏற்பாடுகளுடன்
தொடர்புடைய இலங்கை அதிகாரி ஒருவர்
கூறினார்.
இந்தியாவில் பெங்களூர் அஹமதாபாத்
பகுதிகளில் இடம் பெற்ற தொடர் குண்டுத்
தாக்குதலின் பின் இந்தச் சந்திப்பு
இடம் பெறவுள்ளது.
காபூலில் இந்திய தூதரக
குண்டுத்தாக்குதலின் பின்னணியில்
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஜ.இருந்ததாக
புதுடில்லி குற்றம்சாட்டுகிறது.
பெங்களூர், அஹமதாபாத்
குண்டுவெடிப்புகளுக்கு இந்திய
முகாஹிதீன் என்ற அமைப்பே உரிமை
கோரியிருக்கின்ற நிலையில் பாகிஸ்தான்
மீது குற்றச்சாட்டு தெரிவிக்கும்
நிலமைகாணப்படுகிறது.
பாகிஸ்தான் துருப்புகள் காஷ்மீரில்
எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டைத்தாண்டி
ஊடுருவியதாக இந்தியா திங்கட்கிழமை
குற்றச்சாட்டு தெரிவித்திருந்தது.
அதேசமயம், பாகிஸ்தானில் வகுப்பு
வாதகலவ இந்தியா தூண்டி விடுவதாக
இஸ்லாமாபாத் குற்றம் சாட்டுகிறது.
அத்துடன் கொழும்பில் 2006 இல் தனது
இலங்கைக்கான தூதுவரை படுகொலை செய்ய
இந்திய உளவுத்துறை முயன்றதாகவும்
பாகிஸ்தான் சாடியிருந்தது.
இருதரப்பினர் முயற்சிகளை
மேற்கொண்டாலும் எந்தவொரு முன்னேற்றமும்
ஏற்படுமென நான் நினைக்கவில்லை என்று
புதுடில்லியிலுள்ள பாதுகாப்பு கற்கைகள்
நிலைய முன்னாள் தலைவர் உதே பாஸ்கர்
கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தை நடத்தும் நிலமையை
தொடர்ந்து வைத்திருக்க இரு நாடுகளும்
நோக்கமாக கொண்டு செயற்படுமென
ஓய்வுபெற்ற இந்திய இராஜதந்திரி
கான்வால்சியால் கூறியுள்ளார்.
|
|
|
புலிகளிடமிருந்து
படையினர் வசம் வந்துள்ள மடு
தேவாலயத்திற்கு மன்னார் ஆயர்
வண.இராயப்பு யோசப்
நேரில் சென்று நிலைமைகளை பார்வை.
மன்னார் மடு தேவாலயத்திற்கு மன்னார்
ஆயர் வண.இராயப்பு யோசப் தலைமையிலான
குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை
சென்றிருந்தனர். விடுதலைப்
புலிகளிடமிருந்து படையினர் வசம்
வந்துள்ள மடு க்கோவில் பகுதியை
பார்வையிட நீண்ட நாட்களின் பின்னர்
கத்தோலிக்க திருச்சபையினருக்கு நேற்று
படையினர் அனுமதி வழங்கியிருந்தனர்.
சார்க் மாநாட்டையொட்டி விடுதலைப்
புலிகள் பத்து நாள் யுத்த நிறுத்தத்தை
அறிவித்துள்ள நிலையில், நேற்று
வண.இராயப்பு யோசப்பும் மன்னார்
மறைமாவட்ட குரு முதல்வர் வண.விக்டர்
சோசையும் சென்று மன்னார்
திரும்பியுள்ளனர்.
இராணுவத் தளபதியின் பணிப்பின் பேரில்
வன்னிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல்
ஜெகத் ஜெயசூரியவின் அழைப்பின் பேரிலேயே
மன்னார் ஆயர் நேற்று மடு
தேவாலயத்திற்கு நேரில் சென்று
நிலைமைகளை நேரில் அவதானித்து விட்டுத்
திரும்பியுள்ளார்.
மடுதேவாலயத்தை ஆயரிடம்
ஒப்படைப்பதற்காக படைத்தரப்பு அவரை
அங்கு அழைத்திருந்த போதும் அங்கு
தாங்கள் தங்கியிருப்பதற்கான அனுமதி
வழங்கப்படாததாலும் நிரந்தரமாகத்
தாங்கள் தங்கியிருப்பதற்கான அனுமதி
வழங்கினால் மட்டுமே தேவாலயத்தை
பொறுப்பேற்க முடியுமென வண.இராயப்பு
யோசப் தெரிவித்தார்.
