இன்னாதவை கூற நேர்தல்! (27-01-2012
தினமுரசு நாளிதழ் தலையங்கம்)
சமூகத்திலுள்ள
பெரியவர்களையும்,
படித்தவர்களையும்,
குருவானவர்களையும் பற்றி
எழுதும்போது, கடுஞ் செற்களைப்
பாவிப்பது அழகல்ல என்றார்
நண்பர். சுயநலத்துக்காகவும்,
குறுகிய இனவெறி உணர்வோடும்
செயற்படுகிறார்கள் என்பதைச்
சுட்டிக்காட்டுவதைக் கூடத்
தாங்கமுடியாத மென்மையான
உள்ளத்தைக் கொண்டிருக்கிறாரே
என்று வியப்பதைத் தவிர வேறு
தெரியவில்லை.
இந்தக் கட்டத்தில் கூட,
இவ்வளவு கால அழிவுகள்
அவலங்களுக்கும் சமூகம்
வீழ்ந்து கிடப்பதற்கும்
காரணங்களை ஆய்ந்தறிய
முற்படாமல், நாம் விட்ட
தவறுகள் பற்றி எந்தச்
சுயவிமர்சனமும்
செய்துகொள்ளாமல், அதே பழைய
வீம்புப் பேச்சு அரசியலையே
திடப்படுத்திக் கொண்டிருப்போம்
என்போரிடம் இப்போதும்
இனிமையாக எதை விளக்க முடியும்?
கனி இருக்கக் காய் கவரக்
கூடாது என்று இன்சொல்லை
வற்புறுத்தும் வள்ளுவனே
எவ்வளவு கடுஞ்சொற்களையும்
கையாள வேண்டி வருகிறது….. நாம்
எம்மாத்திரம்.“சொல்லப்
பயன்படுவர் சான்றோர், கரும்பு
போல் கொல்லப் பயன்படும் கீழ்”
என்கிறான். அதாவது
கயவரிடம், கரும்பை நசுக்கிப்
பிழிவது போல் போராடித்தான்
கோரிய பயனைப் பெற முடியும்.
வேறென்ன செய்ய?
“ஈர்ங்கை விதிரார் கயவர்,
கொடிறுடைக்கும் கூர்ங்கையர்
அல்லா தவர்க்கு” என்றும்
சொல்பவன் அவனே! கயவர்கள், ஏழை
எளியோர்க்கு உதவ மாட்டார்கள்.
கையை மடக்கிக் கன்னத்தில்
குத்துவிடுகின்ற
முரடர்களுக்குத்தான்
கொடுப்பார்கள். இவ்வாறு,
இனிமையாகப்
பேசிக்கொண்டிருந்தால் வேலைக்கு
ஆகாது என்றுணர்ந்த
சந்தர்ப்பங்கள் வள்ளுவனிடமும்
உண்டு.
மேலும் மேலும் மக்களின்
அழிவுக்கே ரோச அரசியல்
பேச்சுப் பேசிக்
கொண்டிருப்பவர்களிடம்
மென்மையாகச் சொல்லி என்ன
புரியவைக்க முடியும்? நமது
இத்தனை துன்பங்களுக்கும்
எதிரியே காரணம் என்கிற ஒற்றை
றோட்டில் மக்களைத் திரும்பத்
திரும்ப ஒரே இடத்துக்கே
அழைத்துச்
சென்றுகொண்டிருப்பவர்களைத்
தடுத்து நிறுத்த இதமான வழி எது
உண்டு?
மக்களை அன்பு இராச்சியத்திற்கு
அழைத்துச் செல்ல விரும்பினால்,
இனரீதியாகவோ மொழிரீதியாகவோ
மதரீதியாகவோ வேறுபாடுகளையும்
பகைவெறுப்பையும்
தூண்டிக்கொண்டிருப்பதன் மூலம்
எப்படி வழிகாட்ட முடியும்?
நிராகரிப்பு வார்த்தைகளாலும்,
நம் தனித்துவத்தை
மிகைப்படுத்தும்
உசுப்பேத்துகைகளாலும் எப்படி
நல்லிணக்கம் உருவாகும்?
அன்புவழி இதுதானா?
பெரியோர், படித்தோர்,
வணக்கத்துக்குரியோர்
எனப்படுவோர் உபதேசிக்கும்
போதும் கருத்துரைக்கும் போதும்,
மாற்று இனத்தவர்களானாலும்
அந்த மனிதர்களிடம் நம்பிக்கை
கொண்டதாக அல்லவா பேச்சு
வெளிப்பட வேண்டும். உங்கள்
வார்த்தைகளும் நற்செய்திகளும்
அன்பும் மனிதர்கள்
அனைவருக்குமாக அல்லவா? அரசை
நம்பமுடியாமற் போனால்,
அதற்காக, மக்களைப் பிரித்து
பகைமூட்டி அரசியல் செய்வோரை
ஊக்கப்படுத்தலாமா?
இந்த நாட்டு மக்களிடம்
நல்லிணக்கத்தைக் கொண்டுவந்து
அமைதியான வாழ்வை ஏற்படுத்தும்
விதமாகப் பேசுவதை நீங்கள்
மறந்து பல காலமாகி விட்டது.
அதன் முக்கியத்தை நீங்கள்
மறந்து, ஒரு கன்னத்தில்
விழுந்த அடிக்கே வெகுண்டு
இனஆவேசத்திற்குள் வீழ்ந்ததும்
கூட நமது மக்களின் அழிவுகள்
அவலங்களுக்கான காரணங்களில்
ஒன்று. புரிந்துகொள்கிறீர்களா?
உங்கள் எவராலும், அரசுக்கு
அப்பால், மாற்று இனத்தவரை
மதிக்கவோ அந்த மக்களுடன்
உரையாடவோ முடியாமல் போனதும்,
அவர்களனைவரையும் பகைநிலைக்குத்
தள்ளும் வீம்பையே
வெளிப்படுத்தியபடி இருந்ததும்
தமிழ் மக்களின் அவலத்திற்குக்
காரணமாகியது உண்மை.
அரசைத் திட்டியபடியே இருப்பது
அரசியலே தவிர, மக்களுக்குத்
தீர்வைக் கொண்டுவருவதற்கான
செயற்பாடல்ல. அதற்கு இந்த
நாட்டிலுள்ள மக்களிடம்
இணக்கத்தை ஏற்படுத்தும் வழி
தெரிந்திருக்க வேண்டும்.
அதற்காகப் பேசத் தெரிய
வேண்டும்.