<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

வன்னிப் போர்முனையில் தற்போது விமானப் படையினர் புலிகள் மீது புதிய வகை எரிகுண்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்கராயன்குளத்தில் தொடர்ந்து உக்கிர சமர் இந்தச் சமர்களில் புலிகள் தரப்பில் 25 பேர்  பலி; 15 பேர் படுகாயம்.

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:29 செப்டம்பர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

வன்னிப் போர்முனையில் தற்போது விமானப் படையினர் புலிகள் மீது புதிய வகை எரிகுண்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரண்டு மாதங்களாக நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன் வரையிலுமான களமுனைகளில் கடுமையான எதிர்த் தாக்குதல்களை சந்தித்து வருகின்ற படையினரின் புதிய வகையான திரவ எரிகுண்டுகளை விமானப்படை விமானங்கள் மூலம் புலிகள் மீது வீசத் தொடங்கியுள்ளது.

விமானப் படை கடந்தவாரம் இத்தகைய குண்டுகளை கிளிநொச்சி மற்றும் அக்கராயன் களமுனைகளை அண்டிய பகுதிகளில் வீசியுள்ளது. இக்குண்டுகளினால் ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

விமானத்திலிருந்து வீசப்படும் இக்குண்டுகள் தரையில் மோதி வெடித்ததும் பாரிய நெருப்புக் கோளங்களை உருவாக்குவதுடன் வெடிக்கும் சுற்றாடலில் இருந்து வாயுக்களையும் அகற்றும் தன்மை கொண்டது. எனவே, அப்பகுதியில் வசிப்பவர்கள் மூச்சுத்திணறி உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

தாக்குதல் நடத்தப்பட்டதும் ஒருவர் உயிரிழக்காவிட்டாலும் பாரிய பதுங்கு குழிகளுக்கு வெளியில் இந்தக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தால் பதுங்கு குழிகளினுள் இருப்பவர்களின் சுவாசப் பையினுள்ளி ருக்கும் ஒட்சிசனைக் கூட உறிஞ்சி வெளியேற்றிவிடுமென்பதால் அவர் மரணமடையும் நிலையேற்படும்.

நான்காவது ஈழப்போரில் விமானப்படை பதுங்குகுழிகளை தகர்க்கும் கனரக குண்டுகளைப் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது எரி குண்டுகளை பயன்படுத்த தொடங்கியுள்ளது.

அக்கராயன் மற்றும் வவுனிக்குளம் பகுதிகளில் முன் நகர்வில் ஈடுபட்ட படையினர் மீது விடுதலைப்புலிகள் "சி.எஸ்.' எனப்படும் நச்சுவாயுவைப் பயன்படுத்தி வந்த நிலையில் எரிகுண்டுகளை புலிகள் மீது விமானப்படை விமானங்கள் வீசத் தொடங்கியுள்ளது.

அக்கராயன்குளத்தில் தொடர்ந்து உக்கிர சமர் இந்தச் சமர்களில் புலிகள் தரப்பில் 25 பேர்  பலி; 15 பேர் படுகாயம்.

வன்னியில் தொடர்ந்தும் உக்கிர சமர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடும் சமரில் ஐந்து படையினர் கொல்லப்பட்டும் 15 க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துமுள்ளனர் கிளிநொச்சியில் வன்னேரி அக்கராயன்குளம் பகுதியிலும் கொக்காவிலுக்குச் சமீபமாகவும் கடந்த மூன்று நாட்களாக கடும் சமர் நடைபெற்று வருகிறது.

அக்கராயன்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாரிய படைநகர்வை ஆரம்பித்த படையினர் வன்னேரி மற்றும் கொக்காவிலுக்கு மேற்கிலிருந்தும் பலத்த முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக கடும் ஆட்லறிஷெல்தாக்குதலும் விமானத் தாக்குதலும் நடைபெற்று வருகையில் படையினர் இந்த முன்நகர்வு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அக்கராயன்குளம் பகுதியை மையமாக வைத்தே படையினர் இந்தப் பாரிய முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . ஞாயிற்றுக்கிழமை முழுநாளும் இந்த உக்கிர சமர் நீடித்துள்ளது.