அத்துடன், எம்மிடம் தேவாலயத்தை
பொறுப்புத் தந்துவிட்டு படையினர்
அங்கிருந்து வெளியேற வேண்டும்.
அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால்
மட்டுமே தேவாலயத்தை பொறுப்பேற்பது
சாத்தியமெனவும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம், ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி
நடைபெறும் ஆவணி மாதத் திருவிழா,
மக்களின் பாதுகாப்பு
உறுதிப்படுத்தப்பட்டாலும் ஆயுதப்
பிரசன்னம் இருக்கமாட்டாதெனவும்
உறுதியளிக்கப்பட்டு இரு தரப்பும்
இந்தப் பிரதேசத்தை யுத்த சூனியப்
பிரதேசமாக அறிவித்தால் மட்டுமே
பெருநாளைக் கொண்டாட முடியும்.
அதேநேரம், ஆவணி மாத பெருநாளைக்
கொண்டாடுவதற்கான எந்தவித சாத்தியமும்
இல்லையெனவும் ஆயர் தெரிவித்தார்.
|
|
|
ஐரோப்பிய மனித உரிமைகள்
நீதிமன்றத்தின் அறிவிப்பால்
பிரிட்டனிலுள்ள தமிழர்கள் கடும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் அகதிகள் அந்தஸ்து
கோரிக்கை நிராகரிக்கப்பட்ட
இலங்கையர்களை நாடு கடத்துவது தொடர்பாக
ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம்
தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்கள்
பிரிட்டனிலுள்ள இலங்கைத் தமிழர்களிடையே
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகதிகள்
அந்தஸ்த்துக் கோரிக்கை
நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை
இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது
தொடர்பான பிரிட்டிஷ் அரசின்
முடிவிற்கெதிராக அண்மையில் ஐரோப்பிய
மனித உரிமைகள் நீதிமன்றம் வழங்கிய
தீர்ப்பு தமிழர்கள் மத்தியில் பெரும்
மன நிம்மதியை ஏற்படுத்தியிருந்தது.
அத்தீர்ப்பு தொடர்பாக எல்லோருமே ஒரு
நம்பிக்கையைக் கொண்டிருந்த வேளையிலே
புதிதாக ஒரு அதிர்ச்சித் தகவலை
ஐரோப்பிய நீதிமன்றப் பதிவாளர்
வெளியிட்டிருக்கிறார்.
அதாவது இனி ஐரோப்பிய மனித உரிமைகள்
நீதிமன்றத்தில் தமது நாடுகடத்தலை
நிறுத்துவதற்கு விண்ணப்பிப்பவர்கள்
முதலில் ஐக்கிய இராஜ்யத்தில் (பிரிட்டன்)
உள்ள சகல நீதிமன்ற முறைமைகளையும் அணுகி
முடித்த பின்னரே அதனை உறுதிப்படுத்தியே
இடைக்காலத் தடை உத்தரவுக்கு
விண்ணப்பிக்கலாம் என்றும் இல்லையேல்
நாடு கடத்தலை நிறுத்த முடியாது என்றும்
அறிவித்துள்ளார்.
இவ்வாறான அணுகுமுறை இருக்குமேயானால்
ஏற்கனவே, தீர்ப்பு வழங்கப்பட்ட NA Gv
The UK என்ற வழக்கின் முடிவிற்கு
எதிராக இலகுவாக மேன்முறையீட்டில்
வெற்றி பெறுவதற்கு ஐக்கிய இராஜ்ய
அரசிற்கு ஏதுவாக இருக்கும் என்று
நம்பப்படுகின்றது.
இது தொடர்பாக ஐரோப்பிய நீதிமன்ற
பதிவாளர் நாயகத்திற்கு சர்வதேச அகதிகள்
அமைப்பின் இயக்குநர் ரி.குலேந்திரன்
மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
""ஏற்கனவே, முன்னணி வழக்குத்
தீர்ப்பான NA வழக்கில் பிரிட்டிஷ் அரசு,
குடிவரவு நீதிபதிகள் உயர் நீதிமன்றம்
ஆகியவை கடைப்பிடிக்கும் அணுகுமுறையை
விலாவாரியாக ஆராய்ந்துள்ளீர்கள்.
