|
நல்லூர் கந்தன்
இரதோற்க்ஷவம் பல்லாயிரக்கணக்கான
பக்தர்கள்
குடாநாட்டின் பல
பகுதிகளிலிருந்தும் விசேட போக்குவரத்து.
வரலாற்றுச் சிறப்பு
மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில்
வருடாந்த இரதோற்சவம் நேற்று
வெள்ளிக்கிழமை காலை பல்லாயிரக்கணக்கான
பக்தர்கள் கூடிய ஜன சமுத்திரத்துக்கு
மத்தியில் மிகவும் பக்திபூர்வமாக
நடைபெற்றது.
அதிகாலை 5 மணி முதல் பூஜைகள் இடம்
பெற்று 6 மணிக்கு நடைபெற்ற வசந்த
மண்டபப் பூஜைகளையடுத்து வள்ளி,
தெய்வானை சமேதராக ஆறுமுருகப்பெருமான்
காலை 7.30 மணிக்கு தேரில்
எழுந்தருளியதும் 8 மணிக்கு வீதியுலா
ஆரம்பமானது.
குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும்
ஆலயத்தில் பெருவெள்ளமெனத் திரண்ட
பக்தர்கள் கந்தா, கடம்பா, கதிர்வேலா,
அரோகரா என உரத்துக் கேஷம் எழுப்பி தமது
துன்பதுயரங்களையெல்லாம் கூறி கண்ணீர்
மல்க கந்தனை வேண்டி வழிபட்டனர்.
தேரோடும் வீதியில் பிரமாண்டமான காண்டா
மணி பெரும் ஓசை எழுப்பியவாறு முன்னே
செல்ல வீதிவழியே ஆறுமுகப்பெருமான் வீதி
உலா வந்தார்.
தேருக்குப்பின்னால் பஜனைக் குழுவினர்
இசைக்கருவிகள் சகிதம் நல்லூர் குமரனின்
பக்திச்சிறப்புகளைப் பாடிப் பணிந்து
சென்றனர்.
இவர்களுடன் நல்லைக் கந்தன்
இரதோற்சவத்தையொட்டி நயினை நாகபூசணி
அம்பாள் ஆலயத்திலிருந்து வருடாவருடம்
புறப்பட்டு வரும் விசேட பஜனை
யாத்திரிகள் குழுவும் பக்திகீதங்கள்
இசைத்தவாறு இணைந்து கொண்டது.
அடியவர்கள் ஆட்டக்காவடி, தூக்குக்காவடி,
பறவைக் காவடி, கரகம், பாற்செம்பு,
அடியளித்தல், அங்கப்பிரதட்சணம்
ஆகியவற்றை எடுத்தும் தமது
நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
வீதி உலாவை முடித்துக்கொண்டு காலை 9
மணிக்கு தேர் இருப்பிடம் வந்து
சேர்ந்தது. இதையடுத்து தேரிலிருந்து
பச்சை சாத்தியவாறு கீழிறங்கிய
ஆறுமுகப்பெருமான் அடியார்களுக்கு
காட்சியளித்தவாறு 9.45 மணியளவில்
இருப்பிடம் திரும்பினார்.
ஆலய உற்சவத்தில் பெருமளவான பக்தர்கள்
கலந்து கொள்வர் என்பதால்
போக்குவரத்துச் சபை, தனியார்
மினிபஸ்கள் விசேட போக்குவரத்துச்
சேவைகளை ஆலயம் வரை நடத்தியிருந்தன.
பெருந்திரளான பக்தர்களுக்கு திருவமுது
செய்யும் வகையில் கந்தன் அன்னதான
சபையினர், மாநகரசபை நீர்வழங்கல்
பிரிவினர், துர்க்காமணி மண்டபத்தினர்
ஆகியோர்ரின் ஏற்பாட்டில் சிறப்பாக
மகேஸ்வர பூஜையும் (அன்னதானமும்)
ஒழுங்கு செய்யப்பட்டிருந்து.
நேற்று மாலை இடம் பெற்ற விசேட உற்சவ
நிகழ்வுகளிலும் பெருமளவான பக்தர்கள்
கலந்து கொண்டு அர்ச்சனைகளைச் செய்து
வழிபாடாற்றிச் சென்றனர்.
நல்லைக் கந்தனின் தீர்தோற்சவம் இன்று
காலை 7 மணிக்கும் பூங்காவனத் (கல்யாண)
திருவிழா நாளை மாலை 4 மணிக்கும் இடம்
பெறவுள்ளன. இவ்விரு நிகழ்வுகளிலும்
பெருமளவான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்
என எதிர்பார்க்கப்படுகின்றது.
|