|
|
|
|
|
|
|
புதிதாக
அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள
கிழக்கு மாகாண தமிழ்
ஆசிரியர் சங்க தூதுக்குழு முதலமைச்சர்
சந்திரகாந்தனுடன் சந்திப்பு
புதிதாக அங்குரார்ப்பணம்
செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாணத் தமிழ்
ஆசிரியர் சங்கத்தின் தூதுக்குழு முதல்
தடவையாக கிழக்கு மாகாண முதலமைச்சர்
சிவநேசதுரை சந்திரகாந்தனை அவரது
அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை
பிற்பகல் சந்தித்துப்
பேச்சுவார்த்தைநடத்தியது.
30 நிமிடங்கள்
வரை நீடித்த இச்சந்திப்பின்போது,
கிழக்கு மாகாணத் தமிழ்மொழி மூல
ஆசிரியர் தொடர்பான சில முக்கிய
விடயங்கள் முதலமைச்சரின் கவனத்திற்குக்
கொண்டுவரப்பட்டதாக சங்கத்தின் தலைவர்
ஆர்.ஜெரோம் பத்திரிகை குறிப்பு ஒன்றில்
தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில்
கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்தை மீறி
60 வயதைப் பூர்த்தி செய்துள்ள அதிபர்,
ஆசிரியருக்குச் சேவை நீடிப்பு
வழங்கப்படுவது, புதிதாக
நியமிக்கப்படவிருக்கும் பட்டதாரி
மற்றும் தொண்டர் ஆசிரியர்களை
கஷ்டப்பிரதேசப் பாடசாலைகளுக்கு
நியமித்து அங்கு நிலவும் ஆசிரியர்
பற்றாக்குறையை நீக்குவது, தொடர்ந்தும்
கஷ்டப் பிரதேசங்களில் பணியாற்றும்
ஆசிரியர்களை வசதியான பாடசாலைகளுக்கு
இடமாற்றம் செய்வதோடு நகரப்
பாடசாலைகளில் தொடர்ந்து பல
வருடங்களாகக் கஷ்டப்பிரதேச சேவையின்றி
பணிபுரியும் ஆசிரியர்களை இடமாற்றச் சபை
மூலம் இடமாற்றி ஆசிரியர் சமநிலையைப்
பேணுவது, அண்மையில் திருகோணமலை நகரப்
பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பிரதி
அதிபர் ஒருவரின் திடீர் மரணம்
தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலை
ஆகிய விடயங்கள் சந்திப்பின் போது
கலந்துரையாடப்பட்டன.
கல்விச் சமூகத்தில் உள்ள இது போன்ற
பிரச்சினைகள் ஆதாரபூர்வமாக
முன்வைக்கப்படும் பட்சத்தில் அவை
தொடர்பாக உடன் நடவடிக்கை எடுத்து
தீர்க்கமுடியும் என்றும் முதலமைச்சர்
கூறியதாக செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திக் குறிப்பில் மேலும்
தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஆசிரியர்,மாணவர் சார்ந்த நலன்களுக்கு
அப்பால் சென்று சமூக நலன்கள்
தொடர்பாகவும் சில நடவடிக்கைகளை
ஆசிரியர் தொழிற்சங்கம் மேற்கொள்ள
வேண்டும் என்றும் முதலமைச்சர்
கேட்டுக்கொண்டார். குறிப்பாக,
மீள்குடியேற்றம், விவசாய நடவடிக்கைகள்
என்பவற்றில் மக்கள் ஆர்வமின்றி
இருப்பதாகவும் எனவே சங்கம் இவற்றை
அம்மக்களிடம் எடுத்துக்கூறி இது
தொடர்பான உதவிகளை எமது அமைச்சின் ஊடாக
அவர்கள் பெற்றுக்கொள்வதற்கான
வழிமுறைகளை விளங்கப்படுத்த வேண்டும்
என்றும் முதலமைச்சர் சங்கத்தூதுக்
குழுவைக் கேட்டுக்கொண்டார்'.