இந்நிலையில், தமிழ் அகதிகள் வீணான
செலவுகளை விரயம் செய்வதனைத் தவிர
அதனால் பலன் இல்லை என்பதனை உணர்வீர்கள்.
புதிய விண்ணப்ப முடிவுகள் கூட
விண்ணப்பதாரியை கைது செய்து தடுப்பு
முகாம்களில் அடைத்த பின்னரே முடிவுகளை
வழங்கி விடுவதால் மேல் நீதிமன்ற
விண்ணப்பங்களை சட்ட மீளாய்வு செய்வதில்
கூட பல சிக்கல்கள் எழுகின்றன.
இதுதவிர குடிவரவு நீதிபதிகளின்
முடிவுகளுக்கு எதிராக மீள்
பரிசீலனைக்கு (Re Consideration)
விண்ணப்பிக்கும் போது முடிவுகள் கூட
விண்ணப்பதாரிக்கு நேரே அனுப்பப்படாமல்
அரசாங்க அலுவலகத்துக்கே பல தடவைகள்
அனுப்பப்பட்டு அவர்கள் மூலமே அகதி
விண்ணப்பதாரிக்கு அனுப்ப ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உடனடியாக இந்த முடிவை
மீள் பரிசோதனை செய்ய வேண்டுமென
குலேந்திரன் ஐரோப்பிய மனித உரிமைகள்
நீதிமன்ற பதிவாளரை வேண்டியுள்ளார்.
எனவே, அகதிகள் அந்தஸ்த்து
நிராகரிக்கப்பட்ட தமிழ் அகதிகள்
உடனடியாக தமது சட்ட நிறுவனங்களைத்
தொடர்பு கொண்டு தகுந்த நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.
|
|
|
இராணுவ வீரர் போல்
உடையணிந்து கொள்ளையில் ஈடுபட முயன்ற
இளைஞன்
பொலிஸார்
மடக்கிப் பிடித்தனர்.
இராணுவ வீரர் போல் உடையணிந்து இரவு
வேளைகளில் வாகனங்களை சோதனையிடுவது
போன்று பாசாங்கு செய்து வாகன
கொள்ளையில் ஈடுபட முயற்சித்த
இளைஞரொருவரைப் பேராதனைப் பொலிஸார்
கடந்த சனிக்கிழமை மடக்கிப் பிடித்தனர்.
தவுலகல பேராதனை
வீதியில் எலிகொட சந்திக்கு அருகில்
இராணுவ சீருடையில் நின்ற ஒருவரும்
மேலும் மூவரும் வெள்ளிக்கிழமை இரவு
அவ்வீதியால் செல்லும் வாகனங்களைச்
சோதனையிட்டுள்ளனர்.
இதன் போது மோட்டார் சைக்கிலொன்றை வழி
மறித்து சோதனையிட்ட பின்பு குறித்த
இடமொன்றைக் குறிப்பிட்டு
அவ்விடத்திற்குச் சென்று வருவதாகக்
கூறி சந்தேக நபர் மோட்டார் சைக்கிளைப்
பெற்றுச் சென்றுள்ளார்.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளின்
உரிமையாளர் சந்தேகம் ஏற்பட
பொலிஸாருக்கு அறிவித்ததன் பின்னர்
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நபர் கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்
படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இச்சந்தேக நபர்
இராணுவத்திலிருந்து தப்பியோடி
வந்தவரெனவும் பொலிஸ்
விசாரணைகளிலிருந்து தெரிய
வந்துள்ளதுடன், ஏனைய மூவரையும் தேடிப்
பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள்
பேராதனைப் பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரி உபாலி பண்டார நாரன்பனாவ
தலைமையில் இடம்பெற்று வருகின்றன.