படையினரின் முன்நகர்வு முயற்சிக்கெதிராக புலிகளும் கடும் ஷெல் தாக்குதலையும் மோட்டார் தாக்குதலையும் நடத்தி படையினரின் முன்நகர்வு முயற்சிகளுக்கு பலத்த தடைகளைப் போட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

"ஏ9' வீதிக்கு மேற்காக கொக்காவில் பகுதியில் வெள்ளிக்கிழமை கடும் சமர் நடைபெற்ற போதும் சனிக்கிழமை அந்தப் பகுதியில் இடைக்கிடையே சமர் நடைபெற்றுள்ளது.

அக்கராயன்குளம் மற்றும் வன்னேரிப் பகுதியிலேயே உக்கிரசமர்கள் நடைபெற்றுள்ளன. இந்தச் சமர்களில் புலிகள் தரப்பில் 25 பேர் கொல்லப்பட்டதுடன் தங்கள் தரப்பில் ஐவர் கொல்லப்பட்டும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

யாழ் கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு.

யாழ் சுப்பர்மடம், மயிலிட்டி மற்றும் காங்கேசன்துறை கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் வியாழக்கிழமை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விஷேட செயற்பாட்டுக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தங்களது தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி யுள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு விடுத்துள்ளது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்பர்மடம், மயிலிட்டி மற்றும் காங்கேசன்துறை பகுதி வாழ் கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுப்படுவதற்கான அனுமதி உரிய வகையில் கிடைக்கப் பெறாமை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எடுத்துக் கூறியதையடுத்து, உரிய பாதுகாப்புத் தரப்பினருடன் உடனடியாகத் தொடர்பு கொண்ட அமைச்சர் மேற்படி கடற்றொழிலாளர்கள் தொழில் புரிவதற்கான தடைகள் பற்றி கலந்துரையாடியதையடுத்து தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ் சுப்பர்மடம், மயிலிட்டி மற்றும் காங்கேசன்துறை பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களது குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உடனடி நடவடிக்கை காரணமாக இத்தொழிலாளர்கள் தங்களுக்கு தொழில்துறையில் ஈடுபடவாய்ப்பு கிட்டியுள்ளமை குறித்து தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாகவும் அமைச்சின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் உதவும் உள்ளங்கள் அமைப்பு கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ். சந்திரகாந்தனுக்கு  நன்றி தெரிவிப்பு.

கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் நன்மைபெறும் வகையில் இன நல்லுறவுப் பணியகமொன்றினை மட்டக்களப்பு மாவட்டத்தில் திறந்து வைத்தமைக்காக மாகாண முதலமைச்சர் எஸ். சந்திரகாந்தனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் ""உதவும் உள்ளங்கள்' அமைப்பின் தலைவர் கே.எல். அகீல் அர்ஷாத் மேற்படி நன்றியறிதலைத் தெரிவித்து முதலமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

கிழக்கில் மூவின மக்களும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் வாழ வேண்டும் என சில அரசியல்வாதிகள் நீண்டகாலந்தொட்டு முயற்சி செய்து வந்துள்ளனர். எனினும், அவ்வப்போது சில பிரச்சினைகள் தலைதூக்கியமை மிகவும் கவலை தருவதாகும்.

எனினும் தாங்கள் முதலமைச்சர் பதவியினை ஏற்று சொற்ப நாட்களுக்குள் மூவின மக்களிடத்திலும் சரியான புரிந்துணர்வு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, பரஸ்பரம் ஐக்கியம், சகோதரத்தன்மை போன்றவைகளை நிலைநாட்டும் வகையில் ஒரு நிர்வாகக் கட்டமைப்பினைப் பேணி வருகின்றமை மகிழ்ச்சிமிக்க விடயமாகும். இதன்மூலம் நம் அனைத்து மக்கள் இடத்திலும் இன நல்லுறவு பேணப்படும் என்பது நிச்சயமாகும்.

இன நல்லுறவைக் கட்டிக்காத்து வளர்ப்பதற்காக கிழக்கு மாகாணத்தில் ஒரு குட்டிக் காந்தியாக தாங்கள் செயற்பட்டவர் எனும் நாமம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் தங்களுக்கு சூட்டப்பட வேண்டுமென எமது உதவும் உள்ளங்கள் அமைப்பு பெரிதும் விரும்புகின்றது இவ்வாறு அம்மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்.உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்துக்கு 20 கோடி ரூபா செலவில் புதிய இரு மாடிக் கட்டிடம்.

