அத்துமீறிய இந்திய மீன்பிடிப்படகுகளின்
பிரச்சினைக்கு பங்குனி மாதத்திற் குள்
தீர்வு-யாழ் மீனவர்களுக்கு அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா உறுதி மொழி.
அத்துமீறிய இந்திய மீன்பிடிப்படகுகளின் பிரச்சினைக்கு எதிர்வரும் பங்குனி மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் (23) வருகை தந்திருந்த இந்திய அணுவிஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாமுடனான கலந்துரையாடலின் பின்னர் மாவட்ட அரச அதிபர் வாசஸ்தலத்திற்கு முன்றலில் மாவட்டக் கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அப்துல்கலாமுடனான இன்றைய சந்திப்பின் போது மக்களது நலன்சார்ந்த விடயங்கள் குறித்தே அதிகமாகப் பேசப்பட்டதாகவும் அதுவே முக்கிய தேவையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதன் பிரகாரம் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் கலாம் அவர்களுடனான சந்திப்பின் முதலாவது கட்டம் இது எனவும் இரண்டாவது கட்டம் குறித்து தீவிரமாக பரிசீலித்து சாதகமான முடிவை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அமைச்சர் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டதுடன் அதற்கு அனைவரது ஓத்துழைப்பும் ஓத்தாசையும் முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே மக்களின் நலன் சார்ந்தே தாம் உழைத்து வருவதாகவும் இதன் பொருட்டு காழ்ப்புணர்ச்சியுடன் செய்திகளை வெளியிடவேண்டாமெனவும் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதன்போது யாழ். அரச அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் உடனிருந்தனர்.