|
|
|
பயங்கரவாதத்தை
அழித்தொழிக்க சார்க் நாடுகளின்
ஒத்துழைப்பு சிறந்ததொரு பக்கபலம்
பிரதமர் விக்கிரமநாயக்கா
தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் அனைத்து நாடுகளுக்கும்
சமூகங்களுக்கும் பொதுவானது. அதனை
அழித்தொழிப்பதற்கு சார்க் நாடுகளின்
ஒத்துழைப்பானது சிறந்த பக்கபலமாகும்
என்று பிரதமர் ரட்ணசிறி
விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக பிரதமர் விடுத்துள்ள
அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
நாம் உயிர் வாழ்வது தொடர்பாடல்
தொழிநுட்பத்தினால் உலகையே நமக்கு
நெருக்கமாக்கித் தந்துள்ள ஒரு
யுகத்திலேயாகும். அதேயளவு உலகம் தூர
நோக்கிச் செல்கின்றதா என்று சில
நிகழ்வுகளின் மூலம் சிந்திக்கவும்
வைக்கின்றது. அந்த நிலையைத்
தோற்றுவிப்பதற்கான மூல காரணம்
பயங்கரவாதமாகும். அடிப்படைவாதம், ஆட்சி
எல்லை, விரிவுக்கொள்கை போன்ற பல்வேறு
வழிகளில் பயங்கரவாதம் செயற்படுகின்றது.
அதன் தாக்கமானது அனைத்து நாடுகளுக்கும்
சமூகங்களுக்குமாகும்.
இந்நிலையினை மறுதலிப்பதற்காக
ஒருவருக்கொருவர் கைகோர்க்க
வேண்டியுள்ளது. ஒருவருக்கொருவர்
ஒத்துழைப்பு வழங்க வேண்டியுள்ளது.
ஒரே வலயத்தில் வாழ்கின்ற எமது
கலாசாரங்கள், உடை நடை பாவனைகள் மற்றும்
உருவமைப்புகள் பெரும்பாலும்
சமமானவையாகும். கொள்கைக்
கோட்பாடுகளிலும் ஒரே மாதிரியான
கருத்துகளைக் கொண்ட நாம் ஒன்றுசேர்ந்து
பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடுவது
மிகவும் பயன் வாய்ந்ததாகும் என்பதே
எனது கருத்தாகும்.
ஒற்றுமையாக ஒன்றுகூடல் ஒற்றுமையுடன்
கலந்துரையாடல் என்பன பௌத்த தர்மமும்
காட்டியுள்ள வழியாக அமைவதுடன் பல
கருத்து முரண்பாடுகள் ஏற்படும்
இடத்தில் புதிய எண்ணங்கள் தோற்றம்
பெறுகின்றன என்பதனையும் நாம்
அறிந்துள்ளோம்.
வலய ரீதியில் ஏற்படுகின்ற இந்த
ஒற்றுமையின் மூலம் எமது சிக்கல்களைத்
தீர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பாக
அமையும் என்பதே எனது நம்பிக்கையாகும்.
நாம் பல்வேறு இடங்களில் இடையிடையே
ஒன்றுகூடி எடுத்துக் காட்டுவது ஒரே
பலமாகும். அந்த நோக்கில் தெற்காசிய
வலய நாடுகளின் தலைவர்களின் இந்தச்
சந்திப்பானது மிகவும்
முக்கியத்துவமிக்கதாகும். காலத்தின்
தேவையானதொன்றை நிறைவேற்றுவதாகும்.
பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும்
தெற்காசிய அரச தலைவர்கள் சிறிய
தீவுக்கு வருகை தருவதன்மூலம் எம்மீது
வைத்துள்ள நம்பிக்கையானது எமக்கு
பாரிய பக்க பலமாகும் என்பதனையும்
குறிப்பிட்டாக வேண்டும் . இவ்வாறான
நடவடிக்கைகளின் ஊடாக எமது கலாசாரங்கள்
மற்றும் கலைகள் என்பன
அபிவிருத்தியடையும். ஒருவருக்கொருவர்
இடையிலான நம்பிக்கை அதிகரிப்பதுடன்
சகவாழ்வும் உறுதி செய்யப்படும்.
இராஜதந்திர உறவுகள் வலுவடையும்.
அதனால், பல்லாண்டு காலம் எமது நட்பு
நீடிக்க வேண்டுமெனவும் இம்முறை சார்க்
அரச தலைவர்களின் மாநாட்டின்
நடவடிக்கைகள் அனைத்து வழிகளிலும்
வெற்றிபெற வேண்டுமெனவும்
வாழ்த்துகிறேன். |
|
|
நுவரெலியா சீதாஎலிய
பகுதியில்
வெடிகுண்டு தயாரிக்கும்
பொருட்கள் கண்டுபிடிப்பு
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா சீதாஎலிய பகுதியில் நேற்று
முன்தினம் திங்கட்கிழமை மாலை
வெடிகுண்டு தயாரிப்பதற்கான பல
பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு
கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில்
சீதாஎலிய பகுதியிலுள்ள வீடொன்றுக்குச்
சென்ற பொலிஸாரே வீட்டுக்கூரையின்
சீலிங்கிற்குள் மறைத்து
வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து வகைகள்
மற்றும் குண்டு தயாரிப்பதற்குத்
தேவையான பொருட்களை கண்டுபிடித்து
கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து அந்த வீட்டிலிருந்து
இருவரைக் கைது செய்ததுடன்,வீட்டையும்
பொலிஸார் சீல் வைத்துள்ளனர்.