யாழ்ப்பாணம் உயர் தொழில் நுட்பவியல் நிறுவனத்துக்கென இருபது கோடி ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு மாடிக் கட்டிடம் நேற்றுக் காலை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக் கட்டிடத்தை உயர் கல்வியமைச்சின் செயலாளர் திருமதி ஆர்.ஏ.டி.ஆர்.மாலினி பீரிஸ் திறந்து வைத்தார்.

நீண்ட காலமாக இந் நிறுவனம் சொந்தக் கட்டிடம் இல்லாத நிலையில் வாடகைக் கட்டிடமொன்றிலேயே இயங்கி வந்தது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உதவியால் சுனாமி புனர் நிர்மாண செயற்றிட்டத்தின் குவைத் நாட்டின் கடனுதவித் திட்டத்தின் கீழ் இக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இக் கட்டிடம் அமைப்பதற்கான அரச காணியை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தோவனந்தா யாழ்ப்பாணம் குருநகரில் பெற்றுக் கொடுத்திருந்ததையடுத்து, ஒரு வருட காலத்தில் கட்டிட வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் சகல வசதிகளும் கொண்ட உயர் தொழில்நுட்பவியல் நிறுவனமாக இது இயங்கவுள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையில் இணைந்த ஊழியருக்கு ஓய்வூதியம் சட்ட மூலம் நிறைவேற்றம்.

தேசிய வீடமைப்பு திணைக்களத்திலிருந்து தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையில் இணைந்து கொண்ட ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான சட்டமூலம் உட்பட மூன்று சட்டமூலங்கள் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

வீடமைப்பு திணைக்கள ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலத்தை அமைச்சர் பேரியல் அஷ்ரப் சபையில் சமர்ப்பித்தார். இந்த சட்டமூல விவாதம் சபையில் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் தொழிலுக்கு அமர்த்தப்பட்ட அலுவலர்களுக்கும் சேவையாளருக்கும் அவர்கள் அதிகார சபையில் இருந்து விலகும் காலத்தில் ஓய்வூதியம் வழங்கப்படும். அவர்களின் ஓய்வூதியத்திற்கான ஆரம்பப்பணிக்காலம் வீடமைப்பு திணைக்களத்தில் கடமையாற்றிய காலப்பகுதியும் உள்ளடங்கலாக கணிக்கப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்படுமென அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக அதிகாரசபையால் ஒருவர் தொழிலுக்கு அமர்த்தப்பட்டது எவ்வாறாக இருந்தாலும் அதிகாரசபையினால் தொழிலுக்கு அமர்த்தப்பட்ட திகதியிலிருந்து சேவைக்காலம் முடிவடையும் திகதிவரை அவர் வீடமைப்புத் திணைக்களத்தில் தொடர்ந்து பதவியில் இருந்தவராகக் கருதப்படும். இவ்வாறு 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு முன்திய தினத்தில் திணைக்களத்தில் வேலைக்கு சேர்ந்து பின்னர் அதிகாரசபையில் இணைந்தவர்களே இந்த சட்டமூலத்தின் படி ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்களாவர்.

இவர்கள் சார்பில் தொழில் தருநரால் செலுத்தப்பட்ட ஊழியர் சேமலாப நிதியம், நம்பிக்கை பொறுப்பு நிதியம், சேவைக்காலக் கொடுப்பனவு ஆகியவற்றை மீளப் பெற்றுக்கொள்வதற்கும் இந்த சட்டமூலம் வழிசெய்கிறது.

இதேவேளை, அமைச்சர் தினேஸ் குணவர்த்தன முன்வைத்த நகரக் குடியமர்த்தல் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டமூலம், நகர அபிவிருத்தி அதிகார சபைச்சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பனவும் விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்பட்டன.

இறக்குவானையில் இரு குழுவினரிடையே மோதல் பிரதேசசபை உறுப்பினர் உட்பட இருவர் படுகாயம்.

