இலங்கையின்
பிரச்சினைகளுக்கான தீர்வு
அல்லது தீர்வுகள் என்ன? அந்தத்
தீர்வை அல்லது தீர்வுகளை
எப்படிக் காணமுடியும்?
இலங்கையை ஒரு
சுயாதிபத்தியமுள்ள நாடாக
எப்படி மாற்ற முடியும்? என்ற
கேள்விகள் நீண்டகாலமாகவே வெவ்
வேறு அரங்குகளில் கேட்கப்பட்டு
வரப்படுகிறது. அல்லது சில
அரங்குகளில் இந்தக் கேள்விகள்
முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கேள்விகள் பலருடைய
மனதிலும் அடிக்கடி எழுவதும்
உண்டு.
ஆகவே
நீண்டகாலத் தொடர்ச்சியை உடைய
இந்தக் கேள்விகளை –
இவற்றுக்கான பதில்களையும்
இவற்றுக்கான நடவடிக்கைகளையும்
பெறமுடியாதிருக்கும் இந்தக்
கேள்விகளை – மீளவும் இங்கே
முன்னிறுத்தி இந்தப் பத்தியில்
விவாதிக்கலாம் என்று
தோன்றுகிறது.
1. இலங்கையின்
பிச்சினைகளுக்கான தீர்வு
அல்லது தீர்வுகள் என்ன?
இந்தக் கேள்விக்கான பதிலை நாம்
காண்பதற்கு முன்னர்,
இலங்கையின் பிரச்சினைகள் என்ன?
என்று நாம் பார்க்க வேண்டும்.
அதன்படி பார்த்தால்,
முதலாவதாக இனப்பிரச்சினை. இது
தமிழ்பேசும் மக்களிடத்தில்
அரசியற் போராட்டங்களையும்
ஆயுதப்போராட்டத்தையும்
தோற்றுவித்தது.
அதேவேளை அதற்குச் சமாந்தரமாக
உள்ள இரண்டாவது பிரச்சினை –
பொருளாதாரச் சமனற்ற நிலையும்
பிரதேச ரீதியிலான சமனின்மைக்
குறைபாடுகளும். இதுவே ஜே.வி.பி
யின் தோற்றத்துக்கும் அதனுடைய
போராட்டங்களுக்கும் காரணமாக
இருந்தது.
ஆகவே, இலங்கையில் இரண்டு
பிரச்சினைகள் மிக
முக்கியமாகவும் முதன்மை
நிலையிலும் உள்ளன. இந்த இரண்டு
பிரச்சினைகளின் காரணமாகவும்
இலங்கைத் தீவு அளவுக்கதிகமான
இரத்தத்தைச் சிந்தியிருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான – பல
இலட்சக்கணக்கான உயிர்கள்
பலியிடப்பட்டுள்ளன. பல
கோடிக்கணக்கான பெறுமதியுடைய
சொத்துக்களும் இயற்கை
வளங்களும் அழிவடைந்துள்ளன.
மேலும், சமூகங்களுக்கிடையிலான
இடைவெளி அதிகரித்து,
முரண்பாடுகள்
கூர்மையடைந்துள்ளன.
இதை இன்னும் வெளிப்படையாகவும்
சுருக்கமாகவும் சொல்வதெனில்,
இந்த இரண்டு
பிரச்சினைகளுக்காகவும் மிகத்
தீவிரமான ஆயுதப்போராட்டங்கள்
நீண்டகாலமாகவே நடந்துள்ளன.
இப்பொழுது இந்த ஆயுதப்
போராட்டங்கள்
முறியடிக்கப்பட்டிருந்தாலும்,
போராட்டங்கள் முளைவிடுவதற்குக்
காரணமான பிரச்சினைகள்
அப்படியேதான் உள்ளன. ஆகவே,
அவற்றுக்குத் தீர்வுகள்
காணப்பட வேண்டும். அப்படித்
தீர்வைக் காண்பதே இலங்கைத்
தீவின் அமைதியும்
அபிவிருத்தியும் தன்னிறைவும்
சுயாதிபத்தியமும்
நிலைபெறுவதற்கான வழியை
ஏற்படுத்தும்.