இந்த வீட்டிலிருந்து, ஒவ்வொன்றும் 200
கிராம் கொண்ட ரி.என்.ரி.வெடி மருந்துப்
பைக்கற்றுகள்2, வெடிக்க வைக்கும்
கருவிகள்3, எவ்.என்.சி. ரவைகள்11,
ரி.56ரக ரவைகள்2 மற்றும் பொருட்களே
கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார்
தெரிவித்தனர்.
இதையடுத்து அந்தப் பகுதியில்
தேடுதல்கள் நடத்தப்பட்டதுடன் கைது
செய்யப்பட்டவர்களிடம் தீவிர
விசாரணைகளும் நடைபெற்று வருவதாகவும்
தெரிவிக்கப்பட்டது.
|
|
|
உலகத்திலேயே நலிவுற்ற
மக்களுக்கு சேவை செய்யும் மிகப்பெரிய
தொண்டர் நிறுவனம் லயன்ஸ் கழகம்'
195 நாடுகளில் 45 ஆயிரம் கழகங்களைக்
கொண்ட லயன்ஸ் தொண்டு நிறுவனத்தில் 18
இலட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்
உலகத்திலேயே மிகப்பெரிய
தொண்டுநிறுவனமாக நலிவுற்ற மக்களுக்கு
சேவை செய்யும் பணியில் லயன்ஸ் கழக
உறுப்பினர்கள் ஈடுபட்டுவருகின்றனர்
இவ்வாறு 306 பி1 லயன்ஸ் கழகத்தின்
மாவட்ட இணைப்பாளர்
எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
வவுனியா
கிளையின் 14 ஆவது வருடாந்த
ஒன்றுகூடலும் புதிய நிர்வாகிகள்
தெரிவும் வன்னியின் விருந்தினர்
விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்றது.
நலிவுற்ற மக்களுக்கு சேவை
செய்யவிரும்புவோர் லயன்ஸ் கழகத்தில்
இணையமுடியும் அதன்மூலம் ஒருவகையிலான
திருப்தியைப் பெறலாம் எனக்
குறிப்பிட்ட மாவட்ட இணைப்பாளர் இந்த
நாட்டில் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை
கட்டி எழுப்ப வேண்டும் என்பதே எமது
பிரதான குறிக்கோள் எனவும் தெரிவித்தார்.
நடப்பு ஆண்டின் தலைவராக வர்த்தக
பிரமுகர் ஏ.சபாநாதன் தெரிவு
செய்யப்பட்டார்.
இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக
கலந்துகொண்ட இணைப்பாளர் இராமகிருஷ்ணன்
தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;
ஒன்றுபட்ட லயன்ஸ் குடும்பம் மூலம்
இந்த நாட்டில் ஒரு சிறந்த சமுதாயத்தை
ஏற்படுத்த முடியும்.
இலங்கை அபிவிருத்தியடையும் நாடாகவே
உள்ளது. ஆனாலும், 60 சதவீத மக்கள்
வறுமைக்கோட்டின் கீழ் உள்ளனர்.
நலிவுற்ற மக்களை அடையாளம் கண்டு
அவர்களுக்கு சேவையாற்றுவதே எமது
இலக்காக இருக்க வேண்டும்.
21 ஆம் நூற்றாண்டில் இளைஞர்கள்
திசைமாறிப்போகின்றார்கள் யுத்தம்
நடைபெறுவதற்கும் இதுவும் ஒரு காரணமாக
இருக்கலாம் எனவேதான், இளைஞர்களையும்
குடும்பப் பெண்களையும் லயன்ஸ்
கழகத்தில் உறுப்பினராக இணைத்துக்
கொள்ள வேண்டும்.
