|
இந்தியா
உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச்
சேர்ந்தவர்கள்,சட்ட விரோதமாக தங்களிடம்
சேர்த்து வைத்துள்ள கறுப்புப் பணம்
பற்றிய விவரங்களை,சில நிபந்தனைகளுக்கு
உட்பட்டு அளிக்க சுவிட்சர்லாந்து
வங்கிகள் ஒப்புக் கொண்டுள்ளன.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச்
சேர்ந்தவர்கள்,சட்ட விரோதமாக தங்கள்
பணத்தை,சுவிட்சர்லாந்திலுள்ள
வங்கிகளில் கறுப்புப் பணமாக போட்டு
வைத்துள்ளனர். யார் யார்
எவ்வளவு பணம் போட்டுள்ளனர் என்று
தெரிந்து கொள்வதற்காக,பல நாடுகளும்
சுவிஸ் வங்கிகளுக்கு நெருக்கடி
கொடுத்து வருகின்றன.அமெரிக்காவினர்
வைத்திருக்கும் பணம் பற்றிய
விவரங்களைத் தர சுவிஸ் வங்கிகள்
ஏற்கனவே சம்மதம்
தெரிவித்துள்ளன.ஜெர்மனி உள்ளிட்ட
முன்னணி நாடுகள் இதில் மேற்கொண்ட
முயற்சிகளுக்கு பலன் வரும் நிலை
ஏற்பட்டிருக்கிறது.இந்நிலையில்,இந்தியாவும்
அந்த விவரங்களைப் பெறும் ஆரம்பகட்ட
முயற்சியில் ஈடுபட்டுள்ளது.சுவிஸ்
வங்கிகள்,தெள்ளத் தெளிவாக கேட்டதும்
பட்டியலைத் தர முடியாது என்று கூறி
சில சட்ட நுணுக்கங்களுடன் கூடிய
தகவல்களைக் கேட்டன.
இந்நிலையில்,சுவிஸ் வங்கிகளின்
கூட்டமைப்பான,"சுவிஸ் வங்கிகள்
அசோசியேஷன்'(எஸ்.பி.ஏ.,),வெளியிட்டுள்ள
இந்த ஆண்டுக்கான அறிக்கையில்,தங்கள்
வாடிக்கையாளர்களைப் பற்றிய விவரங்களைத்
தெரிந்து கொள்ள,நான்கு நிபந்தனைகளை
விதித்துள்ளது.நாடுகள் சந்தேகப்படும்
நபர்களைப் பற்றிய விவரங்கள்,அவர்கள்
செய்த முறைகேடுகள் பற்றிய
விவரங்கள்,ஏன் அவர்கள் மீது சந்தேகம்
எழுந்துள்ளது என்பது பற்றிய ஆதார
விவரங்கள்,எந்தெந்த வங்கிகளில் அவர்கள்
பணம் போட்டிருக்கின்றனர் என்ற
தகவல்களைத் தரும்படி
கேட்டிருக்கிறது.இதுகுறித்து அந்தந்த
நாட்டு வருமான வரித்துறையினர் சுவிஸ்
வங்கிகள் கூட்டமைப்புக்கு விண்ணப்பம்
அளிக்க வேண்டும்.இதுவரை,தங்கள்
வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களைத்
தரமாட்டோம் என்று ஒரே குரலில் கூறிய
நிலையில் இருந்து, சுவிஸ் வங்கிகள்
சற்று கீழிறங்கியுள்ளன. |