நீண்டகாலமாகவே
போக்குக் காட்டிவரும் வடகொரியாவுக்குள்
நுழைவதற்கு அமெரிக்கா திகதி
குறித்துவிட்டது
போலத்தெரிகிறது.அண்மையில் உலகப் பயணம்
மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் ஹிலாரி
கிளிண்டன் இதற்கான திரியைக் கொளுத்திப்
போட்டிருக்கிறார்.
தென்கொரியக் கப்பல்
மூழ்கடிக்கப்பட்ட விவகாரத்தில்
வடகொரியாவுக்குத் தொடர்பிருப்பதாக
அவரது தென்கொரியப் பயணத்தின்போது
குற்றம் சாட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து
இதுவரை இல்லாத அளவுக்கு தென்கொரிய
மற்றும் அமெரிக்கப் படைகளின்
கூட்டுப்பயிற்சி தொடங்கியிருக்கிறது.
இது பசுபிக் பிராந்தியத்தில் கடும்
பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.
பின்னணி இதுதான்.
கடந்த மார்ச்சில் தென்கொரிய மற்றும்
வடகொரிய கடல் எல்லைப்பகுதியில்
தென்கொரியாவுக்குச் சொந்தமான செவ்னன்
என்கிற கப்பல் சென்று கொண்டிருந்தது.
இதில் பணியாளர்கள் உட்பட 104 பேர்
இருந்தனர். கப்பல் சென்று கொண்டிருந்த
மஞ்சள் கடல் பகுதி தென்கொரிய
எல்லைக்குள் தான் வருகிறது என்றாலும்
அது வடகொரிய கடற்கரைப் பகுதியிலிருந்து
வெறும் 10 கி.மீ. தொலைவுதான்.
மார்ச் 26 ஆம் திகதி
இந்தக்கப்பல் மர்மமான முறையில்
மூழ்கடிக்கப்பட்டது.இரு துண்டுகளாகப்
பிளந்த கப்பல் சில மணி நேரங்களில்
முழுவதுமாக மூழ்கியது. இதில் கப்பலில்
இருந்த 46 பேர் பலியாகினர். 58 பேர்
காப்பாற்றப்பட்டனர். இவர்களை மீட்கும்
பணியிலும் உயிர்ச்சேதங்கள்
ஏற்பட்டன.கடந்த சில ஆண்டுகளில் இந்தப்
பிராந்தியத்தில் நடந்த மிகப்பெரிய கடல்
தாக்குதலாக இது கருதப்படுகிறது.
வழக்கம்போலவே, இந்தத்
தாக்குதலின்போதும் முதல் சந்தேகப்
பார்வை வடகொரியா மீதுதான் விழுந்தது.
கடல் கண்ணிவெடி மூலமாக வடகொரியாவே
இந்தத் தாக்குதலை நடத்தியதாக
தென்கொரியாவும் அமெரிக்காவும்
குற்றம்சாட்டின.தாக்குதல் நடந்த
பகுதியிலிருந்து சற்றுத் தொலைவில்
வடகொரிய நீர்மூழ்கிக்கப்பல்
மையமிட்டிருந்ததாகவும்
கூறப்பட்டது.பிறகு
பிரிட்டன்,ஆஸ்திரேலியா,ஸ்வீடன்,அமெரிக்கா,தென்கொரியா
ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களைக்
கொண்ட குழு விசாரணை நடத்தியது.
அண்மையில் ஹிலாரி கிளின்டன்
தென்கொரியாவுக்குச் சென்றிருந்தபோது
இந்த விசாரணை அறிக்கை
வெளியிடப்பட்டது.பல தரப்பினரும்
எதிர்பார்த்தபடியே வடகொரியாதான்
தாக்குதல் நடத்தியது என்பதற்கான
ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அந்த
அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. கடல்
கண்ணிவெடித் தாக்குதலில் பயன்பட்டதாகக்
கூறப்படும் வெடிகுண்டின் சிதறிய
பாகங்கள் செய்தியாளர்களுக்குக்
காட்டப்பட்டன.இதைத் தொடர்ந்து
வடகொரியாவுக்கு எச்சரிக்கை
விடுக்கப்பட்டது.
இந்த அறிக்கையை வடகொரியா திட்டவட்டமாக
மறுத்திருக்கிறது.வெடிகுண்டின்
முக்கிய பாகங்கள் இன்னும் சேதமடையாமல்
இருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும்
அந்தநாட்டு அதிகாரிகள் இந்த அறிக்கையை
திட்டமிட்ட சதி எனக்
கூறியிருக்கிறார்கள். அமெரிக்காவின்
நவீன கண்ணிவெடிகளின் காரணமாகவே நடந்த
விபத்து என சீனா கூறியிருக்கிறது. போர்
பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும்
சம்பந்தப்பட்ட நாடுகளை சீனா
கேட்டுக்கொண்டிருக்கிறது.