பால்நிலை சமத்துவத்தின் அடிப்படையில்
பெண்களையும் லயன்ஸ்கழக உறுப்பினர்களாக
இணைத்து வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்க
வேண்டும். குடும்பத்துடன் லயன்ஸ் கழக
உறுப்பினர்களாக இணைந்து கொள்ள முடியும்.
இதற்கு குறைந்த அங்கத்துவ பணமே
அறவிடப்படும்.
வவுனியா கிளை 1994 ஆம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்டு பல சேவைகளை
செய்துவருகின்றது. சேவையாற்றும்
நீங்கள் உங்களுடைய மாதாந்த அறிக்கையினை
சமர்ப்பிக்கவேண்டும். அப்போது கிளைக்கு
புள்ளிகள் வழங்கப்பட்டு விருதுகள்
கிடைக்கும்.
இது ஒரு தொண்டு சேவை பலராலும்
மதிக்கப்படுகின்றது. மாதாந்த
அறிக்கைகள் முக்கியமாக
கருதப்படுகின்றது. வவுனியாவில் பல
அரசசார்பற்ற நிறுவனங்கள் உள்ளன.
இவர்களுடைய அனுசரணையுடன் நலிவுற்ற
மக்களுக்கான வேலைத் திட்டங்களை
முன்னெடுக்க முடியும். வறுமையிலிருந்து
மக்களை விடுவிக்க தேவையறிந்து
செயலாற்றவேண்டும். தொழில் இல்லாத
இளைஞர்களுக்குரிய முறைசாரா கல்வித்
திட்டங்களை செய்யலாம். சுயதொழிலுக்காக
வங்கிகள் மூலம் குறைந்த வட்டியுடன்
கடன் பெறுவதற்கான வழிவகைகளை உருவாக்க
முடியும்.
நமது நாட்டின் சனத் தொகை 27 மில்லியன்.
இதில் 1.5 மில்லியன் மக்கள் நீரிழிவு
நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த
வைத்தியம் தொடர்பான சிகிச்சை
நிலையங்களை நடத்துவதன் மூலம் நீங்கள்
மனநிம்மதி பெறுவீர்கள். பார்வை
குறைந்தவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளை
வழங்கலாம். இவ்வாறான சிறிய வேலைத்
திட்டங்களை மேற்கொள்வது லயன்ஸ் கழக
உறுப்பினர்களுடைய கடமையாகும் என்றார்.
மக்கள் வங்கி முகாமையாளர் திருமதி
கலாசிவலிங்கம், முன்னாள் தலைவர்
கே.சிவபாலன் உட்பட பலர்
உரையாற்றினார்கள்.
புதிய நிர்வாகிகளும்
தெரிவுசெய்யப்பட்டனர். செயலாளர்
கே.சிவபாலன், தனாதிகாரி ரி.பத்மரஞ்சன்.
|
|
|
போர்ச் சூழலினால்
பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட
மக்களுக்கு
உலக வங்கியின்
நிதியுதவியில் 4701 வீட்டுத்திட்டம்.
போர்ச் சூழலினால் பாதிக்கப்பட்ட
மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு உலக
வங்கியின் நிதியுதவியில்
வீடுகளையமைக்கும் பணிகள் தற்போது
துரிதகதியில் நடைபெற்று வருவதாகவும்
யுத்த அனர்த்தத்தினால் நலிவுற்றிருந்த
இம்மாவட்ட மக்களுக்கு 4701 வீட்டுத்
திட்டம் ஒரு பெரும் வரப்பிரசாதமெனவும்
இம்மாவட்ட அரச தகவல் ஊடகத்துறை அதிகாரி
பீ.ரி.அப்துல் லெத்தீப்
தெரிவித்துள்ளார்.