அவ்வாறெனில், இந்தப்
பிரச்சினைகளுக்கான தீர்வு
என்ன? அல்லது தீர்வுகள் என்ன?
இங்கேதான் பிரச்சினை
திரும்பவும் உருவாகிறது.
தீர்வைப் பற்றி யோசிக்கும்போதே
அல்லது தீர்வுக்காக
முயற்சிக்கும்போதே தீர்வை
நோக்கிச் செல்ல முடியாத ஒரு
பயங்கரமான நிலை இலங்கை அரசியற்
பண்பாட்டுச் சூழலில்
நிலவுகிறது.
உதாரணமாக – இனப்பிரச்சினைக்கு
அரசியற் தீர்வை முன்வைக்க
அரசாங்கம் முயற்சிக்கும்போது
அதை சிங்களத் தீவிரவாதக்
கட்சிகளும் எதிர்க்கட்சியும்
கடுமையாக எதிர்க்கும்.
அதைப்போல, தமிழ்க்கட்சிகள்
வடக்குக் கிழக்கு இணைப்பையும்
அரசியற் தீர்வையும் கோரும்போது
முஸ்லிம் மக்களின் உரிமைகளைப்
பற்றியும் அவர்களின்
நிலையைப்பற்றியும் சரியாக
அக்கறைக்கு எடுப்பதில்லை.
மேலும் இலங்கைத்தீவின்
யதார்த்தத்துக்கு ஏற்றவாறு
சிந்திக்கும் முறைமையையும் இவை
கைக்கொள்வதில்லை. ஆகவே,
தீர்வைப்பற்றிச்
சிந்திக்கும்போது இத்தகைய
எதிர்நிலைகளும் குறைநிலைகளும்
உள்ளடக்கங்கொண்டேயிருக்கின்றன.
எனவே, இலங்கைத்தீவில்
முரண்பாடுகளுக்கான –
பிரச்சினைகளுக்கான தீர்வைப்
பற்றிச் சிந்திப்பதே
தீர்வுக்கு எதிரானதாக அமைகிறது
என்றே சொல்ல வேண்டும்.
உண்மையில் இதுதான் –
இப்படியான ஒரு துயர நிலைதான்
தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலை தொடரும்வரை நிலைமை
மேலும் மேலும் மோசமடையுமே
தவிர, ஒருபோதுமே சீருக்குத்
திரும்பாது. பிரச்சினைகளும்
தணியாது. நெருக்கடிகளும்
குறையாது.
ஆனால், அதற்காக தீர்வைப்
பற்றியோ தீர்வுகளைப் பற்றியோ
பேசாமலும் சிந்திக்காமலும்
இருக்க முடியுமா?
எத்தகைய விலையைக் கொடுத்தேனும்
தீர்வைக் கொண்டு வரவேண்டும்
என்று சிந்திப்பதற்குப்
பதிலாக தீர்வொன்றைப்
பொருத்தமான முறையில் கொண்டு
வருவதன் மூலம் அல்லது
பொருத்தமான தீர்வொன்றைக்
கொண்டு வருவதன் மூலம்,
‘விலை’களையும் ‘தலை’களையும்
கொடுக்கும் நிலையை
மாற்றிவிடலாம்.
ஆனால், கடந்த காலங்களில்
நடந்தது வேறு. தீர்வுக்குப்
பதிலாக முரண்பாட்டைக்
கூர்மைப்படுத்தும் காரியங்களே
அரசியல் உபாயமாக்கப்பட்டது.
இப்பொழுது நடந்து
கொண்டிருப்பதும் இதுதான்.