இறக்குவானை நகரில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கொடக்கவெல பிரதேச சபை உறுப்பினர் உட்பட பஸ் சாரதியொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பலத்த தாக்குதலுக்குள்ளான பஸ் சாரதி மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கொடக்கவெல பிரதேசசபை உறுப்பினர் சரத் லிண்டன் பஸ் சாரதி ஆர்.சனத் ஆகியோரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டி சாரதியொருவருடன் இச்சம்பவம் ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து ஏனையோரும் ஒன்று சேர்ந்து கும்பலாக எதிரணியினரை தாக்கியுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்துள்ளதாகவும் ஏனையோர் தேடப்பட்டு வருவதாகவும் இறக்குவானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.நெலுந்தெனிய தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண சுகாதார சுதேச வைத்திய மற்றும் மகளிர் விவகார அமைச்சர் டி.ரஞ்சித் தெ சொய்சா, சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் அநுர அழகிய வண்ண, கொடக்கவெல பிரதேசசபை தலைவர் வை.ஜி.மங்களதிஸ்ஸ ஆகியோரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலைக்குச் சென்று சம்பவத்தை ஆராய்ந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டனர்.

கஞ்சா இல்லையேல் ஆயுர்வேத வைத்தியத் துறையை மூடவேண்டிய நிலையேற்படும் அமைச்சர் திஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரான விஜித ஹேரத் எம்.பி.எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் கரலியத்த இவ்வாறு கூறினார்.

ஏற்கனவே சட்டவிரோத போதைப் பொருள் மற்றும் மதுபான பாவனையினால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சுதேச அமைச்சு கஞ்சா பயிர் செய்ய அனுமதி கோரியிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாக விஜித ஹேரத் இதன் போது கூறினார்.

சட்டவிரோத மதுபானங்களை அருந்தியதில் அண்மையில் கம்பஹா, வெலிவேரிய பிரதேசத்தில் பலர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் மோசமான நிலையில் இருப்பதாகவும் இதேபோன்றதொரு சம்பவம் எற்கனவே 3 மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் உதாரணங்களாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன் ஜனாதிபதியின் "மதுவுக்கு முற்றுப்புள்ளி' வேலைத்திட்டத்தின் மூலம் இவ்வாறான நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லையே என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் திஸ்ஸ கரலியத்த;

கஞ்சா முக்கியமான ஒளடதம். அதை சரியான முறையில் பயன்படுத்தவேண்டும். நாம் சட்டவிரோத பாவனைக்காக அனுமதி கோரவில்லை. சட்டவிரோதமாக பயிர்செய்ய எமது அமைச்சு ஒரு போதும் இடமளிக்காது. இந்த ஒளடதம் (கஞ்சா) இல்லாவிட்டால் ஆயுர்வேத துறையை மூட வேண்டியிருக்கும். சட்ட விரோத உற்பத்திக்கு நாம் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

நாடுபூராவும் விசர் நாய்க்கடிகளுக்குள்ளாகி 2007 ஆம் ஆண்டு 56 பேர் உயிரிழப்பு வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த வருடம் விசர் நாய்க்கடியினால் ஐம்பத்தாறு பேர் இறந்துள்ள போதும் யாழ். மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே இறந்திருப்பதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை விலங்கு விசர் நோய் தடுப்புதினத்தையொட்டி அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

யாழ்.மாவட்டத்தில் உரியகாலத்தில் நாய்களுக்கு விசர்நாய் தடுப்பு மருந்து ஏற்றப்பட்டுவருவதாலும் நாய்க்கடிக்கு உள்ளானவர்களுக்கு சகல வைத்தியசாலைகளிலும் பூரண சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாலும் இறப்பு விகிதத்தை முற்றாக கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

எமது பிரதேசத்தில் 2002 ஆம் ஆண்டு 10 பேரும், 2003 ஆம் ஆண்டில் 7 பேரும் , 2004 ஆம் ஆண்டு 13 பேரும், 2005 ஆம் ஆண்டு 5 பேரும், 2006 ஆம் ஆண்டு 8 பேரும், 2007 ஆம் ஆண்டு ஒருவரும் விசர் நாய்க்கடிக்கு மரணமாகியுள்ளனர். இவ்வாண்டு எவரும் மரணமாகவில்லை.

பெரும்பாலும் நாய்கள் மூலமாக நோய்தொற்று ஏற்படுவதால் நாய்க்கடிக்கு உள்ளாகும் எவரும் மரணத்தை தவிர்ப்பதற்காக உடனடியாக தடுப்பு மருந்தேற்றுவது மரணத்தில் இருந்து பாதுகாக்க முடியும்.

<<முன்னைய பதிவுகள்>>

Last update: 20-06-2008. Desigin and Copyright