|
யாழ்ப்பாணக் குடாநாட்டில்
தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை
காரணமாக அறுவடை செய்யப்படவிருந்த
விவசாய உற்பத்திப் பொருட்கள் அனைத்தும்
வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கடந்த மூன்று தினங்களாக
யாழ்.குடாநாட்டில் பரவலாக பலத்த மழை
பெய்து வருகிறது. இம்மழை காரணமாக
குறிப்பாக அறுவடை செய்யப்பட்டு போர்
வைக்கப்பட்ட மற்றும் அறுவடை
செய்யப்படவிருந்த வெங்காயம்
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு
அயலில் உள்ள குளங்களில்
ஒதுங்கியுள்ளது.விளை நிலங்கள்
அனைத்தும் வெள்ளத்தில்
மூழ்கியுள்ளன.தொண்டமானாறு கெருடாவில்
கொம்மாந்தறை புலோலி முறாவில் அல்வாய்
மாயக்கை மற்றும் குடத்தனை கிழக்கு
போன்ற பகுதிகளில் இவ்வாறு வெங்காயச்
செய்கை அழிவடைந்துள்ளது.
இதனால் விவசாயிகள் பெரும்
நஷ்டமடைந்துள்ளனர்.வெள்ளத்தில்
மிதக்கும் வெங்காயங்களை விவசாயிகள்
கவலை தேய்ந்த முகத்துடன் மிகவும்
கடினப்பட்டு தேடித்தேடிப் பொறுக்கி
ஏற்றுவதை அவதானிக்கக் கூடியதாக
இருந்தது.மழை காரணமாக வெங்காயச்
செய்கையை மேற்கொண்டிருந்த
விவசாயிகளுக்கு பல இலட்சம் ரூபா நஷ்டம்
ஏற்பட்டுள்ளது.வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலப்
பகுதிகளை ஈபிடிபி அமைப்பினர் சென்று
பார்வையிட்டனர்.
இதேவேளை சீரற்ற காலநிலை தொடரும் என
திருநெல்வேலி வளிமண்டலத் திணைக்களப்
பொறுப்பதிகாரி வி.புஸ்பநாதன்
கூறியுள்ளார்.வங்கக் கடலில் ஏற்பட்ட
தாழமுக்கம் காரணமாக மழை மேலும்
நீடிக்கும் என சென்னை நுங்கம்பாக்கம்
வானிலை மையத்தின் அதிகாரி ரமணன்
தெரிவித்துள்ளார்.யாழ் குடாவில் வானம்
மப்பும் மந்தாரமாகவும் காணப்படும்
அதேவேளை ஆங்காங்கே மழை பெய்த வண்ணம்
உள்ளது.





 |