இதனால், யுத்தத்தில் வெல்வதன்
மூலம் தனியரசொன்றை உருவாக்கி
இனப்பிரச்சினைக்கான தீர்வைக்
காணமுடியும் எனத் தமிழர்கள்
சிந்தித்தனர்.
யுத்தத்தில் வெல்வதன்மூலம்
இனப்பிரச்சினைக்கான தீர்வைக்
குறித்த அரசியற்குரல்கள்
தணிந்து விடும் என்று அரசு
சிந்தித்தது.
இதைப்போலவே,
ஆயுதப்போராட்டத்தின் மூலம்
இலங்கையில் பொருளாதாரச்
சமநிலையுடைய அரசொன்றை
ஸ்தாபித்து விடலாம் என்று
ஜே.வி.பி சிந்தித்தது.
முடிவாக இலங்கை
பேரழிவிற்குள்ளும்
ஸ்திரமின்மைக்குள்ளும்
தள்ளப்பட்டதே வரலாறாகவும்
யதார்த்தமாகவும் உள்ளது.
ஆகவே, இந்தப்
பிரச்சினைகளுக்கான தீர்வைக்
காண்பது அல்லது தீர்வுகளைக்
காண்பது என்பது இன்று மிக
அவசியமாக உள்ள ஒன்றாகும்.
இதன்படி, இனப்பிரச்சினைக்குப்
பொருத்தமான – நீதியான –
சமூகங்களுக்கிடையில்
கொந்தளிப்பைத் தணிக்கக்கூடிய
வகையிலான – அமைதியையும்
ஸ்திரத்தன்மையையும்
உருவாக்கக்கூடிய –
சமநிலையையுடைய – ஒவ்வொரு
சமூகங்களின் இருப்புக்கும்
உத்தரவாதமுடைய – அச்சநிலையைப்
போக்கக்கூடிய – நிரந்தரத்
தீர்வொன்றைக் காணவேண்டும்.
இதைப்போலவே பிரதேசங்களுக்கும்
மக்களுக்கும் இடையிலான
பொருளாதார மற்றும்
அபிவிருத்திச் சமனிலையற்ற
நிலையைப் போக்கக்கூடிய
பொருளாதாரக் கொள்கையினையும்
அரசியற் கொள்கையினையும்
வகுத்து நடைமுறைப்படுத்துதல்.
இந்த இரண்டும் உரிய முறையில்
நடைமுறைப்படுத்தப்படும்போது
இலங்கைக்கான – இலங்கை
அரசுக்கான உள்நாட்டு
நெருக்கடியும் உள்நாட்டுச்
சக்திகளின் அச்சுறுத்தலும்
நீங்கிவிடும். இந்த
அச்சுறுத்தல் நீங்குமானால்,
இலங்கையின் பாதுகாப்புச்
செலவீனத்தில் ஐந்தில் மூன்று
பங்கு மீதப்படுத்தப்படும்.
ஆளணிச் சக்தியும் மீதமாகும்.
அதேவேளை உள்நாட்டு
முரண்பாடுகளைப் பயன்படுத்தி,
உள்ளே இருக்கும் எதிர்ச்
சக்திகளைப் பயன்படுத்தி தமது
அரசியல் நலன்கனை முன்னெடுக்க
முயலும் வெளிச்சக்திகளின்
உபாயங்களும் தடுக்கப்படும்.
2. ஆகவே, இந்தப்
பிரச்சினைகளுக்கான தீர்வை
அல்லது தீர்வுகளை எப்படிக்
காணமுடியும்?
இதற்கு முற்றிலும் புதிய
முறையில் சிந்திக்க வேண்டும்.
முதலாவதாக இனப்பிரச்சினைக்குத்
தீர்வு காண்பதற்கான சூழலை
உருவாக்குவது அவசியம்.
இதன்படி, தீர்வுக்குத் தடையாக
இருக்கின்ற சக்திகளையும்
காரணிகளையும் அடையாளம் காண்பது
முதலாவது பணியாகும்.