முதலமைச்சருடன் அவரது பிரத்தியேக
செயலாளர் கே.நந்தகோபன் சந்திப்பில்
பங்குபற்றினார். கிழக்கு மாகாண தமிழ்
ஆசிரியர் சங்கத்தின் தூதுக் குழுவில்
சங்கத்தின் தலைவர் ஆர்.ஜெரோம்,
உபதலைவர் எம்.ஏ.ஜெயினுலாப்தீன்,
நிர்வாகச் செயலாளர் எஸ்.பார்த்தீபன்
பொருளாளர் சி. ஜெயராஜா ஆகியோர்
இடம்பெற்றிருந்தனர்.
|
|
|
முல்லைத்தீவு பகுதியில்
நேற்று வெள்ளிக்கிழமை காலை
இருதடவை கடும்
விமானத்தாக்குதல்
முல்லைத்தீவு பகுதியில் நேற்று
வெள்ளிக்கிழமை காலை விமானப்படை
விமானங்கள் இரு தடவைகள் கடும்
தாக்குதலை நடத்தியுள்ளன.
விடுதலைப்புலிகளின் கனரக ஆயுத நிலைகள்
மீதும் விடுதலைப்புலிகளின் படகுகளின்
மீதுமே இந்தத் தாக்குதல்கள்
நடத்தப்பட்டதாக விமானப்படையினர்
தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு கடல்நீரேரிக்கு மேற்கே
சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள
புலிகளின் கனரக ஆயுதங்கள் மீதே காலை
6.10 மணியளவில் முதல் தாக்குதல்
நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாவது முறையாக பத்து நிமிட
இடைவெளியின் பின் காலை 6.20 மணியளவில்
முல்லைத்தீவு கடல்நீரேரியில் விமானத்
தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அப்பகுதியில் நின்ற மூன்று படகுகள்
மீது குண்டு வீச்சு விமானங்கள் கடும்
தாக்குதலை நடத்தியதில் இரு படகுகள்
முற்றாக அழிக்கப்பட்டதுடன் ஒரு படகு
பலத்த சேதமடைந்து எரிந்து
கொண்டிருந்ததாகவும் விமானப்படையினர்
தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று முன்தினம் வியாழக்கிழமை
நண்பகல் விடத்தல்தீவுக்கு வடக்கே
குண்டு வீச்சு விமானங்களும் தாக்குதல்
ஹெலிகொப்டர்களும் கடும் தாக்குதலை
நடத்தியதாகவும் விமானப்படையினர்
தெரிவித்துள்ளனர். |
|
|
மட்டக்களப்பு
பாலமீன்மடு
மனித
எலும்புக்கூடுகளின் எச்சங்கள் மரபணு
சோதனைக்காக கொழும்புக்கு அனுப்பிவைப்பு
மட்டக்களப்பு பாலமீன்மடு மனிதப்
புதைகுழியிலிருந்து
தோண்டியெடுக்கப்பட்ட 21 மனித
எலும்புக்கூடுகளின் எச்சங்கள் மரபணு (டி.என்.ஏ.)
பரி சோதனைக்காக கொழும்புக்கு
அனுப்பப்பட்டுள்ளன. பாலமீன்மடு
பகுதியில் கடந்த திங்கட்கிழமை கிணறு
தோண்டக் குழி வெட்டிய போது
எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்படவே
புதன்கிழமை மாவட்ட நீதிபதி
முன்னிலையில் புதைகுழி தோண்டப்பட்டது.
இதன் போது புதைகுழிக்குள்ளிருந்து 21
எலும்புக்கூடுகளுக்குரிய பாகங்கள்
எச்சங்களாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு
சட்டவைத்திய அதிகாரியிடம்
ஒப்படைக்கப்பட்டன. இவற்றுடன், புதைகுழி
மண்ணும், ஆண்கள் பெண்களது ஆடைகளும்
துப்பாக்கி வெற்று ரவைகள் சிலவும்
கைப்பற்றப்பட்டு அவையும் கவனமாகப் பொதி
செய்யப்பட்டு பரிசோதனைக்காக
கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக
மட்டக்களப்பு ஆஸ்பத்திரி வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
இந்த எலும்புக்கூடுகளுக்குரியவர்கள்
யார் இவர்களது மரணங்களுக்கான காரணம்
என்ன என்பது குறித்து கண்டறிய ஆய்வு
கூட பரிசோதனைகளும் மரபணு பரிசோதனையும்
கொழும்பில் மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த 3 முதல் 4 வருடங்களுக்கிடையில்
இந்த 21 உடல்களும் மேற்படி
புதைகுழிக்குள்
புதைக்கப்பட்டிருக்கலாமெனக்கருதப்படுகிறது.
