|
இறுதியாக
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதவி
ஆசைக்காக நான் போர் நிறுத்தத்தைத்
தடுத்தேன் என்று குமரன் பத்மநாதன் உளறி
இருக்கிறார் என மதிமுக பொதுச்செயலாளர்
வைகோ தனது அறிக்கையொன்றில்
தெரிவித்துள்ளார்.கே.பி ஆங்கில ஊடகம்
ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் குறித்து
அதிலுள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி
அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்
வை.கோ,
அந்த அறிக்கையின் முழு விபரமும்
வருமாறு,
பத்மநாதன் கொடுத்த பேட்டியில்,அவரது
கூற்றையே அவர் முரண்பட்டு இன்னொரு
இடத்தில் சொல்கிறார்.2008 டிசம்பர்
31இல் பிரபாகரன் தன்னோடு தொடர்பு
கொண்டதாகவும், ஆயுதங்களைக் கீழே
போட்டுவிட்டு,முக்கியத் தலைவர்களை
வெளிநாட்டுக்கு வெளியேற்றி,சில
வெளிநாடுகளின் உதவியோடு போர்நிறுத்தம்
ஏற்படுத்தும் யோசனையைத் தாம்
கூறியதாகவும், அதற்கு பிரபாகரன், இதை
ஏற்றுக் கொள்ள முடியாது என்று
நிராகரித்து விட்டதாகவும் கூறுகிறார்.
ஆயுதங்களைக் கீழே போடவே
ஒப்புக்கொள்ளாத
பிரபாகரன்,சிதம்பரத்தின் யோசனைப்படி
ஆயுதங்களையும் கீழே போட்டு,சரண்
அடைந்து தமிழ் ஈழத்தையும் கைவிட்டு
விட, கனவிலாவது உடன்படுவாரா?நான் இதில்
எதிர்ப்புத் தெரிவித்து,அதனால் முயற்சி
நின்று போனதாக அறிவுள்ள எவரும் ஏற்க
மாட்டார்கள்.
அதே பேட்டியில்,இன்னொரு
இடத்தில்,பிரபாகரன் மகன் சார்லஸ்
ஆண்டனி,தன்னிடம், தனது தந்தை, தாய்,
தங்கை,தம்பியைப் பாதுகாப்பாக
வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு
செய்யச் சொன்னதாகவும்,ஹெலிகாப்டர்
மூலமும்,பின்னர் கப்பல் மூலமும்
அவர்களைத் தப்புவித்து,
வெளிநாட்டுக்குக் கொண்டு செல்ல,ஒரு
ஆசிய நாட்டுடனும், இரண்டு ஆப்பிரிக்க
நாடுகளுடனும் தான் திட்டமிட்டதாகவும்,
நார்வேயில் உள்ள நெடியவன் அதற்குப்
பணம் கொடுக்காமலும்,புலிகளின்
வெளிநாட்டு விமானப்பிரிவுத் தலைவர்
அச்சுதன்,விமானிகளை அனுப்பாமல்
கெடுத்து விட்டார்கள் என்றும் கூறி
உள்ளார்.
ஈழத்தமிழ் மக்களை நிர்க்கதியாக
விட்டுவிட்டு தப்பிச் செல்ல பிரபாகரன்
சம்மதிக்க மாட்டார் என்று சொல்லிவிட்டு,
பிறிதொரு இடத்தில் கடைசியாக தப்பிச்
செல்ல வருவார் என்றும் கூறி
உள்ளார்.குமரன் பத்மநாதன்
கோலாலம்பூரில் இலங்கை அதிகாரிகளால்
கைது செய்யப்பட்டு,விமானத்தில்
வசதியுள்ள உயர்வகுப்பில் தான்
பயணித்ததாகவும், கொழும்பு சென்றவுடன்
ராஜபக்சேயின் சகோதரன்,தமிழ் ஈழ
மக்களின் படுகொலைக்குக் காரணமான
கொடியோருள் ஒருவனான ராணுவச் செயலாளர்
கொத்தபய ராஜபக்சே வீட்டுக்கு அழைத்துச்
செல்லப்பட்டதாகவும்,அங்கு ராஜபக்சே
தம்மை அன்போடு கைகுலுக்கி வரவேற்று
கேக்கும், தேநீரும் தந்து
உபசரித்ததாகவும்,மிக்க கனிவோடு
தம்மிடம் பேசியதாகவும்,அதன்பின் தான்
ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டதாகவும்,
அதிகாரி ஒருவர் தனக்கு எந்நேரமும்
உதவியதாகவும்,உலகில் யாருடனும் பேசும்
தொலைபேசி வசதியும்,தொடர்புகொள்ள மின்
அஞ்சல் வசதியும் செய்யப்பட்டு
உள்ளதாகவும் கூறி உள்ளார்.