அடுத்ததாக, அந்த எதிர்ச்
சக்திகளை எப்படித் தணிவு
நிலைக்குக் கொண்டு வருவது?
தடைக்காரணிகளை எவ்வாறு
அகற்றுவது? என்று ஆராய்ந்து
அதற்கான தீர்வைக் காண்பது.
இப்படிப் பார்க்கும்போது
எதிர்ச்சக்திகளான தீவிர
நிலையாளர்களையும் முஸ்லிம்
விரோதப் போக்கையும்
பலவீனப்படுத்த வேணும்.
அரசியல் அமைப்பு தடையாகவோ
நெருக்கடியாகவோ இருக்குமானால்,
அதைத் திருத்துவதற்கு
முயற்சிக்க வேணும்.
நாட்டினதும் மக்களினதும்
தேவைகளுக்காகவே அரசியல்
அமைப்பு உருவாக்கப்பட்டது.
அதற்கேற்பவே அது
காலத்துக்குக்காலம்
திருத்தத்துக்குட்படுத்தப்படுவதும்.
ஆனால், துரதிருஷ்ரவசமாக
இலங்கையில் அரசியல் அமைப்பின்
திருத்தம் அரசையும்
ஆட்சியாளரையும்
பாதுகாப்பதற்குக்
கொடுக்கப்பட்டிருக்கும்
முக்கியத்தும் மக்களின் –
சமூகங்களின் பாதுகாப்புக்கும்
அமைதிக்கும் ஏற்றவாறு
அமைக்கப்படவில்லை. ஆகவே,
இதைக்குறித்துச் சிந்திக்க
வேண்டும்.
இத்தகையதொரு அவசியச்
சிந்தனைகளை மையப்படுத்திய
அமுக்கக்குழுக்கள் இன்றைய
நிலையில் மிக அவசியமாகத்
தொழிற்படவேண்டியுள்ளன.
ஏனெனில், முன்னெப்போதையும்
விட இப்பொழுதே
இனப்பிரச்சினையைக்
காண்பதற்குப் பொருத்தமான –
பதமான சூழலொன்று அமைந்துள்ளது.
போரினாலும் இன
முரண்பாடுகளினாலும்
பொருளாதாரப் பிரச்சினைகளாலும்
மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட
அனுபவங்களை இலங்கையிலுள்ள
அனைத்துச் சமூகத்தினரும் சகல
மக்களும் பெற்றிருக்கும்
சந்தர்ப்பம் இது.
போரினால், முற்றுமுழுதாகவே
பாதுகாப்பற்ற ஒரு நிலையில்
இலங்கையிலுள்ள சமூகங்கள்
இருந்தன. ஸ்திரமற்ற நிலையில்
நாடு இருந்தது. இப்போது
சகிக்கமுடியாத அளவுக்குத்
துயரந்தரும் நிகழ்வுகளின்
மத்தியில் போரின்
பிடியிலிருந்து நாடு
மீண்டுள்ளது.
எனவே இந்தச் சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்தி, போரற்ற ஒரு நிலை
எதிர்காலத்தில்
நிரந்தரப்படுத்தப்பட வேண்டும்
என்றும் அப்படியான ஒரு நிலையை
உருவாக்கி,
ஸ்திரப்படுத்துவதற்கான
அடிப்படைகள் இப்போதே
உருவாக்கப்பட வேண்டும் என்றும்
மக்களிடையே அரசியல் வேலைகளைச்
செய்வதற்கு இதுவே மிக
வாய்ப்பான – பொருத்தமான
சந்தர்ப்பமாகும். இதைப்
புரிந்து கொண்டு, தமிழ்,
சிங்கள, முஸ்லிம், மலையச்
சமூகங்களிலுள்ள
அமுக்கக்குழுக்கள் தொழிற்பட
வேண்டும்.