கப்பல் மூழ்கடிப்பு,அதையடுத்த போர்
ஒத்திகை ஆகியவற்றுக்குப் பின்னணியில்
வேறு சில அரசியல் காரணங்கள்
இருக்கக்கூடும் என்கிற சந்தேகம்
இப்போது எழுந்திருக்கிறது.இந்தச்
சந்தேகத்தை தென்கொரிய எதிர்க்கட்சிகளே
எழுப்பியிருக்கின்றன.செவ்னன் கப்பலில்
இருந்த 46 பேரின் மரணத்தைக் கொண்டு
அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே விசாரணை
அறிக்கை போலியாகத் தயாரித்திருப்பதாக
தென்கொரிய அதிபர் லீ மியூங்புக் மீது
எதிர்க்கட்சிகள்
குற்றம்சாட்டியிருக்கின்றன.
வடகொரியாவுக்கு எதிரான
குற்றச்சாட்டுகள் மற்றும் போரின்
மூலமாக நாட்டில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு
எதிரான மனநிலையை ஏற்படுத்தி அதன் மூலம்
வரவிருக்கும் பாராளுமன்ற
இடைத்தேர்தலில் வாக்குகளை அறுவடை
செய்ய அவர் திட்டமிட்டிருப்பதாகவும்
குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது,விசாரணை
அறிக்கையில் பல்வேறு முரண்பாடுகள்
இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றன.
சில தென்கொரிய நிபுணர்களும் இந்தச்
சம்பவம் ஒரு விபத்தாக இருக்கலாம் எனச்
சந்தேகம்
எழுப்பியிருக்கின்றனர்.கண்ணிவெடி
அல்லது வேறு வகையான வெடிகுண்டுத்
தாக்குதலாக இருந்தால் பலியானவர்களின்
உடலில் அதற்குண்டான தடயம் இருக்க
வேண்டும் என்பதையும் அவர்கள்
சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.முழு
அறிக்கை தாக்கல் செய்யப்படாதது
குறித்தும் அவர்கள் சந்தேகம்
எழுப்பியிருக்கின்றனர்.ஒட்டுமொத்தமாகப்
பார்க்கும்போது பன்னாட்டுக்குழுவினரின்
விசாரணை முடிவை இறுதியாக
எடுத்துக்கொள்ள முடியாது. அதைக்கொண்டு
அடுத்த கட்ட நடவடிக்கைக்கு
ஆயத்தமாவதும் தவறானது.
ஆனால், இதையெல்லாம் லீ
பொருட்படுத்தவில்லை. அமெரிக்காவும்
பிடிவாதமாக இருக்கிறது. அணு ஆயுதங்கள்
வைத்திருப்பதாகக் கூறி விதிக்கப்பட்ட
பொருளாதாரத் தடைகளை ஓரளவு
சமாளித்துக்கொண்டிருக்கும் வடகொரியாவை
போரைக் காட்டி அச்சுறுத்துவதைத் தவிர
வேறு வழியில்லை என்கிற முடிவுக்கு
அமெரிக்கா வந்துவிட்டதாகத்
தெரிகிறது.அதனால் தான் இப்போது போர்
அச்சத்தை உருவாக்கத்
துணிந்திருக்கிறது.அவசர அவசரமாகப் போர்
ஒத்திகைக்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கிறது.இதில் 20
போர்க்கப்பல்கள்,200 விமானங்கள்,8
ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள்
ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான்
போன்று வடகொரியாவை மிரட்டுவது ஒன்றும்
அவ்வளவு எளிதான விடயமல்ல.அணு ஆயுதம்
வைத்திருக்கும் ஒரு நாட்டை
தனிமைப்படுத்தினால் கூட வெற்றிகொள்ள
முடியாது. ஏராளமான அணு ஆயுதங்கள்
வடகொரியாவிடம் இருக்கின்றன என்பதை
அமெரிக்காவே ஒப்புக்
கொண்டிருக்கிறது.இது தவிர பல ஆயிரம்
கிலோ மீற்றர்கள் வரை சென்று தாக்கும்
ஏவுகணைகளும் அந்த நாட்டிடம்
இருக்கின்றன.
சீனாவின் நேரடி ஆதரவும் வடகொரியாவுக்கு
இருக்கிறது.போர் மூண்டால் ரஷ்யாவும்
இராஜதந்திர அடிப்படையில் ஆதரவு தர
வாய்ப்பிருக்கிறது.
அந்தத்துணிச்சலில்தான் புனிதப் போர்
அறிவிப்பை வடகொரியா
வெளியிட்டிருக்கிறது.இதெல்லாம்
தெரிந்தும் பேசித்தீர்க்க வேண்டிய
விடயம் போரை நோக்கி எடுத்துச்
செல்லப்படுவது ஏனோ? |
|
|
|