மாணவர்கள் தமது கல்வியினை சீரான
வழியில் தொடர்வதற்கான இயல்புச் சூழல்
தோற்றுவிக்கப்பட்டுள்ளது-ஈ.பி.டி.பி
பாராளுமன்ற உறுப்பி னர் உதயன்
மாணவர்கள் தமது கல்வியினை சீரான வழியில் தொடர்வதற்கான இயல்புச் சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளதென ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (25) புங்குடுதீவு அம்பாள் கல்வி நிலையத்தின் பொங்கல்தின விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இலக்கறியாத யுத்தத்தினால் நாம் இழக்க வேண்டியதையெல்லாம் இழந்து ஓர் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இருந்த போதிலும் மாணவர்கள் தமது கல்வியினை சீரான வழியில் தொடர்வதற்கான இயல்புச் சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமான ஓர் சூழலில் மாணவர்கள் தங்கள் கற்றல் செயற்பாடுகளை சிறந்த முறையில் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
எமது தலைவரும் கௌரவ அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பெருமுயற்சியால் இரண்டாண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இக்கல்வி நிலையம் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்தல் செயற்பாடுகளை வழங்கி வருகின்றது பாராட்டத்தக்கதொரு விடயம். தொடர்ந்தும் இக்கல்வி நிலையம் கற்றல் நிலையில் பின் தங்கியுள்ள மாணவர்களை மேலும் உள்வாங்கி அவர்களின் மந்தகதியில் உள்ள கற்றல் செயற்பாடுகளை மேம்பாடடையச் செய்ய வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கருத்துரைகளை ஈ.பி.டி.பியின் சர்வதேச இணைப்பாளர் அன்ரன் கிறிஸ்ரி (மித்திரன்) ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் க.கமலேந்திரன் (கமல்) யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச அமைப்பாளரும் வேலணை பிரதேசசபை தவிசாளருமான சி.சிவராசா (போல்) சேவலங்கா நிறுவனத்தின் யாழ் மாவட்ட நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் தி. நகுலேஸ்வரன் ஆசிரியர் சொல்லிற் செல்வர் இரா செல்வவடிவேல் ஆகியோர் நிகழ்த்தினர்.
முன்பதாக கல்விநிலைய மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. தொடர்ந்து பெற்றோர்கள் பார்வையாளர்களுக்கான போட்டி நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை பாராளுமன்ற உறுப்பினர் உதயன் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் வழங்கி வைத்தனர்.
இதனுடன் பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவி ஒருவருக்கான துவிச்சக்கரவண்டியினை பாராளுமன்ற உறுப்பினர் உதயன் மாவட்ட அமைப்பாளர் கமல் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஈ.பி.டி.பியின் புங்குடுதீவு பிரதேச அமைப்பாளர் ஐ.சிவநேசன் (நவம்) சமாதான நீதவானும் வேலணை பிரதேச சபை உறுப்பினருமான ந. கருணாகரமூர்த்தி (மோகன்) புங்குடுதீவு துரைச்சாமி மகாவித்தியாலய அதிபர் திருமதி;;. ம.மகாராணி பெற்றோர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.