இது குறித்து உடனடியாக விசாரணைகளை
மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு
மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி
பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இது
தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைகள்
நடத்தப்பட வேண்டுமெனவும் இதற்கு
ஐ.நா.உதவ வேண்டுமெனவும் மனித உரிமை
அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
|
|
|
இவ்வருடம் நடைபெறவுள்ள
க.பொ.த.உயர்தரப்
பரீட்சைக்கு இவ்வருடம்
வவுனியாவிலிருந்து 1495
பரீட்சார்த்திகள்
இவ்வருடம் நடைபெறவுள்ள க.பொ.த.உயர்தர
பரீட்சையில் வவுனியா
மாவட்டத்திலிருந்து மொத்தம் 1495
மாணவர்கள் பரீட்சைக்காக தோற்றவுள்ளனர்.
மாவட்ட ரீதியாக 18 பரீட்சைநிலையங்களில்
நடைபெறவுள்ள இப் பரீட்சையில்,
பாடசாலைகளிலிருந்து 1248 மாணவரும்
தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக 247
மாணவர்களும் தோற்றவுள்ளனர்.
இதேவேளை இப்பரீட்சைக்கென வவுனியாவின்
இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களில்
7 பரீட்சை நிலையங்களும், இராணுவக்
கட்டுப்பாடற்ற பகுதியிலுள்ள கனகராயன்
குளத்தில் ஒரு இணைப்பு பரீட்சை
நிலையத்தையும் அமைக்க
திட்டமிடப்பட்டுள்ளதாக வவுனியா
தெற்குவலய கல்விப்பணிமனை அதிகாரிஒருவர்
தெரிவித்தார்.
இணைப்பு நிலையங்களாக செயற்படவுள்ள
பாடசாலைகளாக வவுனியா
தமிழ்மத்தியமகாவித்தியாலயம்,
செட்டிகுளம் மகாவித்தியாலயம்,
பூவரசன்குளம் மகாவித்தியாலயம்,
நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம்,
இறம்பைக்குளம் மகளிர்மகாவித்தியாலயம்,
பெரியகோமரசன்குளம் மகாவித்தியாலயம்
புதுக்குளம் மகாவித்தியாலயம்
ஆகியபாடசாலைகள் தெரிவு
செய்யப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தின் பிராந்திய
சேகரிப்பு நிலைய இணைப்பாளராக தெற்கு
வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி
வீ.ஆர்.ஏ.ஒஸ்வோல்ட்
நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் 130
உத்தியோகத்தர்கள் பரீட்சை
கடமைகளுக்காக நியமிக்கப்படவுள்ளனர்.
இப்பரீட்சைகள் அடுத்த மாதம் 6 ஆம்
திகதி முதல் செப்டம்பர் முதலாம் திகதி
வரை நடைபெறுமென அதிகாரிகள்
தெரிவித்தனர்.
மாணவர்கள் பரீட்சைகளில் சுமுகமாக
கலந்து கொள்வதற்கு வசதியாக பரீட்சை
நடைபெறும் காலத்தில் போரில்
ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் தாக்குதல்
நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்
கொள்ளுமாறு கல்விச் சமூகம் வேண்டுகோள்
விடுத்துள்ளது. |
|
|
இலங்கையின் வர்த்தக
நிலுவை
எரிபொருள்செலவு
அதிகரிப்பு, ஏற்றுமதி மந்தநிலை
வர்த்தக நிலுவை 79% அதிகரிப்பு
இலங்கையின் வர்த்தக நிலுவை
நடப்பாண்டின் முதல் 5 மாதங்களில் 79
சதவீதத்தால் 2.5 பில்லியன் டொலர்களாக
அதிகரித்துள்ளது எரிபொருட்களுக்கான
அதிகரித்த செலவினமும் கைத்தொழில்
ஏற்றுமதித் துறையில் ஏற்பட்ட தாமதமுமே
இதற்கு காரணமென அரசாங்க தகவல்கள்
தெரிவிக்கின்றன.
