குடாநாட்டின்
நிலைவரம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா அவர்களிடம் அப்துல் கலாம்
கேட்டறிந்து கொண்டார்!
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்திய அணு விஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் குடாநாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார்.
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.
வடமாகாண ஆளுநரின் வாசஸ்தலத்திற்கு விஜயம் செய்த அப்துல் கலாம் அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து யாழ் மாவட்டத்தின் தற்போதைய நிலைவரம் தொடர்பிலும் யுத்தத்தின் பின்னரான மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் மக்களின் நலன்சார் விடயங்களில் இந்தியாவின் பங்களிப்புத் தொடர்பிலும் குறிப்பாக அப்பகுதியில் பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பில் அப்துல் கலாம் அவர்கள் அமைச்சர் உள்ளிட்ட துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீள்குடியேற்றம் இடம்பெற்ற பகுதிகளில் 90 சத வீதமானவை மீளவும் இயங்கத் தொடங்கியுள்ளதாகவும் ஏனையவற்றை இயக்குதில் உள்ள இடர்பாடுகள் தொடர்பாகவும் எடுத்து விளக்கினார்.
இதனிடையே யாழ் மாவட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் இருந்ததாகவும் அவற்றில் சில மட்டுமே மீளவும் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக் காட்டப்பட்டது.
இதனிடையே யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் உயர்மட்ட பிரதிநிதிகள் அப்துல் கலாமைச் சந்தித்து இந்திய மீனவர்களால் தாம் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.
குறிப்பாக ரோலர் மீன்பிடியால் கடல் வளங்கள் அழிக்கப்படுவதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக கடல் வளங்களை பாதுகாக்க முடியும் எனவும் தமது எல்லைக்குள் அத்துமீறி வரும் இந்திய மீனவர்கள் தமது தொழில் வலைகளை அறுத்துச் செல்வதாகவும் இதனால் தமக்கு ஏற்படக் கூடிய பாதக நிலை தொடர்பாகவும் எடுத்து விளக்கினார்.
நெடுந்தீவு மீனவர்கள் தாம் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே தொழிலுக்குச் செல்வதாகவும் ஏனைய நாட்கள் தொழில்கள் செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இதேபோன்று வடமராட்சி மீனவர்களும் தாம் இந்திய மீனவர்களால் எதிர்கொண்டு வரும் இடர்பாடுகள் தொடர்பாக எடுத்து விளக்கியதுடன் மனுக்களையும் அப்துல் காலாமிடம் கையளித்தனர்.
இதன்போது இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே. காந்தா வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் வே.மகாலிங்கம் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸவிதாரன பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.