தேச நிர்மாண மற்றும் தோட்ட
உட்கட்டமைப்பு அமைச்சினால் வடக்கு
கிழக்கு வீடமைப்பு மீள்நிர்மாணத்
திட்டத்தின் கீழ் 2007 ஆம் வருட நிதி
ஒதுக்கீட்டில் இம்மாவட்டத்தில் 4701
வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக
இத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட
பிரதித் திட்டப் பணிப்பாளர் திருமதி
நந்தினி கமலதாஸ் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் மண்முனை வடக்குப்
பிரதேச செயலகப் பிரிவின் புதூர்ப்
பகுதியில் 22 வீடுகள்
அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை
மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று
முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின்
உறுப்பினர் எட்வின் கிருஷ்ணானந்த ராஜா
, மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா
பிரபாகரன், வடக்கு கிழக்கு வீடமைப்பு
மீள் நிர்மாணத் திட்டப் பணிப்பாளர்
செ.பத்மநாதன் , மண்முனை வடக்கு பிரதேச
செயலாளர் திருமதி கலாமதி பத்மராசா
உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தேச நிர்மாண அமைச்சு இவ்வீடுகளை
அமைக்க சுமார் 71 இலட்சம் ரூபாவை
செலவிட்டுள்ளதாகவும் இது தவிர
மட்டக்களப்பு மாவட்டத்தில் 7700
வீடுகளமைக்கப்பட்டுள்ளதாகவும்
மட்டக்களப்பு மாவட்ட அரச ஊடகத்துறை
அதிகாரி அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
|
|
|
கடந்த 17 வருடங்களாக
ஐக்கிய தேசியக் கட்சியினர் தமிழ்
மக்களுக்கு செய்த நன்றிக் கடன் தான்
1980, 1983 இனக்கலவரங்களாகும்.
கடந்த 17 வருடங்களாக தமிழ் மக்களின்
வாக்குகளைப் பெற்று ஆட்சி நடத்திய
ஐக்கிய தேசியக் கட்சியினர் தமிழ்
மக்களுக்கு செய்த நன்றிக் கடன் தான்
1980, 1983 இனக்கலவரங்களாகும்.
தமிழ்மக்களை அனாதைகளாகவும்
அகதிகளாகவும் மாற்றிய பெருமையும்
ஐக்கிய தேசியக் கட்சியையே சாரும்.
கேகாலை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணி வேட்பாளரும் எட்டியாந்தோட்டை
பிரதேச சபை உறுப்பினருமான
ஆ.சத்தியானந்தன் தெரிவித்தார்.
எட்டியாந்தோட்டை கரகொடவில் இடம்பெற்ற
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்
உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது;
சப்ரகமுவ மாகாண சபை தேர்தலில் தமிழ்
மக்களிடம் வந்து வாக்கு கேட்க எதுவித
அருகதையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு
இல்லை. இந்த நாட்டின் தோட்டத்
தொழிலாளர்களுக்கு அதிக சேவையாற்றியது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியே.
தோட்டப் பாடசாலைகளை அரசுடைமையாக்கியது.
ஸ்ரீமாவோ ஆட்சியில்தான் அதேபோல தோட்டத்
தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப
நிதியைப் பெறும் சட்டத்தைக் கொண்டு
வந்ததும் மறைந்த பிரதமர் எஸ்.டபிள்யூ
ஆர்.டி.பண்டாரநாயக்காவின் ஆட்சியிலேயே.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின்
பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியின் போது
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு என்ற ஒரு
அமைச்சர் ஏற்படுத்தப்பட்டு தோட்டப்புற
மக்களின் அடிப்படைத் தேவைகள்
தீர்க்கப்பட்டு வந்தன.
இதேபோல மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்
மலையக தோட்டப்புற இளைஞர் யுவதிகளுக்கு
ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டதுடன்
மலையகப் பாடசாலைகளிலும் ஆசிரியர்
பற்றாக்குறையும் நீக்கப்பட்டது.
எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
ஆட்சிக் காலங்களில் தான் தோட்டப் பகுதி
மக்கள் பல நன்மைகளைப் பெற்று
வருகின்றனர் என்பது உண்மை.
சப்ரகமுவ மாகாண சபையின் நான்கு வருட
கால நிர்வாகத்தின் போது 12 தமிழ்ப்
பாடசாலைகளில் புதிய கட்டிடங்கள்
நிர்மாணிக்கப்பட்டதுடன் தமிழ்ப்
பாடசாலைகளில் நிலவி வந்த ஆசிரியர்
பற்றாக்குறையும் நீங்கியுள்ளது,.
கேகாலை மாவட்ட அமைச்சர்களின்
நிதியொதுக்கீட்டில் மாகாண சபை பல்வேறு
அபிவிருத்திப் பணிகள் தோட்டப்
பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டன.
கேகாலை மாவட்டத்தின் சுதந்திரக் கட்சி
அமைப்பாளராக தமிழரான என்னை ஜனாதிபதி
நியமித்துள்ளது தமிழருக்கு கிடைத்த
கௌரவமாகும் என்றார்.
|
|
|
<<முன்னைய
பதிவுகள்>> |
|
|
|