|
தமிழ்
தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக
பிரதிநிதிகள் அல்ல என நான்
தெரிவித்ததாக கொழும்பில் இருந்து
வெளியாகும் ஒரு இணையத்தளத்தில் செய்தி
வெளியாகியுள்ளது.
இச்செய்தியை தமிழ் ஊடகங்கள் மறு
பிரசுரம் செய்துள்ளன.இச்செய்தியில்
தெரிவிக்கப்பட்டுள்ள எமது கட்சியின்
கருத்து சரியான அடிப்படையில்
புரிந்துகொள்ளப்படவேண்டும் என ஜனநாயக
மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்
தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மனோ கணேசன்
வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,வடக்கு,கிழக்கில்
வாழும் தமிழ் உடன்பிறப்புக்களின்
பிரதிநிதித்துவம் தொடர்பில் தமிழ்
தேசிய கூட்டமைப்பிற்கு இருக்கக்கூடிய
உரிமையை நாங்கள்
ஏற்றுக்கொள்கின்றோம்.கடந்த காலங்களில்
தமிழீழ விடுதலை புலிகளை வடகிழக்கு
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக
கூட்டமைப்பு பகிரங்கமாக
ஏற்றுக்கொண்டிருந்தது.
இன்று புலிகள் இல்லாத நிலையில்
வடகிழக்கின் அரசியல் தலைமை பாத்திரத்தை
தமிழ் தேசிய கூட்டமைப்பு வகிக்கின்றது
என்பதுவே ஜனநாயக மக்கள் முன்னணியின்
நிலைப்பாடாகும்.எனவே கூட்டமைப்பின்
அரசியல் பாத்திரம் தொடர்பில் எமக்கு
முரண்பாடு கிடையாது.அதேவேளையில்
வடக்கு,கிழக்கிற்கு வெளியே
தென்னிலங்கையில் பெருந்தொகையான தமிழ்
மக்கள் நிரந்தரமாக வாழ்ந்து
வருகின்றார்கள்.இம்மக்கள்
எதிர்நோக்கும் அரசியல்,கலாசார,சமூக
பொருளாதார மற்றும் பாதுகாப்பு
தொடர்பிலான சவால்கள்
உதாசினப்படுத்தப்படவோ அல்லது குறைத்து
மதிப்பிடப்படவோ முடியாதவையாகும்.
இந்த அடிப்படை யதார்த்தத்தை தமிழ்
தேசிய கூட்டமைப்பு உட்பட வடக்கு,
கிழக்கை தளமாக கொண்டு செயற்படும்
அனைத்து தமிழ் கட்சிகளும்
புரிந்துகொண்டுள்ளன என நாம்
நம்புகின்றோம்.
வடக்கு,கிழக்கு வாழ் சகோதரர்கள் உட்பட
நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள்
எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்கள்
தொடர்பில் எமது கட்சி பாரிய தலையீடுகளை
செய்து தேசிய,சர்வதேசிய போராட்டங்களை
முன்னெடுப்பதை வடகிழக்கு தமிழ் மக்கள்
தெளிவாக அறிவார்கள்.
ஆனால் வடகிழக்கிற்கான அரசியல் தீர்வு
என்பதை வடகிழக்கை தளமாக கொண்டு
செயற்படும் கூட்டமைப்பும் ஏனைய தமிழ்
கட்சிகளுமே தீர்மானிக்கவேண்டும். இதில்
நாம் தலையிட மாட்டோம்.
அதேபோல் தென்னிலங்கையில் மத்திய,ஊவா,
சப்ரகமுவ, மேல்மாகாணங்களில் வாழும்
தமிழ் மக்களின் பிரச்சனைகளை தமிழ்
தேசிய கூட்டமைப்பிடமோ அல்லது வடகிழக்கு
தமிழ் கட்சிகளிடமோ ஒப்படைத்துவிட்டு
தென்னிலங்கை தமிழ் கட்சிகள்
காத்திருக்க முடியாது.
இன்று அரசியலமைப்பு
திருத்தங்கள்,தேர்தல் முறை
மாற்றம்,மலையகத்தின் பிரதேச செயலக
எல்லைகளை தீர்மானிப்பது,மலையகத்தின்
சகித்துகொள்ள முடியாத வறுமை மற்றும்
கொழும்பிலும்,மலையகத்திலும் வாழும்
தமிழ் மக்களின் பாதுகாப்பு ஆகியவை
உட்பட பெருந்தொகையான பிரச்சினைகளை
தென்னிலங்கையில் வாழும் இந்தியவம்சாவளி
தமிழ் மக்களும்,வடகிழக்கிலிருந்து இடம்
பெயர்ந்து தெற்கில் நிரந்தரமாக வாழும்
தமிழர்களும் எதிர்நோக்குகின்றார்கள்.
அரசாங்கத்திடமும்,சர்வதேச
சமூகத்திடமும்,இந்திய அரசிடமும்
வடகிழக்கு பிரச்சினைகளை பேசுகின்ற
வேளையிலேயே,எமது பிரச்சினைகளையும்
கலந்துரையாடி எங்களுக்கு தீர்வு
பெற்றுத்தாருங்கள் என நாம்
கூட்டமைப்பிடம் வேண்டுகோள்
விடுத்துக்கொண்டு இருக்க முடியாது.
இப்பிரச்சினைகளை தென்னிலங்கையை தளமாக
கொண்டு செயற்படும் கட்சிகள் தாமே
எதிர்கொண்டு
தீர்வுகாணவேண்டும்.இல்லாவிட்டால் எமது
கட்சிகளின் செயற்பாட்டிற்கு அர்த்தம்
இருக்க முடியாது.
இந்த அரசியல் யதார்த்தத்தின்
அடிப்படையில் இலங்கை முழுக்க வாழும்
அனைத்து தமிழ் மக்கள் தொடர்பில்
எந்தவொரு கட்சியும் ஏகபோக
பிரதிநிதித்துவ உரிமையை
கொண்டிருக்கவில்லை.இதுவே ஜனநாயக மக்கள்
முன்னணியின் உறுதியான
நிலைப்பாடாகும்.இதை தமிழ்
மக்களும்,தமிழ் அரசியல் கட்சிகளும்,
தமிழ் புத்திஜீவிகளும், புலம்
பெயர்ந்த தமிழர்களும் புரிந்துகொள்ள
வேண்டும். |