மே மாதம் வரையிலான 3 மாத
காலப்பகுதியில் இறக்குமதிகள் 34.9
சதவீதத்தால் 5.9 பில்லியன் டொலராக
அதிகரித்திருக்கிறது. ஆனால் ஏற்றுமதி
12.6 சதவீதத்தால் 3.2 பில்லியன்
டொலர்களாக அதிகரித்திருப்பதாக மத்திய
வங்கி கூறியுள்ளது. மே மாதம் ஏற்றுமதி
17 சதவீதத்தால் 745.9 மில்லியன்
டொலர்களால் உயர்வடைந்திருக்கிறது.
அதேசமயம் மே மாதம் இறக்குமதி 24.2
சதவீதத்தால் 1258 மில்லியன் டொலர்களால்
அதிகரித்திருக்கிறது. இதனால் வர்த்தகப்
பற்றாக்குறை 36.4 சதவீதத்தால் 513.2
மில்லியன் டொலர்களால் உயர்வடைந்துள்ளது.
கைத்தொழில்துறை ஏற்றுமதிகள் 7.6
சதவீதம் அதிகரித்துள்ளபோதும் ஆடைகள்
ஏற்றுமதி 3.8 சதவீதமே
அதிகரித்திருக்கிறது. ஆனால் விவசாய
ஏற்றுமதி 34.9 சதவீதமாக 728 மில்லியன்
டொலர்களாக உயர்வடைந்துள்ளது. தேயிலை
மட்டும் 42.6 சதவீதத்தால் 507.1
மில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளது.
மே மாதம் வரையிலான 5 மாதகாலப்பகுதியில்
இறக்குமதி 3.3 பில்லியன் டொலர்களாகும்.
பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதி
1.4 பில்லியன் டொலர்களாகுமென
மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்
நுகர்வுப் பொருட்களின் இறக்குமதி 37.4
சதவீதத்தால் 1.1 பில்லியன் டொலர்களால்
உயர்வடைந்திருக்கிறது. இறக்குமதி
அதிகரிப்பில் 58 சதவீதம் எரிபொருளும்
21 சதவீதம் உணவுப் பொருட்களும்
இடத்தைப்பிடித்திருப்பதாக மத்திய வங்கி
கூறுகிறது.
அதேசமயம் சென்மதி நிலுவை சாதகமான
முறையில் 292 மில்லியன் டொலராக மே மாத
இறுதியில் காணப்படுகிறது. அந்நியச்
செலாவணி கையிருப்பு 3355 பில்லியன்
டொலர்களாகும். இது 3.2 மாதகாலப்பகுதி
இறக்கு மதிக்கு ஈடுசெய்யக் கூடிய
தொகையாகும். |
|
|
கம்பளை நகரில் நிலவும்
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த
நடவடிக்கை
நகரசபைத் தலைவர்
தெரிவிப்பு
கம்பளை நகரில் நிலவும்
போக்குவரத்து நெரிசலைக்
கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கம்பளை நகர
சபைத் தலைவர் சரத் காமினி
ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கம்பளை நகர வர்த்தகர்களுடனான
சந்திப்பொன்று அண்மையில் நகர சபை
மண்டபத்தில் நடைபெற்றபோது இவ்வாறு
தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது.
கம்பளை நகரிலுள்ள பிரதான வீதிகளான
அம்பகமுவ, மலபார் வீதிகளில்
போக்குவரத்து நெரிசல் பெருமளவு
காணப்படுகின்றது. இதற்குப் பிரதான
காரணம் நடைபாதை வியாபார நடவடிக்கைகளும்
முச்சக்கரவண்டித் தரிப்பிடமுமாகும்.
தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின்
நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுளள
நவீன பொதுச் சந்தைக் கட்டிடத்தை
திறந்துவைக்க நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது திறந்துவைக்கப்பட்ட பின்பு
வியாபாரிகள் பலரும் வர்த்தக
நிலையங்களைப் பெற்றுக்கொள்வர் இதனால்
பிரதான வீதிகளில் வாகன நெரிசல்
இடம்பெறவாய்ப்பில்லை.
கம்பளை நகரை முதலீட்டாளர்கள்
கவரப்படக்கூடிய நகரமாக
மாற்றியமைப்பதற்கான வேலைத் திட்டங்கள்
முன்னெடுக்கப்படுகின்றன இதனால்
முதலீட்டாளர்களின் முதலீடுகள் பெருகி
இப்பகுதி இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பு
பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள்
ஏற்படும் என்றார்.
|
|
|
<<முன்னைய
பதிவுகள்>> |
|
|
|