அபிவிருத்தியில் ஆர்வம் கொண்ட
பிரதேசங்கள் இன்று துரித வளர்ச்சி
கண்டு வருகின்றன -
ஈ.பி.டி.பி.பாராளுமன்ற உறுப்பினர்
மு.சந்திரகுமார்
குறைபாடுகளை வெளிப்படுத்தும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு மத்தியிலும் இன்று நாம் அபிவிருத்தியை துரிதப்படுத்தி வருகின்றோம். இந்நிலையில் தமது மேம்பாட்டில் ஆர்வம் கொண்டு செயற்படும் மக்கள் வாழ்கின்ற பகுதிகள் மேலும் துரித வளர்ச்சி கண்டு வருகின்றன என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய தினம் (23) பளை நகர கிராம மக்களுக்கு வாழ்வாதார கடன்களை வழங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முற்றாக அழிந்து போன பிரதேசங்களிலேயே நாம் இன்று அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். எனவே மக்கள் தமது மேம்பாட்டில் ஆர்வம் காட்ட வேண்டும். அவ்வாறு ஆர்வமாக செயற்படும் மக்களை உள்ளடக்கிய பிரதேசங்கள் இன்று துரித வளர்ச்சி கண்டு வருகின்றன.
அத்தோடு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் அனைத்தும் கிராமமட்ட அமைப்புக்களை பலப்படுத்தி அவற்றினூடாக மக்களின் தேவைகள் இனங்காணப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. இதனால் இச்செயற்பாடு மக்களுக்கு முழுமையான பலனைக் கொடுக்கின்றது.
எனவே மக்களின் தேவைகளை சரியாக இனங்கண்டு திட்டங்களை செயற்படுத்தக் கூடிய ஆளுமை கொண்ட அமைப்புக்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறான அமைப்புக்களின் செயற்பாடே எமது அபிவிருத்தி திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்தும் உந்து சக்தியாக அமையும், அத்தோடு தமது மேம்பாட்டிற்கான உழைப்பையும் நம்பிக்கையையும் மக்கள் கொண்டிருக்க வேண்டியது அவசியம் என மேலும் தெரிவித்தார்.
பெரிய பளை வீதியினை முற்றாக புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மக்கள் உறுதியளித்தார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள்எழுச்சித் திட்டத்தின் மூலம் 38 இலட்சத்து அறுபதாயிரம் ரூபா நிதி பளைநகர் கிராம மக்களின் வாழ்வாதார செயற்பாட்டிற்காக ஓதுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட கொடுப்பனவாக இன்று 13 பயனாளிகளுக்கு கைத்தொழில் மற்றும் விவசாய செய்கைக்காக பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் அன்ரன் அன்பழகன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் விஜயகிருஸ்ணன் மீள்எழுச்சித் திட்ட அலுவலர்கள் பயனாளிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.