ஆனால், இந்த அமுக்கக்குழுக்கள்
தங்கள் தங்கள் சமூகங்களின்
அடையாளங்களின் வழியாக மேலும்
தீவிரநிலைகளை – முரண்நிலைகளைக்
கூர்மைப்படுத்தும் வகையிற்
சிந்தித்தால் நிலைமை மேலும்
விபரீதமாகும் என்பதையும் இங்கே
கவனிப்பது அவசியம்.
இந்த அமுக்கக்குழுக்களானது,
தங்களுக்கிடையில்
ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை
வரைந்து, அதில் இணைந்து
தொழிற்படுவதன்மூலமாக
இடைவெளிகளைக் குறைத்து தம்மைப்
பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அது இயலுமானதுங்கூட.
ப்படிச் செய்யப்படும்போது,
அப்படி இவை தொழிற்படும்போது,
இலங்கையின்
இனப்பிரச்சினைக்கும்
பொருளாதாரப் பிரச்சினைக்குமான
அரசில் நடவடிக்கைளை
மேற்கொள்வதற்கு
ஆட்சியாளர்களுக்கும் அரசியலைக்
கைக்கொள்வோருக்கும் வாய்க்கும்.
ஆகவே, இப்போது அரசியலை
முன்னெடுப்பதென்பதும்
பிரச்சினைகளுக்கான தீர்வைக்
கையாள்வதென்பதும்
முழுமக்களினதும் முழு
அக்கறைக்குரிய ஒன்றாக உள்ளது.
இதில் முக்கிய பாத்திரத்தை
ஏற்கவேண்டிய பணி அந்தந்தச்
சமூகங்களைச் சேர்ந்த
சிந்திக்கும்
தரப்பினருடையதாகிறது.
மூன்றாவது கேள்வி. இலங்கையை
ஒரு சுயாதிபத்தியமுள்ள நாடாக
எப்படி மாற்ற முடியும்? என்பது.
இந்தக் கேள்விக்கான பதில்
மிகச் சுலபமானது. மேற்படி
கேள்விகளுக்கான பதிலைக்
காண்பதன் மூலம் இந்தக்
கேள்விக்கான பதிலும் இந்தக்
கேள்வியின் உள்ளேயுள்ள
நிலைமைக்கான பதிலும்
கிடைக்கும்.
உள்நாட்டு நெருக்கடிகள்
தீரும்போது, அரசின்
ஒடுக்குமுறையும் தணிந்து
விடும். அதனுடைய அச்சமும்
தீர்ந்து போகும். இதன்மூலம்
நாட்டில் முதலாவது நிலையிலான
தளம்பலுக்கு முடிவுவந்து
விடும். மக்களும் அரசும்
எதிரெதிர்ச் சக்திகள் என்ற
நிலை அநேகமாக மாறிவிடும்.
அப்படியான ஒரு நிலையில் மக்கள்
அரசின் – ஆட்சியின்
பாதுகாவலர்களாக இருப்பர்.
அதுவே சரியானதும். அந்தப்
பாதுகாப்பே படைகளின்
பாதுகாப்பையும் விடப் பலமானது.
உறுதியானது.
அதேவேளை, உள்நாட்டிலுள்ள
முரண்சக்திகளை வெளிச் சக்திகள்
பயன்படுத்தி தமது காரியங்களைச்
சாதிக்க முடியாத நிலையும்
உருவாகும். அத்துடன்
உள்நெருக்கடிகாரணமாக ஏற்படும்
அழிவுகளும் சேதங்களும்
ஆக்கத்திறனுக்கான ஏதுகளற்ற
நிலையும் தடுக்கப்படும்போது,
வெளியே கடன்படவும் கையேந்தவும்
வேண்டிய நிலையும் ஏற்படாது.
அத்துடன், உள்நாட்டு
நெருக்கடிகளைக்
கட்டுப்படுத்துவதற்காக வெளி
உதவிகளை (புலிகளையும் ஜே.வி.பி
யையும் அடக்குவதற்கு வெளி
உதவிகளை இலங்கை அரசு
நாடியிருந்தது) நாடவேண்டிய
தேவையும் இருக்காது.