சிங்கள அரசுக்கும்,தனக்கும் பரஸ்பரப்
புரிதலும்,நம்பிக்கையும்,நட்பும்
வளர்ந்துகொண்டே வருவதாகவும் சொல்லி
உள்ளார்.கொத்தபயவிடம்,யுத்தம் நீண்ட
காலத்துக்கு முன்பே யுத்தம் முடிந்து
விட்டதாகக் கூறினாராம்.கடல்புலிகளின்
தலைவர் சூசை,அரசியல் பிரிவுச்
செயலாளராக இருந்த
தமிழ்செல்வன்,நிதிப்பிரிவுப்
பொறுப்பாளர் தமிழேந்தி ஆகியோர்
அமைப்பிலே ஆதிக்கம் செய்ததாகவும்
குற்றம் சாட்டி உள்ளார்.
ஆனால்,2002கடைசியில் பிரபாகரன் தன்னைப்
பொறுப்பில் இருந்து விலகச்
சொன்னதாகவும் ஒப்புக் கொண்டு
உள்ளார்.இமாலய ஆபத்துகளே தன்னைச்
சூழ்ந்தாலும், பிரபாகரன் இலட்சியத்தைக்
கைவிட மாட்டார்,சரண் அடைய மாட்டார்
என்பதை,புலிகளின் எதிரிகளும் ஒப்புக்
கொள்வார்கள்.
2008ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம்
தேதி,பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள்
உரையில் திட்டவட்டமாக அவர் ஒன்றை
உலகத்துக்கு அறிவித்தார்.பெரிய ஆயுத
பலம் கொண்ட பாரிய சக்திகளை எதிர்த்து
நாங்கள் நிற்கிறோம். எத்தனை
சவால்களுக்கு முகம்
கொடுத்தாலும்,எத்தனை இடையூறுகளை
எதிர்கொண்டாலும்,எத்தனை சக்திகள்
எதிர்கொண்டாலும்,தமிழரின் சுதந்திர
விடிவுக்காகத் தொடர்ந்து நாம்
போராடுவோம்.சத்திய இலட்சியத் தீயில்
தம்மையே அழித்துச் சரித்திரம்
ஆகிவிட்ட எமது மாவீரர்களின் வழியே
சென்று, நாம் எமது இலட்சியத்தை அடைவோம்
என்று உறுதி எடுத்துக் கொள்வோமாக!
புலிகளின் தாகம், தமிழ் ஈழத்
தாயகம்.தமிழ் ஈழ விடுதலையைத் தன்
உயிரினும் மேலான இலட்சியமாகக் கொண்டு
இருந்த பிரபாகரனை,அதைக் கைவிடச்
சொல்லி,இந்திய அரசினர் யோசனை
சொன்னார்களாம்.விஸ்வரூபம் எடுக்கின்ற
கேள்வி யாதெனில்,இலங்கையில்
போர்நிறுத்தம் வேண்டும் என்று உலகின்
பல நாடுகள் வேண்டுகோள் விடுத்து,இலங்கை
அரசுக்கு அழுத்தம் கொடுத்த
நிலையில்,இந்திய அரசு ஏன்
ஒப்புக்குகூட போர் நிறுத்தம் என்ற
சொல்லை இலங்கை அரசிடம்
கூறவில்லை?தமிழ்நாடு சட்டமன்றத்தில்
போர் நிறுத்தத்துக்கு ஒரு மனதாகத்
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட48மணி
நேரத்தில்,இந்தியப் பிரதமர் டாக்டர்
மன்மோகன் சிங் அவர்களை இலங்கை அதிபர்
ராஜபக்சே சந்தித்து விட்டு வந்தபோது,
பிரதமர் வீட்டு வாயிலில்
பத்திரிக்கையாளர்கள் இந்தியப் பிரதமர்
போர் நிறுத்தம் வேண்டினாரா? என்று
கேட்டனர்.
ஆத்திரத்தோடும்,எரிச்சலோடும்,போர்
நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம்
கிடையாது; விடுதலைப் புலிகளை முற்றாக
ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை என்று
உடம்பை முறுக்கிக் கொண்டு திமிராகப்
பேசும் தைரியம் அந்த அதிபருக்கு எப்படி
வந்தது?இந்திய அரசு கொடுத்தத
ஊக்கம்தான் காரணம்.இதைத்தான் கடந்த
ஐந்து ஆண்டுகளாக நான் சொல்லி
வருகிறேன்.இலங்கையில்,சிங்கள அரசு
புலிகளுக்கு எதிராக நடத்தும் போரை
இயக்கியதும்,திட்டமிட்டதும்,ரடார்களும்,
ஆயுதங்களும்,ஆயிரம் கோடி வட்டி இல்லாத
பணமும் கொடுத்தது காங்கிரஸ்
தலைமையிலான இந்திய அரசுதான்.
பிரதமரே இலங்கைக்குத் தாங்கள் ஆயுத
உதவி செய்ததை
ஒப்புக்கொண்டு,2008அக்டோபர் 2இல்
எனக்கு கடிதம் எழுதி உள்ளார்.
வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப்
முகர்ஜியிடம்,தமிழக முதல்வர்
கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டு
வாசலில்,போர் நிறுத்தத்தை இந்தியா
கேட்குமா?என்று செய்தியாளர்கள்
வினவியதற்கு எரிச்சலோடு பதில்
சொன்னார்:அது எங்கள் வேலை அல்ல;சிங்கள
அரசுக்கும் புலிகளுக்கும் நடக்கும்
சண்டை என்றார்.
2009பிப்ரவரி 18ஆம் தேதி,இந்திய
நாடாளுமன்றத்தில் அதே பிரணாப்
முகர்ஜி,அப்பாவி தமிழ் மக்களை
விடுதலைப் புலிகள் சுட்டுக்
கொல்கிறார்கள் என்று அக்கிரமமான
குற்றசாட்டையும் கூறினார்.இந்திய
இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற
ஒப்பந்தம் 2007இல்
செய்யப்பட்டது.இந்தியக் கடற்படையின்
உதவியோடு விடுதலைப் புலிகளுக்கு வந்த
எட்டுக் கப்பல்களை தாங்கள் கடலில்
மூழ்கடித்ததாக இலங்கையில் கடற்படைத்
தளபதி வசந்த கரனன்கொட 2009மார்ச்சில்
உண்மையைப் போட்டு உடைத்து விட்டார்.
ராஜபக்சே அறிவித்த ஒரு மூவர்
குழுவும்,மன்மோகன் சிங் அறிவித்த மூவர்
குழுவும், டெல்லியில் ஐந்து முறையும்
கொழும்பில் மூன்று முறையும்
சந்தித்து,புலிகளுக்கு எதிரான
யுத்தத்தை நடத்தி வெற்றி பெறத்
திட்டமிட்டன.நாடாளுமன்றத் தேர்தலுக்கு
முன்பே விடுதலைப் புலிகளைப் போரில்
முடித்துவிட வேண்டும் என்று இந்திய
அரசு விரும்புவதாக,இலங்கை அமைச்சர்
ஒருவரே கூறிவிட்டார்.இலங்கை
நாடாளுமன்றத்தில், இந்திய உதவியால்தான்
புலிகளைத் தோற்கடித்தோம் என்றே அதிபர்
ராஜபக்சே அறிவித்தார்.
லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை,பிஞ்சுக்
குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள்
முதியவர்கள் உட்பட படுகொலை
செய்யப்பட்டதற்கு இந்திய அரசும் ஒரு
காரணம். ராஜபக்சேவின்
போர்க்குற்றத்தில்,இந்தியாவின்
காங்கிரஸ் அரசுக்கும் பங்கு உண்டு
என்று தொடர்ந்து நான் ஆதாரங்களுடன்
குற்றம் சாட்டி வருகிறேன்.
அதற்காக என் மீது தேசத் துரோக
குற்றச்சாட்டில் இரண்டு வழக்குகளை
கருணாநிதி அரசு ஏவி உள்ளது.தமிழர்கள்
படுகொலை செய்யப்பட்ட இரத்தப் பழிக்கு
இந்திய அரசு ஆளாகி விட்டது;குற்றவாளிக்
கூண்டில் நிறுத்தப்படும்;எங்கள்
எதிர்காலச் சந்ததிகள் இன்றைய இந்திய
அரசை மன்னிக்க மாட்டார்கள் என்று
எழுத்து மூலமாக பிரதமரிடம் குற்றம்
சாட்டி உள்ளேன்.
இந்தத் தமிழ் இனத் துரோகச்
செயலுக்கு,கலைஞர் கருணாநிதி
உடந்தையாகச் செயல்பட்டார் என்பதே என்
குற்றச்சாட்டு. இந்தப் பழியில் இருந்து
தப்பிக்கவும்,என் மீதே பழி
சுமத்தவும்,கடந்த ஆண்டிலேயே
உளவுத்துறையின் ஏற்பாட்டில்,பத்மநாதன்
இப்போது அவிழ்த்து விட்டு உள்ள
கோயபல்ஸ் பொய்களை அப்போதே
சொன்னார்கள்.அது எடுபடவில்லை.
அனைத்து உலக அரங்கில்
போர்க்குற்றவாளியாக இராஜபக்சே
நிறுத்தப்படுவார் என்று கடுமையான
பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ள என்னைக்
களங்கப்படுத்த, இராஜபக்சேவின் கைக்கூலி
ஆகிவிட்ட குமரன் பத்மநாதனைத் தற்போது
பயன்படுத்தி உள்ளார்கள். இதில் வேதனை
என்னவெனில்,நாடாளுமன்றத் தேர்தலில்
பதவி ஆசைக்காக நான் போர் நிறுத்தத்தைத்
தடுத்தேன் என்று குமரன் பத்மநாதன் உளறி
இருக்கிறார்.
மத்திய அமைச்சர் பதவிகள் என்னை
நாடிவந்தபோதும் நிராகரித்தவன்,2004ஆம்
ஆண்டில் வெற்றி பெற முடியும் என்ற
நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில்
போட்டியிடும் வாய்ப்பை நிராகரித்தவன்
நான். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில்
கூறியுள்ளார். |