ஆகவே நாடு எந்த நிலையிலும்
ஸ்திரத்தன்மையுடன் இருப்பதற்கு
மேற்சொன்ன இரண்டு பிரதான
கேள்விகளுக்கான பதில்களையும்
காணும் நடவடிக்கைளை
மேற்கொள்ளும்போது மூன்றாவது
கேள்விக்கான பதிலும்
காணப்படுகிறது.
இன்று
நடைபெற்றுக்கொண்டிருக்கும்
தீர்வுக்கான முயற்சிகளோ –
பேச்சுகளோ வழமையான
பாரம்பரியத்தைக் கொண்டதாகவே
உள்ளன. அரசு – தமிழ்த்தரப்பு
என்ற எதிரெதிர்த்தரப்புகளின்
மோதற்களமாகவே பேச்சுகளும்
பேச்சுமேசையும் அமைந்துள்ளன.
அப்படியே தோற்றங்காட்டவும்
படுகிறது. அப்படியே புரிந்து
கொள்ளவும் படுகிறது.
பேச்சுகள் தொடர்பாக இரண்டு
தரப்பு வெளிப்படுத்தும்
செய்திகளும் அறிக்கைகளும்
இதையே நிரூபிக்கின்றன.
பேச்சுகளைப் பற்றிய செய்திகளை
வெளியிடும் இந்தத் தரப்புகளின்
ஆதரவு ஊடகங்களும் இதே
மனநிலையில்தான் இதை
அணுகுகின்றன. ஒருவரை ஒருவர்
தோற்கடிக்க அல்லது ஒருவரை
ஒருவர் வெல்ல முயற்சிக்கின்ற
எத்தனங்களே பேச்சுமேசையாகக்
காணப்படுகிறது. இது
அடிப்படையிலேயே தவறானது.
பேச்சுகளின் மூலமாகத்
தீர்வொன்றைக் காணமுற்படும்போது
இரண்டு தரப்பும் பதற்றங்களற்ற
முறையில், சந்தேகங்களை மேலும்
உருவாக்குவதற்கு இடமளிக்காமல்
அரங்கிற் செயற்பட வேண்டும்.
ஆனால், அப்படியான நிலை
உருவாகவேயில்லை. பதிலாக
தட்டையான – ஒருவரை ஒருவர்
தோற்கடிக்க முனைகிற அதே
அமைப்பிற்தான் பேச்சுகள்
நடக்கின்றன.
இந்த வழமையான – பழைய –
தோற்றுப்போன
பாரம்பரியத்தையுடைய
பேச்சுவார்த்தையின் மூலம்
எத்தகைய தீர்வையும் இந்த நாடு
கண்டு விடமுடியாது.
பதிலாகக் காலம் கரையும்.
தீவிர நிலையாளர்கள் மேலும்
பலம் பெறுவர். நெருக்கடிகள்
மேலும் உக்கிரமடையும்.
வெளிச்சக்திகள் தாராளமாகவே
இடைவெளியுள்ள சமூகங்களிடையே
புகுந்து விளையாடும். நாடு
அச்சத்திலும்
நிம்மதியின்மையிலும் உழலும்.
பாதுகாப்புச் செலவினங்களும்
சட்டங்களும் பாதுகாப்பு
ஏற்பாடுகளும் படைகளின்
பெருக்கமும் அதிகரிக்கும்.
ஸ்திரமற்ற தன்மை தாராளமாகவே
ஏற்படும். நாடு மிகமிகப்
பின்தங்கியே செல்லும்.
பின்தங்கிய நாட்டை அடிமை
கொள்வது உலகத்துக்கு மிகச்
சுலபம். பின்தங்கிய நாட்டில்
மக்கள் வாழ்வது மிகக் கடினம்.
கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் |